Mar 29, 2025

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அடுப்புகளை, பற்ற வைக்காமல் திறந்துவிட்டு, தீப்பெட்டியோடு திரும்புகிறாள். எதிரில் நிற்கும் பிள்ளைகள் முன் மண்டியிடுகிறவள், ”ரெண்டு பேரும் அம்மாகூட வந்துடுறீங்களா!?” எனக்கேட்க ”‘எங்கம்மா, தாத்தா வீட்டுக்கா?” எனக் கேட்கும் மகளையும் மகனையும் அணைத்தபடி கதறுகிறாள். பாட்டல் ராதா திரைப்படத்தில், குடி நோயாளியின் மனைவி தற்கொலைக்கு முனையும் காட்சி இது.


இன்னொரு தருணத்தில் ”அப்படியே குழந்தைங்களோடு கொளுத்திக்கலானு நினைச்சேன். அப்புறம் உன்னை மாதிரி ஆளுக்காக ஏன் சாகனும்னு தோணுச்சு!” எனும் அஞ்சலம், தாலியை கழற்றி கணவனின் கையில் வைத்துவிட்டு, ”போதுன்ற அளவுக்கு குடி. அப்படியே விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு செத்துடு. நாங்களாவது நிம்மதியா இருப்போம்” என உறுதியான வேறொரு முகம் காட்டுகிறாள். இது சினிமாவில் வரும் அஞ்சலம் முகம் மட்டுமல்ல. தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்ப தலைவிகளின் முகம்.




எதிரிகளின் மரணத்தை ஒருவர் வேண்டுவதைவிட, குடி நோயாளிகளின் மரணம், அவரை மிகவும் நேசித்த குடும்பத்தாரால் மிக அதிகமாக ஒருகட்டத்தில் வேண்டப்படுகின்றது எனும் உண்மை அவ்வளவாக ரசிக்க முடியாதது. ‘செத்து தொலைஞ்சிட்டாக்கூட நாங்க எப்படியாச்சும் நிம்மதியா இருந்துடுவோம்’ என்று பல தருணங்களில் வெகு எளிதாகச் சொல்வதைக் கேட்க முடியும்

தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் பேர் குடி நோயாளிகளாக இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அவர்களில் எழுபது லட்சம் பேர் தினமும் குடிக்கும் நிலையில் உள்ளனர். குடிப்பதால் ஆண்டுக்கு அவர்களுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை சொல்கின்றது. அது எந்தளவு ஆதாரப்பூர்வமானது எனத் தெரியவில்லை என்றாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.

பாட்டல் ராதா, டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் ஒரு குடி நோயாளியின் கதை. படத்தில் குடி மீட்பு மையம் மற்றும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA-ஏஏ) அமைப்பை முக்கியமானதாகப் பார்க்கிறேன். சமீபத்தில்தான் ஏஏ அமைப்பு குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது

2023 ஆகஸ்ட் 7-ம் தேதி காலை ஆறரை மணி சுமாருக்கு, நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது கல்லூரி நிகழ்ச்சிக்காக ஓசூர் சென்று கொண்டிருந்தேன். தேதியும் நேரமும் துல்லியமாக நினைவில் இருக்கக் காரணம், முந்தைய தினம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘வாழ்தல் அறம்’ தலைப்பில் பேசியிருந்தேன். அந்த உரையைக் கேட்டுவிட்டுத்தான் அவர் அழைத்திருந்தார். சில வருடங்களுக்குப் பிறகு பேசுகிறோம். உரை குறித்து, தமக்கு நெருக்கமாக உணர்ந்தது குறித்துப் பேசியவர், தன் கடந்த காலக் கதையைச் சொல்கிறார்.

நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது யாரையும் சந்திப்பதையோ, யாருடனும் உரையாடுவதையோ தவிர்ப்பவன் நான். மனசு முழுக்க நிகழ்ச்சி குறித்த கவனம்தான் இருக்கும். ஆனால் அன்று பேசினேன். அந்த உரையாடல் பின்வரும் நாட்களில் அற்புதங்கள் செய்யப்போவதை அப்போது அறிந்திருக்க நியாயமில்லை.

அவருக்கு ஏறத்தாழ சம வயதுதான். பள்ளிப் படிப்பு, குடும்பச் சூழல், நட்புகள், படிப்பை தொடராமல் வேலைக்குச் சென்றது, தொழில், திருமணம் எனும் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான காலத்தில் குடிப்பழக்கம் ஏற்பட்டிருக்கின்றது. குடி நோயாளியாகவும் மாறியிருக்கின்றார். சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள், இழப்புகள் ஏராளம். எதுவும் அத்தனை எளிதில் ஜீரணிக்க முடியாதவை.

பலபேர் தனித்தனியே அனுபவிக்க வேண்டிய சவால்கள், வேதனைகள், அவமானங்கள், போராட்டங்களை குடி நோயாளிகள் தனி நபராக அனுபவித்து விடுகின்றனர் என்பது ஒருபோதும் அவர்களுக்குப் புரிவதில்லை. புரியும்போது பலருக்கும் காலம் கடந்து விடுகின்றது.

ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. அவருடைய கடந்த காலம் இன்னும் மிச்சம் இருந்தது. நான் கிருஷ்ணகிரி தாண்டியிருந்தேன். மாலை பேசிக்கொள்ளலாம் என அப்போதைக்கு தொடரும் போட்டோம். பாதிக்கப்பட்டதைக் கேட்டாயிற்று, மீண்டது எப்படி எனும் ஆவல் எனக்குள் ஊஞ்சலாடிக்கொண்டேயிருந்தது.

மாலை உரையாடல் தொடங்கியது. பல அனுபவங்களைப் பகிர்ந்து இறுதியாக, குடியின் உக்கிரத்தில் இருந்தபோது ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (ஏஏ) கூட்டம் ஒன்றிற்கு அவர் அழைக்கப்பட்டு, அதன் வாயிலாக மீண்டதைச் சொன்னார்.

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் குறித்து மேலோட்டமாகக் கேள்விப்பட்டதுண்டு. அவர் மூலமாக விரிவாக அறிந்துகொள்கிறேன். ஏஏ குடி நோயிலிருந்து மீண்டவர்கள், மீள விரும்புகிறவர்கள் ஒன்றிணைந்து செயல்படும் உலகளாவிய அமைப்பு. அவர்கள் இயங்கும் முறை, யாரெல்லாம் அதில் உறுப்பினர்கள் என்பதுள்ளிட்ட விபரங்களை அவர் கூறவில்லை. அந்த அமைப்பிற்குள் சென்று, ஒட்டுமொத்தமாக மீண்டு, அதில் தற்போது அவரும் பங்களிப்பதைச் சொன்னார். அவர் சென்றிருந்த எல்லையிலிருந்து, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் முற்றிலும் சிதைந்திருந்த நிலையிலிருந்து மீண்டு வந்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.

ஏஏ நிகழ்விற்கு நீங்கள் ஒருமுறை வந்து பாருங்கள் என்று அழைத்தார். ஏறத்தாழ அனைத்து பெரு நகரங்களிலும் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு, குறிப்பாக ஈரோட்டில் அனைத்து நாட்களிலும் கூட்டம் நடைபெறுவதாக் கூறினார்.

சில மாதங்கள் கழித்து, நெருங்கிய உறவினர் தம் உறவினர் குடி நோயாளியாக இருப்பதைக் கூறி சைக்கியாட்ரிஸ்ட் யாரையேனும் பரிந்துரை முடியுமா எனக் கேட்க, எனக்கு ஏஏ நினைவுக்கு வந்தது. நண்பரை அழைத்து, பாதிக்கப்பட்டவரின் நிலைமையைச் சொல்லி, சரி வருமா எனக்கேட்டேன். வரச் சொல்லுங்க சரியாகிவிடுவார் என நம்பிக்கை அளித்தார்.

ஆனால், எனக்கு நம்பிக்கை வரவில்லை. காரணம், அவர் காலையில் நான்கு மணிக்கே குடியைத் தொடங்கிவிடுகிறவர். மாட்டுக் கொட்டகை, மோட்டர் ரூம், குப்பை மேடு, புதர், வாழை, இளம் தென்னை மரங்களின் மட்டைகள் என புழங்கும் இடமெங்கும் பாட்டில்களை பதுக்கி வைத்து குடிப்பவர். குடும்பத்தினர் தேடித்தேடி வேட்டையாடினாலும், அவர் தொடர்ந்து வைத்துக் கொண்டேயிருப்பார். நாள் முழுக்க போதையில் இருப்பவர். உறவினரிடம் ஏஏ குறித்து நான் கேள்விப்பட்டதைக் கூறி, கூட்டத்திற்குச் செல்வாரா எனக் கேட்டேன்.

அவருக்கும் முழு நம்பிக்கை இல்லையென்றாலும், அந்தக் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார். எப்படியாவது குடி நிறுத்தப்படவேண்டும் என்பதால், எதையும் செய்யத் தயாராக அவர்கள் இருந்தனர். அவரிடமே ஒப்புதல் வாங்கி ஞாயிறு மாலை செல்லவதாக, முதல் நாள் இரவு தெரிவித்தனர். நான் நண்பரிடம் ஞாயிறு அன்று கூட்டம் நடக்கும் இடம் மற்றும் சந்திக்க வேண்டியவரின் விபரங்கள் பெற்று வழங்கினேன்.

அடுத்த நாள் மாலை செல்லலாம், அவருக்கு நிச்சயம் நல்லது நடக்கும் எனும் மெல்லிய நம்பிக்கையோடு குடும்பம் உறங்கச் சென்றது. ஆனால் விடியல் அவர்களுக்கானதாக இல்லை. காரணம் விடியும் முன்பே அவர் ஆரம்பித்துவிட்டார். குடும்பம் சோர்ந்து போனது. ஏஏ நண்பரை அழைத்து நடந்ததைச் சொன்னேன். சற்றும் சுணங்காமல் அடுத்த கூட்டத்திற்கு வர வையுங்கள் என்றார்.

குடும்பம் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றது. அவரே என் உறவினரை அழைத்து அடுத்த கூட்டத்திற்கு போகிறேன் என ஒப்புதல் அளித்திருக்கிறார். குடும்பம் அழைத்துச் சென்றது. என்னவோ மாயம் நிகழ்ந்தது. குடியை நிறுத்தி கூட்டங்களுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். அங்கு அவருக்கு மிக நெருங்கிய நட்புகள் அமைந்தன. தினமும் ஃபோனில் பேசுவது, கூட்டங்களுக்கு கொண்டாட்டமாக செல்வது என அவருக்கு புதியதோர் உலகம் அமைந்தது. குடும்பம் மிகப் பெரிய நிம்மதியை அடைந்தது.

பிறிதொரு தருணத்தில் ‘ஏன் அந்த முதல் ஞாயிற்றுக்கிழமை குடித்தீர்கள்?’ எனக் கேட்டபோது, ‘எப்படியும் குடியை விடச் சொல்லுவாங்க, கடைசியா ஒருமுறை குடிச்சிட்டு விட்டுடலாம்னு குடிச்சேன்!’ எனச் சிரித்திருக்கிறார். மது இல்லாமல் முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் இருக்கிறார்.

இன்னொருவர், ஒரு சாமானியன் சினிமாவில் வெற்றி அடைவதைப்போல் இருபது ஆண்டுகளில் யாரும் கற்பனை செய்ய முடியாத வளர்ச்சியடைந்தவர். அதில் பிற்பாதியில் மதுப்பழக்கம் வளர்ந்தது. அனைத்தும் முதலீடாக இருந்ததால் பொருளாதாரத்தில் சிக்கல் இல்லை. குடும்பத்தில், உறவுகளில் காயம் ஏற்பட்டது. பிள்ளைகள் தவித்தனர். இரண்டு முறை டீ-அடிக்‌ஷன் மையத்திற்குச் சென்றும், குடியை விடமுடியவில்லை.

அவரை யாராலும் சமாளிக்க முடியவில்லை. இரவுகளில் அவரின் ஃபோன் அழைப்புகளைக் கண்டு அனைவரும் எரிச்சல் அடைந்தனர், கூடவே கேவலாமாகப் புறக்கணித்தனர். உச்சபட்சமாக பள்ளியில் படிக்கும் மகனோடு மிகக் கடுமையான சண்டை ஏற்பட்டது. உடல் நிலையிலும் கணிசமான அச்சம் ஏற்பட்டது.

எனக்குத் தெரியவந்தபோது, அந்த ஏஏ நண்பர் மூலம் தமிழகத்தின் பெரு நகரம் ஒன்றில் உள்ள ஏஏ ஆர்வலர் ஒருவருடைய தொடர்பைப் பெற்று வழங்கினேன். அவரை சென்று சந்தித்தனர். அவர் அரசு உயர் பதவியில் இருந்தவர், குடியிலிருந்து மீண்டவர். சுமார் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு, கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஒப்புதல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினர்.

வரும் வழியில் எதுவும் பேசமால் ஆழ்ந்த யோசனையில் இருந்தவர், அடுத்த நாள் காலை, இனி குடிக்கமாட்டேன் என வீட்டில் அறிவித்திருக்கிறார். அதனைக் கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஒரேயொரு உரையாடலில் இப்படி நிறுத்துவது முடியுமா, நிலைக்குமா எனும் சந்தேகம் இருந்தது. ஆச்சரியம் பேராச்சரியமானது. பல மாதங்களாக தொடர்ந்து குடிக்காமல் இருக்கிறார்.

குடி நோயாளியாக இருக்கும் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது, ‘குடியை விட்டுடு!’ என அறிவுறுத்தியிருக்கிறார். அவர் ஆச்சரியமாகப் பார்க்க “இதெல்லாம் எப்படி உருவாக்கினேனு உனக்குத் தெரியும். ஒருகட்டத்தில் இது எதுவுமே என் அடையாளமாக இல்ல. குடிகாரன்தான் என் அடையாளமாக இருந்துச்சு. ஊர்ல யார் மதிச்சு, மதிக்காம என்ன, என் பையன் என்னை மதிக்கல. எப்படியாச்சும் நிறுத்தி தொலையனும்னு நினைச்சப்ப, ஒரு கூட்டத்துக்கு வான்னு சொல்லி ஒருத்தர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அவரு ரெண்டு மணி நேரம் பேசினார். நல்லதுக்குத்தான் பேசினார். பேசினது காதில் விழுந்துச்சு. நான் யாரு, இந்த ஆளெல்லாம் அட்வைஸ் பண்ற நிலையில நான் இருக்கேனேனு மட்டும்தான் மனச அறுத்துச்சு. அப்ப முடிவு பண்ணினேன். நிறுத்திட்டேன். இப்பதான் என் அடையாளம் எனக்கே தெரியுது” என்றிருக்கிறார்.

உடைவதற்கும் உயர்வதற்கும் ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு செயல், ஒரு நிகழ்வு போதும் எனும் வரிதான் நினைவுக்கு வருகின்றது.

பாட்டல் ராதா படத்தில் ஏஏ கூட்டங்கள், வழிமுறைகள் குறித்து ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டதும், இந்த இரண்டு பேரின் மாற்றங்களுக்கு நினைவுக்கு வந்தன. நான் இதுவரை ஏஏ கூட்டத்தில் கலந்துகொண்டதில்லை. நண்பர் வந்து பார்க்கச் சொல்லி அழைத்துக்கொண்டேயிருக்கிறார். மேலே குறிப்பிட்ட இரண்டு பேரின் மாற்றங்களும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

தேவையுள்ளோர், அந்தந்தப் பகுதியில் நடக்கும் ஏஏ அமைப்பின் நிகழ்வுகளை விசாரித்து, தங்களுக்கு சரி வரும் என்று உணர்ந்தால், நம்பிக்கையிருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். குடி நோயிலிருந்து மீள்வது சிலருக்கு உடனே நிகழலாம், சிலருக்கு ஆலோசனை, உளவியல் ஆதரவு மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.

குடியில் சிக்குண்டு தவிப்போரைப் புறந்தள்ளாமல், பாதிக்கப்பட்டவர்களாக, நோயாளிகளாகக் கருதி, அவர்களுக்குப் பொருத்தமான, சரியான உதவியைப் பெற்றுக் கொடுத்துவிடுதல் அனைவருக்குமான விடுதலையாக இருக்கும்.

- ஈரோடு கதிர்



.

Mar 23, 2025

நிகழ்காலத்தின் புன்னகை


 ஒவ்வொருவருக்கும் நட்பும் உண்டு பகையும் உண்டு. சில நட்புகள் எப்படி உருவானது என்றே தெரியாது, அதேபோல்தான் சில பகைகளும். ஏன், எப்படி, எதற்காக உருவானது எனத் தெரியாமலே அதன் போக்கில் வளர்ந்து நிற்கும். பகை என்றதும் நாடுகளுக்கு இடையில் நிகழும் யுத்தம், மனித உறவுகளுக்கு இடையில் உருவாகும் பிரிவு என்றெல்லாம் எளிதாகத் தோன்றிவிடலாம். இது அம்மாதிரியான பகை குறித்து அல்ல. தம்முடன் மற்றும் தமக்குள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பகை குறித்தே.


தமக்குள் பகையா எனும் கேள்வி வரலாம். ஒருவர் நினைப்பதற்கும் - செய்வதற்கும், விரும்புவதற்கும் - அடைவதற்கும், இருப்பதற்கும்- வாழ்வதற்கும் இடையே இயல்பாக ஏற்படும் முரண், தொடர்ந்து வளரத் தொடங்கினால் அது வேர் விட்டு வளர்ந்து பகையென கிளை பரப்பிவிடும்.

சற்று சிந்தித்துப் பார்த்தால், நமக்குள் ஏற்பட்ட முரண்கள், முரண்களாக மட்டுமே இருக்கின்றனவா அல்லது பகைகளாக மாறிவிட்டவனா என்பது புரிந்துவிடும். பலர் என்னிடம் உரையாடும்போது, அவர்களை அறியாமல் வெளிப்படுத்துவது, அவர்களுக்கு அவர்களோடு இருக்கும் பகை குறித்துதான். தாம் வளர்த்து வைத்திருப்பது தம்முடனான பகை என்பதை அறியாமலே பலரும் இருப்பதுண்டு. 

உரையாடும் எல்லாரிடமும், அதனை வெளிப்படையாகப் புரியும்படி உணர்த்திவிட முடிவதில்லை. காரணம், அதனைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு நேரம் இல்லை என்பதாகவே உணர்த்துவார்கள். நேரம் இல்லை என்பது மிக எளியதொரு தப்பித்தல். புரிந்துகொள்ள முடியாதது என்பது பெரும்பாலும் நேரம் தொடர்பானது கிடையாது. மனம், அறிவு மற்றும் தேடல் தொடர்பானது.

சமீபத்தில் ஒரு மாலை நேரம், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றினை முடித்துவிட்டு, வாகனத்திற்கு வந்தேன். வாகனத்தை இயக்கும் முன், சில மணி நேரமாக அணைத்து வைத்திருந்த இணையத்தை உயிர்ப்பித்தேன். இடைப்பட்ட நேரத்தில் அனுப்பப்பட்டு காத்திருப்பில்  இருந்த சொற்கள் வந்து விழத் தொடங்கின. சொற்கள் என்பவை செய்திகள், தகவல்கள், விசாரிப்புகள், கேள்விகள் மற்றும் பதில்கள் என பல வடிவம் கொண்டவை. அவற்றில் தேவையில்லாதவை சில. ஆனாலும் அவை நம்மை வந்து சேரத்தானே செய்யும். அப்படி வந்து சேர்வதை எந்த மட்டத்தில் நிறுத்துவது என்பது அவரவர் தெரிவு. வந்திருந்தவற்றை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டவைகளில் ஏறத்தாழ எல்லாமே வீட்டை அடைந்த பிறகு, வாசித்தால் போதும். ஆனால் ஒன்று மட்டும் கவனத்தை ஈர்த்தது. அது சில வாரங்களுக்கு முன்பு உரையாடல் தொடங்கியவரிடமிருந்து வந்திருந்தது. திறந்தேன்.

”சார் கொஞ்சம் நாளா பல நேரங்களில் வாழ்க்கையே தோல்வி அடைந்துவிட்டது அப்படின்னு பயமா இருக்கு சார். இந்த எண்ணம் போவதற்கு என்ன செய்வது சார்!”

அவருக்கு சவால் மற்றும் தோல்வி இருப்பது உண்மைதான். முதல் வரியை மீண்டும் மீண்டும் வாசித்தேன். நேரம் இருந்தால் பேசலாம் என்று பதிலளித்துவிட்டு புறப்பட்டேன். சில நிமிடங்களில் அழைப்பில் வந்தார். அவர் அனுப்பியது குறித்து எதுவும் கேட்காமல், சொல்லாமல் பொதுவான உரையாடலாக ஆரம்பித்தேன்.

அவர் அனுப்பியது குறித்து எதுவும் கேட்காமல், பொதுவான என்னுடைய கேள்விகளும், , அதற்கு வந்த பதில்களுமென உரையாடல் தொடர்ந்தது. தாம் அனுப்பியது குறித்து நான் நேரடியாக எதுவும் கேட்கவில்லையே என்ற சிந்தனை அவருக்குள் இருந்திருக்கலாம். அதை உரையாடுவதுதான் என் நோக்கமாக இருந்தாலும், அதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்தவாறு, அதனைத் தொடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். சில காலமாக அவரைக் கவனித்த வரையில் இரண்டு செயல்களை நான் உணர்ந்திருந்தேன். 

ஒன்று, தன்னை தொடர்ந்து கடந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட பருவத்திற்குள் புதைத்துக்கொள்வது. குறிப்பாக அவருடைய குழந்தைப் பருவம். இன்று வாழும் சூழல் அந்தக் குழந்தைப் பருவத்திற்கு முற்றிலும் நேரெதிரானது. இது அவருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானதுதான். இந்த நிகழ்காலம் அவருக்கு அவ்வளவாக பிடிக்காமலும் இருக்கலாம். என்னிடம் பகிர்ந்தவரையில் அவரின் நிகழ்காலத்தில் சில இயலாமைகள், தோல்விகள் மற்றும் காயங்கள் உண்டு. சொல்லப்படாதவை இன்னும்கூட இருக்கலாம். 

அப்படியான காரணங்களால், நிகழ்காலத்தில் இயங்குவதைவிட, நிகழ்காலத்தை எதிர்கொள்வதைவிட, ஏதோ ஒருவகையில் கடந்த காலத்தின் அவருக்குப் பிடித்ததொரு தருணத்தில் புதைத்துக்கொள்வது சற்றே சமாதானத்தைக் கொடுத்திருக்கலாம். இம்மாதிரியான சமாதானம், ஆசுவாசங்களுக்காக செய்ய வேண்டாத பலவற்றை நாம் செய்திருப்போம் அல்லது செய்து வருவோம்.

அவரிடம் நான் அறிந்த இன்னொன்று, தன்னுடைய நிகழ்காலத்தை வெளிப்படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள். அவற்றில் ஒருவித இயலாமை, சோகம், இறுக்கம், புதிர் தன்மை, தெளிவற்ற நிலை, இருண்மை தனித்தோ பிணைந்தோ இருப்பதுண்டு. பெரும்பாலும் வலிக்குள் அமிழ்த்தி, இருளைக் கயிறாக்கி இழுக்க முயற்சிப்பதுபோல் இருக்கும். அங்கிருந்து அடையாளமற்ற ஏதோ ஒன்றுக்கு தகவல் பகிரும், சவால் விடும் முனைப்பிருக்கும்.

அவரின் அந்த இரண்டு இயல்புகளையும் தொடாமல், உரையாடலைத் தொடர்கிறேன். உரையாடல் என் வசம் நீடிக்க, சிறிது நகைச்சுவை மற்றும் கேள்விகளைக் கொண்டு நகர்த்துகிறேன். உரையாடல் பலம் அடைந்ததும், அவர் எதிர்பாராத கணத்தில் நிகழ்காலத்தைவிட கடந்த காலத்தில் உழல்வதில், ஒருவித இருண்மைக்குள் தன்னை அடைப்பதில் இருக்கும் வசதிகள் யாதென கேட்டேன். சரியாக நாடி பிடித்துக்கேட்டது, சற்றே வியப்பினையோ, மெல்லிய அதிர்ச்சியையோ ஏற்படுத்தியிருக்க வேண்டும். 

எதிர்பார்த்தவிதமாகவே பதில்கள் வந்தன. எதிர்பார்த்த விதமாக ஒன்று அமைகின்றதென்றால் அலைவரிசை இசைவாகிறது என்றுதானே பொருள். பதில்களிலிருந்து கவனமாக, ஆங்காங்கே கேள்விகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். சரியான கேள்விகளை இனம் கண்டடைவது உரையாடல் கலையில் முக்கியமானது.

வாழும் காலம் எத்தகையதெனினும், அதனை முற்றிலுமாகப் புறக்கணித்து விடாமல், எவ்வகையிலேனும் எதிர்கொள்வதே சரி என உணர்த்துவதே என் நோக்கம். காரணம் நிகழ்காலம் என்பது பூரணமான உண்மை. ஓர் உண்மை நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக அதனை மறைப்பது, புறக்கணிப்பது மற்றும் இகழ்வது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று. 

அந்த பிடிக்காத உண்மைக்கு எதிர்காலம் சார்ந்த கனவின் வர்ணங்களை சிலர் மட்டுமே பூசுவதுண்டு. பெரும்பாலானோர் நிகழ்காலத்தின் மீது கடந்த காலத்தினை ஒப்பனைகளாகவும், முகமூடிகளாகவும்  அணிவித்து ஒருவிதமாக ஆசுவாசம் அடைந்து விடுவதுண்டு. எதிர்காலத்தின் வர்ணம் பூசுவதுகூட சில நல்ல விளைவுகளுக்கு வாய்ப்பாக அமைவதுண்டு. ஆனால் கடந்த காலத்தில் திருப்தியடைவது நிகழ்காலத்தையும் சிதைக்கும், எதிர்காலத்தையும் நோய்மையானதாக்கும்.

ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைகளை ஒப்புக்கொள்ள மறுக்கும்போது சிந்தனைகள் படபடக்கும். அது சிந்தனைக் கொந்தளிப்பாகவும் மாறும் ஆபத்துண்டு. ஏதோவொன்றை செய்யத்துடிக்கும். அதன் காரணமாக, நிகழ்காலத்தை சொற்களாக்கி, அதன்மீது ஏற்கனவே இருக்கும் ஒவ்வாமையை இருளாக்கி வர்ணமாகப் பூசும்போது, நிகழ்காலம் எளிதாக இருண்மையடைந்துவிடும். இயல்பாகவே அவற்றிலிருந்து இயலாமையும், சோகமும், பரிதாபமும் துர்நாற்றமாக வீசத் துவங்கிவிடும். அதனை நுகர்வதில் நம்மையறியாமல் ஒரு குரூர பிடிப்பு உருவாகிவிடும். நாம் நாமாக இல்லாமல் வேறொன்றாக மாறியிருப்போம். அப்படி வேறொன்றாக மாறுவதை நம்மோடு நாம் பகையில் இருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

மெல்ல அவருடைய குழந்தைப் பருவ முகமூடியையும், சோக இழையோடும் சொல் வங்கியையும் மாற்றி மாற்றித் தொடுகிறேன். ஒருவேளை அப்படியில்லாமல் வேறு மாதிரியாக இருக்க வேண்டுமென்றால், ‘எப்படி இருந்தால் சரியாக இருக்கும்!’ எனும் கேள்விகளைத் தொடுக்கிறேன். அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லில் பதில் தந்துவிட முடியாது. நீண்ட பதில்கள் அளிக்கும்போது அந்தப் பதில்களை உள்ளுக்குள் ஒருமுறை நிகழ்த்துவது அல்லது பயிற்சி செய்வது நிகழும். அந்த நிகழ்த்தலும், பயிற்சியும் அந்தந்த கணங்களில்  ஒருவித வாழ்தல்தான்.

அவரின் கடந்த கால நிலைத்தல் மற்றும் சோக இழையோடும் சொல் வங்கி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நிகழ்காலம் எனும் உண்மையை திடமாக, நேர்மையாக எதிர்கொள்வது ஏன் சிறந்தது என்பதை உணர்த்துகிறேன். தாமே தம்மோடு பகைத்திருந்ததை எளிய சொற்களில் ஒப்புக்கொள்கிறார். சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் பயண நேரத்திற்குள் அந்த உரையாடல் நிறைவடைந்து விடுகின்றது.

ஒற்றை உரையாடலின் வாயிலாக ஒருவர் முற்றிலும் மாறிவிடுவார் என்று மட்டுமே நான் நம்பி விடுவதில்லை. மாற முடியும் என்பதற்கான விடை மட்டும் ’பளிச்’ என பல நேரங்களில் கிடைத்துவிடும்.  

வேதியியல் பரிசோதனையில் வேதிப்பொருட்களின் அளவை, வர்ணச் சேர்க்கையில் வர்ணங்களின் அளவை ஒவ்வொருமுறை மாற்றும் போதும் ஒவ்வொரு விதமான விளைவு, நிறம் கிடைக்கும். அவை நமக்கு சரியானதாகவும் இருக்கலாம், சரியற்றதாகவும் இருக்கலாம். எந்தவொன்றைச் செய்தாலும், நிச்சயம் அதற்கென்று ஒரு விளைவு இருக்கும். 

பிறரிடமோ, தம்மிடமோ பகை கொள்தல் எளிது, களைதல் கடினம். ஆனால் இயலாதது அல்ல. சற்றே விழித்துக்கொண்டால், சரியான நபரை, தேவையான நேரத்தில் துணை கொண்டால் வாழ்வின் போக்கை ஓரளவு தீர்மானிக்க முடியும்.

உரையாடல் நிறைவடைந்த சில நிமிடங்களில் அவரிடமிருந்து, செய்தி ஒன்று வருகின்றது. திறக்கிறேன். ”சார் கொஞ்சம் நாளா வாழ்க்கை சரியாக போய்க் கொண்டிருக்கிறது சார். இன்னும் மென்மேலும் முன்னேறும் என்று நம்புகிறேன்!”

நிகழ்காலம் புன்னகைத்தது. அந்த நாள் அர்த்தமுள்ளதாக மாறியது.

ஈரோடு கதிர்

Mar 7, 2025

அந்த வெகுமதிக்கு இன்னொரு பெயருண்டு

தமக்கு ஒவ்வாத, தம்மை சற்றும் முன்னகரவிடாமல் இழுத்துப் பிடிக்கும் எந்த ஒன்றிலுமிருந்து விடுபடுவது மிகத் தேவையான ஒன்று. ஆனால் அப்படிப் பிடித்து வைத்திருக்கும் ஏதோவொன்றிலிருந்து விடுபடாமல் சுமப்பவர்கள், அதே இடத்தில் தேங்கியிருப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. காரணம் தாம் நம்பிய, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட எந்தவொன்றிலிருந்தும் விடுபடுதல் அத்தனை எளிதல்ல. 

"கிட்டாதாயின் வெட்டென மற" எனும் ஔவையின் வாக்கு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எத்தனையோ இடங்களில் எளிதில் விடுபட உதவிய மந்திரம் அது. சொல்வதற்கு எதுவும் எளிதுதான். ஆனால் நிகழ்த்துவதென்பது அத்தனை எளிதல்ல என்பது திருவள்ளுவர் கூறியதை வைத்துப் பார்த்தால் இரண்டாயிரமாண்டு அனுபவம் நமக்கு. 

தொழில், வேலை, பணம், பதவி, புகழ், உறவு உள்ளிட்ட பலவற்றில் ஏதோவொரு தருணத்தில் விடுபட வேண்டிய, கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்போது மிகச் சரியான, அந்தச் சூழலுக்கு உகந்த முடிவெடுக்க முடியாமல் தடுமாறியதால் ஏற்பட்ட விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும்.

ஏதோவொரு தருணத்தில் எல்லாமும் நமக்கு இணக்கமாக, நமக்கென்றே வாய்த்ததாக இருப்பவை, இன்னொரு தருணத்தில் ஒட்டுமொத்தமாக எதிர்நிலை எடுத்திருக்கும். இணக்கமாக இருந்ததன் கதகதப்பை அனுபவித்ததுபோல், எதிர்நிலைக்குச் சென்றதின் வெம்மையை அத்தனை எளிதில் எதிர்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலுவதில்லை. அதற்கு மிகப் பெரிய திடமும், பக்குவமும், நிதானமும், புரிதலும் தேவைப்படுகின்றது. அந்த இடத்தில்தான் பெரும்பாலும் தடுமாறி, உருமாற நேரிடுகின்றது.

சில தொழில்களை மிகப் பெரும் நம்பிக்கையுடன் ஆரம்பித்திருப்பார்கள். ஆரம்பித்தபோது நன்றாக இருந்திருக்கும். காலவோட்டத்தில் பெரிய காரணங்கள் ஏதுமின்றி, சில தொழில்கள் தம் வேகத்தை, திறனை இழந்துவிடும். தொடங்கியவரின் திறமைக் குறைவு, உழைப்புக் குறைபாடு அதற்குக் காரணமாக இருக்க வேண்டியதில்லை. அந்தத் தொய்வு காலத்தின் விளைவு. ஆனால், விரும்பி ஆரம்பித்த அந்தத் தொழில் மீது ஏற்பட்டிருந்த பிணைப்பு, மாற்றி யோசிக்கவோ, சற்று விலகி நின்று பார்க்கவோ அனுமதிக்காது. அதன் காரணமாக விடுபடவோ, வெளியேறவோ தெரியாமல் தொடர்ந்து அதற்குள்ளாகவே உழன்று கொண்டிருக்க வேண்டி வந்துவிடும்.

எதன் ஒன்றிலும் உழல ஆரம்பித்துவிட்டால் நூற்கண்டின் ஒரு முனையை எடுத்துக்கொண்டு மிகக்குறுகிய வட்டத்திற்குள் குறுக்கும் மறுக்கும் ஓடுகின்றோம் என்று பொருள். அவிழ்க்க முடியா சிக்கல் விழுவதைத் தவிர வேறென்ன நிகழும்?. சிக்கல்கள் மிகும்பொழுது, சிக்கல்களால் ஏனையவை முடங்கும்பொழுது, தாறுமாறாக அறுத்தெறிவது தவிர வேறென்ன வழி?

ஏதோவொரு காலத்தில் வேலை கிடைத்திருக்கும், கடையை ஆரம்பித்திருப்பார்கள். ஓர் எல்லையைத் தாண்டி வளரவோ, விரிவடையவோ வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தாலும், அதனை ஒப்புக்கொள்ள ஏராளமான தடைகள் உண்டு. ’ஏன் வேலையை விட்டுட்டே? ஏன் கடையை மூடிட்டே?’ எனும் கேள்விகள் வெகுவாகத் தாக்கும் சாத்தியமுண்டு. அந்தத் தாக்குதல் குறித்த அச்சமே பெரும் மனத்தடையை ஏற்படுத்தும். அதே சமயம், அதுவரை செய்த வேலை அல்லது வியாபாரம் மிகவும் பழகிப்போன, வசதியான ஒன்றாக மனதிற்குள் படிந்து போயிருக்கலாம். குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வளர்ச்சியில்லாத நிலையில், அதிலேயே தொடர்வதா அல்லது வேறொன்றிற்கு மாறுவதா என முடிவெடுக்க முடியாமல், நிலைமையைக் கடினமாக்கிக்கொள்வோர் மிகக் கணிசமாக உண்டு. 

தொழில், வேலை, வியாபாரம் ஆகியவையாவது வாழ்க்கையோடு மிகுந்த தொடர்புடையதெனச் சொல்லலாம். நம்மைச் சுற்றிலும் பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. தொழில்சார் அமைப்புகளும் உண்டு, சேவை அமைப்புகளும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து கிளை பரப்பிய சில சேவை அமைப்புகள், சங்கங்கள் நம் மக்களிடையே பிரபலமாக இருக்கின்றன. அதன் வெவ்வேறு நிலைகளின் தலைமைப் பொறுப்புக்கு வருகின்றவர்களை உற்றுக் கவனித்துப் பாருங்கள். சிலர் தம் திறன் என்ன, தம்  இடம் எதுவெனத் தெளிவாக இருப்பார்கள். பலருக்கு அதுவரையிலும் குறிப்பாக தம் குடும்பம் மற்றும் சுற்றத்தில் கிடைக்காததொரு பதவி மற்றும் அங்கீகாரத்தை இம்மாதிரியான அமைப்புகள் எளிதில் வழங்கிவிடும். அதுவொரு போதையாகத் தழுவிப் பிணைந்துகொள்ளும். தொடர்ந்து அதீதமாக ஈடுபடுவது, அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொள்வது, விழாக்களைப் பெரும் பொருட்செலவில் ஏற்று நடத்துவது என தன் பிடிக்குள் மெல்ல மெல்ல அந்த அமைப்புகள் மனிதர்களை கபளீகரம் செய்யும். இதற்காகப் பல லட்சங்களை இன்னும் சொல்லப்போனால் கோடிக்கணக்கான ரூபாய் வரை விரயம் செய்தவர்களைக்கூட அறிவேன். அதன் காரணமாக தொழில், குடும்பம் மற்றும் உறவுகள் ஆகியவற்றின் மீது குறைந்தபட்ச கவனம்கூட செலுத்தமுடியாமல் முடங்கி, மிகக் கணிசமான இழப்பினை சந்தித்தவர்கள் உண்டு.

குடும்ப உறவுகள் குறிப்பாக திருமண உறவுகளில் விழும் முடிச்சுகள் அத்தனை எளிதில் அவிழ்க்கப்பட முடிவதில்லை. தமக்குத் துளியும் பொருந்தாத, ஒருபோதும் நிம்மதியை உணர்ந்திடாத இருவர், ஒரே அறைக்குள் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இங்குண்டு. அதிலிருந்து விடுபடவேண்டிய நினைப்பே இல்லாதவர்கள் பலர் உண்டு.




மிகத் தன்மையான குடும்பம் அது. ஒரே மகளுக்குத் தேடித்தேடி மாப்பிள்ளை பார்த்து வெகுசிறப்பாகத் திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் பிள்ளைகளின் வாழ்வு அழகியதாகவே தோன்றியது. சில மாதங்கள் கழிந்து, கற்பனை செய்திட முடியாத மாதிரியான சிக்கல்கள் முளைக்கத் தொடங்கின. ஒருகட்டத்தில் பிள்ளைகளின் உறவு தொடராமல் இருப்பதுதான் நல்லது எனும் முடிவுக்கு எல்லோருமே வருகின்றனர். பெரிய அளவிலான பாதிப்புகள் பெண் பக்கம்தான் விளைந்தன. எனினும் பெண்ணின் அப்பா மிகத் தெளிவாக, நிதானமாக, தேவையான, தங்களுக்கு உகந்த முடிவினை தைரியமாக எடுக்க முனைந்தார்.

உறவுகளாய் இணையும்போது இருக்கும் பிரியம், பரவசம், அன்பு உள்ளிட்ட எதுவுமே பிரியும்போது இருக்காது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனாலும் சம்பந்தி வீட்டாரிடம் ஆச்சரியப்படும் வகையில் மிக நிதானமான உரையாடலைத் தொடர்ந்து தக்க வைத்திருந்தார். ’எப்படியும் பிரிவுதான் இருவருக்கும் நல்லது, கீறல்கள் காயங்கள் எதுவுமின்றி பிரிந்துவிடுவோம். யார் குறித்தும், குற்றம் சொல்வதோ, புகாரோ வேண்டாம். பிரிகின்ற இருவருமே அடுத்ததொரு வாழ்க்கைக்குள் செல்ல வேண்டும். அதனை மனதில் வைத்து எதுவும் சங்கடமின்றி இயல்பாக விலகிட வழி வகுப்போம்’ என்பதை மிகத் தெளிவாகவும், திடமாகவும் சொல்லிவிட்டார். 

பிரிவும் அவ்விதமே நிகழ்ந்தது. இவருக்கு இருந்த நிதானமும், பக்குவமும், தெளிவும் எதிர்தரப்பிற்கு இல்லை. அப்படியே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாதுதானே!? ஆங்காங்கே அவர்கள் சொன்னதாக ஏதேதோ காதுகளுக்கு வந்தன. மூன்றாம் மனிதர்கள் கூறிய எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. அடர் மௌனம் காத்தார்.  மகளை இதிலிருந்து மீட்டெடுத்து, அவள் மனச் சமநிலை அடைந்ததும், இன்னொரு சரியான வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட வேண்டுமென்று தீர்க்கமாக இருந்தார். கீறல்கள் இன்றி மகள் விடுபட்டாள். 

அவர்களின் நெருக்கடியான காலகட்டத்திலும் பேச நினைத்திருந்தேன். சூழலும் வாய்ப்பும் அமையவேயில்லை. அத்தனையும் எனக்கு மிக மேலோட்டமாக அவ்வப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மகளின் வாழ்க்கை முறிந்த வலி, வேதனை, பதட்டம் ஆகியவற்றிலிருந்து மீண்டு, மகளின் புதிய வாழ்க்கை குறித்து ஒருவித நிம்மதியோடு இருந்தவர்களிடம், ஆற அமர அமர்ந்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அவர்களாகவே கடந்து வந்த அந்தக் கொடூரமான காலத்தைப் பேச ஆரம்பித்தனர். நானாக எதுவும் கேட்கவில்லை. அவர்களுக்கு வெளிப்படுத்தத் தோன்றியிருக்கலாம். தங்கள் மனதைக் கீறி எல்லாவற்றையும் கொட்ட ஆரம்பித்தனர். இதுவரை மூடப்பட்டிருந்த புண் திறக்கப்பட்ட வீச்சம் அவர்களின் பேச்சில் இருந்தது. சீழ் வெளியேறியதை உணர்ந்தேன். நிதானமும், தெளிவும், திடமும், நம்பிக்கையும் எத்தனை முக்கியம் என்பதை இன்னொருமுறை உணர்ந்துகொண்டேன். அவர்கள் கடந்து வந்த விதம் மிகுந்த மனநிறைவினைத் தந்தது.

விடுபட வேண்டியவற்றிலிருந்து விடுதலையாகாமல் இருப்பதற்கு தலைவிதியோ, சாபமோ காரணமில்லை. முடிவெடுப்பதில் இருக்கும் போதாமையே மிகப் பெரிய காரணம். முடிவெடுத்தலில் நிகழும் மிகப் பெரிய முரண், தனித்து முடிவு எடுக்க வேண்டியபோது, பலரையும் அதற்குள் திணித்துக்கொண்டு குழம்புவது, துணைபுரிகின்றவர்களோடு தீர்க்க வேண்டியதை தனித்து நின்று போராடிக் களைப்படைவது. முடிவெடுத்தல் மிகப் பெரியதொரு கலை. அதனைக் கற்றுக்கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்வது மற்றும் தேவையெனின் துணை சேர்த்து செயல்படுவது மிக முக்கியம்.

கடந்து வந்துவிட்டவர்களைத் தள்ளி நின்று பார்க்கும்போது, திரைப்படத்தில் ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு மாறிவிடுவதுபோல் கருதி விடுகிறோம். ஆனால் அவர்கள் கடந்து வந்த காலம் என்பது வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள், மணிகள், நிமிடங்கள், நொடிப்பொழுதுகள் என அதீதமான நீளம் கொண்டவை. ஆனால் ஒட்டுமொத்த வாழ்வில் அதுவொரு பகுதியே. 

கடக்கவே முடியாது என அஞ்சியதை, கடக்க முடியுமா எனத் தயங்கியதை ஏதோவொரு வகையில் கடக்கும்போது, வாழ்வு உடனடியாக வெகுமதி அளித்துவிடுகின்றது. அந்த வெகுமதி நமக்கு நாமே பெருமைகொள்வதோ, மற்றவர்கள் நம்மைக் கண்டு வியப்பதோ அல்ல. அந்த வெகுமதிக்கு நிம்மதியென்று ஒரு பெயருண்டு.

Mar 3, 2025

ஏமாறுவதற்கு வரி விலக்கு உண்டு

 தாம் புத்திசாலி எனும் எண்ணம் சிலருக்கு வலுவாக இருக்கும். பலருக்கு அதுவே மனதின் அடி ஆழத்தில் மென் புழுதியாகப் படிந்திருப்பதுண்டு. புத்திசாலி என்பதற்கு அளவுகோல் எதுவும் வைக்க முடியாது. அப்படியே அளவுகோல் என ஒன்றை வைத்தாலும், அது மிகப் பெரும்பான்மையானோருக்கு உடன்படக்கூடியதாக இருக்காது. பலருக்கு உடன்படாதது எப்படி பொதுவானதாகும்? தாம் புத்திசாலியென அடி மனதில் படிந்து கிடப்பதை சிலர் அதன் விதமாகவே அழகு பார்ப்பதுண்டு, சிலர் விரல் நுனிகளால் அதில் கோலமிட்டு புன்னகைப்பதுண்டு. வெகு சிலர் மட்டுமே ‘ஃப்பூ’ என ஊதி விட்டு அதனைக் கடந்து செல்வர்.

தன்னை ஏதோவொரு கணத்தில் புத்திசாலி எனச் சொல்வோர் அனைவருக்கும் பொது ஒற்றுமை ஒன்று உண்டு. அது, யாரோ ஒருவர் தன்னை ஒரு காலகட்டத்தில் ஏமாற்றிவிட்டதாக விரல் சுட்டுவது. ஏமாற்றப்பட்டது என்பது, பிள்ளைப் பிராயத்தில் மிட்டாய் தருவதாகச் சொல்லி தாராது போன நட்பு தொடங்கி, பருவ வயது காதல், மண வாழ்க்கை, பாகப்பிரிவினை, கொடுக்கல் வாங்கல், பணியிடம், தொழில் உள்ளிட்டவற்றில் யார்யாரோ தம்மை ஏமாற்றியதாக ஒவ்வொருவரிடமும் ஓர் பட்டியல் உண்டு. பட்டியலில் இடம் பெற்ற பெயர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் வேறுபடலாம். அதே சமயம், ஏமாந்தவர்களின் பட்டியல் அத்தனை சிறியதும் அல்ல.

இது எப்படி நிகழ்ந்தது எனக் கேட்டால், தன்னைப் பார்த்தாலே அவர்களுக்கெல்லாம் ஏமாற்றத் தோன்றியிருக்க வேண்டுமென ஒரே மாதிரி பதிலை பலரும் சொல்வதுண்டு. ”அது எப்படி ஒருவரைப் பார்த்தாலே ஏமாற்றத் தோன்றும்?!” எனும் கேள்வியை அவர்கள் ஏற்பதில்லை. ஏமாற்றப்பட்டது குறித்துப் பேசும்போது, தாம் அறிவித்த அல்லது தம் அடி மனதில் புழுதியாகப் படிந்திருந்த ‘புத்திசாலி’த்தனம் மிக லாவகமாக மறைக்கப்படும்.

தமக்கு நிகழ்ந்த ஏமாற்றத்தையொட்டி, தானே தன் மீது பச்சாதாபம் தேடுவது முதல் வன்மத்துடன் பழி வாங்குவது வரை பலவிதமான வினைகள் இங்கு ஆற்றப்படுவதுண்டு. அதைவிடுத்து, அந்த ஏமாற்றம் ஏன் நிகழ்ந்தது என்று சிந்திப்பது மிகக் குறைவு.

இங்கு இரண்டு வகையினர் உண்டு. ஒன்று ஏமாற்றுவோர் மற்றொன்று ஏமாற்றப்படுவோர். இவர்கள் எல்லா நேரங்களிலும் இதில் ஏதோ ஒரு வகையில் மட்டுமே நிலைத்து நிற்பது போல் கட்டமைக்கப்படுகின்றனர். அவர்களின் நிலைகள் சில நேரங்களில் மாறுவதுண்டு. அதே சமயம், வகை மாறினாலும், அது தற்காலிகம் என்று சொல்வதுபோலே, மீண்டும் தம் வகை இதுதான் என எது தனக்கு வசதிப்படுகின்றதோ அதில் நின்றுகொள்வர்.

ஏமாந்த, ஏமாற்றப்பட்ட மற்றும் ஏமாந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் அனைத்திலும் பெரும் பங்கு வகித்தது ஏமாற்றியவரா அல்லது ஏமாற்றப்பட்டவரா எனும் கேள்விக்கு ’ஏமாற்றியவர்’ என எளிதாகப் பதில் அளித்துவிடுகின்றனர். அது அவர்களுக்குப் பிடித்த பதில்தானே தவிர, அதுவே உண்மையாக இருப்பதில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஏமாறுவதில் பெரும் பங்கு வகிப்பது ஏமாற்றப்படுகிறவரே. காரணம் ஏமாற்றப்படுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் அவர்கள் தன்னகத்தே கொண்டிருப்பார்கள்.

எந்தவிதமான பணம் ஈட்டுவது சார்ந்த ஏமாற்றங்களுக்குப் பின்னாலும், மிகப் பெரிய பேராசை ஒன்று இருந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அந்தப் பேராசையை வசதியாக மறைத்தபடி, ஏதோ தாங்கள்தான் உலகின் அதிசிறந்த அப்பிராணி போலவும், நியாயமான ஒன்றையே தாங்கள் அடைய முற்பட்டதுபோலவும், தங்களைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றியதாகவும்  அவர்கள் நடந்துகொள்வதுண்டு. பொதுவாக நிதி மோசடிகளில் ஏமாற்றும் திட்டத்தோடு வருகின்றவர்கள் பெரும்பாலும் தனித்த மனிதர்களைக் குறி வைக்கமாட்டார்கள். பறவைகளுக்கு வலை விரிப்பதுபோல், தோதான இடத்தில் வலை விரிப்பார்கள். அவர்களுக்கு இதில் சிலரோ பலரோ சிக்குவார்கள் என்று தெரியும். ஆனால் யார் யாரெனத் தெளிவாகத் தெரியாது. ஆனால் ஏமாறுகின்றவர்கள் தம்மைத் தாமாக வெளிப்படுத்தி, தாம் சிக்குவதற்கு எந்த வலை சிறந்தது என்று மிக எளிதாகத் தேர்ந்தெடுத்து விடுவதுண்டு.

ஏமாறுதலில் அடுத்ததாகப் பெரும் பங்கு வகிப்பது அறியாமை. பெற்றிருக்க வேண்டிய அறிவினைப் பல்வேறு காரணங்களால் பெற முடியாது போவது ஒருவகையென்றால், பெற மறுப்பது மற்றொரு வகை. அறிவியல் அவ்வளவாக வளர்ச்சியடைந்திடாத காலத்தில் அறியாமையோடு இருப்பதற்குப் பல்வேறு சமாதானங்கள் இருந்தன. இன்றைய காலகட்டத்தில் அறியாமைக்குப் பெரிதும் காரணமாக இருப்பது, அறிந்துகொள்ள முற்படாததே. ஒருவரே நேரடியாக எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியுமா என்றால் 'ஆம்' என்று சொல்வது நியாயமான பதிலாக இருக்காது. எந்த ஒன்றிலும் அறிந்தவர்கள், அதில் குறைந்தபட்ச அறிவு பெற்றவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று பலரும் உண்டு. தன்னால் அறிந்துகொள்ள முடியாது என்றால் இவர்களில் யாரையேனும் துணைக் கொள்ளலாம். அதைவிடுத்து அறியாமை என்னுடைய அடையாளம் என்போரும், தாம் ஏமாறுவதற்குத் தயார் என்று சிவப்புக் கம்பளம் விரிப்பதும் நிதர்சனமான உண்மை.

அறியாமை போன்றே இருக்கும் மற்றொன்று அறிவுக் குறைபாடு. தான் ஈடுபட வேண்டியதில் மிக மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருப்பதில் திருப்தி கொள்வது, அறிந்தது போதும் என நினைப்பது, சில பல காரணங்களால் மனத்தடை ஏற்படுத்திக்கொண்டு மேலும் அறிந்துகொள்ள மறுப்பது ஆகியவை அறிவுக் குறைபாட்டிற்குக் காரணமாகின்றன. அறிவுக்குறைபாட்டோடு எதை அணுகினாலும், புரிதலின்மை ஓங்கி நிற்கும், புரிதலின்மை ஓங்கியிருக்கும் இடத்தில் முழுமையான புரிதலோடு வருகின்றவர் எளிதாக தனக்கான இடங்களைக் கைப்பற்றுவர். அவர்கள் ஏதேதோ செய்து ஏமாற்றி அந்த இடத்தை அடைந்துவிட்டதாகக் கருதுவதும் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் வகையன்றி வேறென்ன?




ஒவ்வொருவரையும் சுற்றி 360 டிகிரி சுற்றளவிலும் போட்டி ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றது. ஒருவர் மட்டுமே தேவையுள்ள இடத்திற்கு ஓராயிரம் பேர் போட்டியிடும் நிலை முக்கியமான அனைத்துத் தளங்களிலும் உண்டு. அந்தப் போட்டிக்குத் தன்னை முழுமையாகத் தகுதிப்படுத்திக் கொள்ளாததும், தம்மைப் போதுமான அளவு வளர்த்துக் கொள்ளாததும், அந்த இடத்தை வேறொருவர் கைப்பற்றிட எளிதில் வழி வகுக்கின்றன. நானும்தான் விரும்பினேன், அதற்காக உழைத்தேன், தகுதிப்படுத்திக் கொண்டிருந்தேன், ஆனால், எனக்கு வேண்டுமென்றே வழங்கப்படவில்லை என்பது பெரிதும் உடனிருப்போரை சமாதானப்படுத்தும் எளிய வழியாக வேண்டுமானால் இருக்கலாம். அந்தச் சமாளிப்புகள் ஒருபோதும் அவர்களைச் சமாதானப்படுத்தாது. ஒருவேளை அதுவே அவர்களைச் சமாதானப்படுத்துவதாக அவர்கள் கருதினால், அது அவர்களை அவர்களே ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை. 

தகுதிப்படுத்திக்கொள்ளாமை ஏமாறுவதில் ஒருவகை என்றால், அதற்கு இணையான மற்றொருவகை வழங்கப்படும் வாய்ப்பினை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிடுவது. வாய்ப்பு எப்போதும் தன்னை அலங்கரித்துக்கொண்டும், வெளிச்சமிட்டுக்கொண்டும் வருவதில்லை. சில நேரங்களில் மேகத்தில் மூழ்கிய நிலவொளிபோல் மங்கலாக இருக்கும். சில நேரங்களில் மின்மினி போல் கண் சிமிட்டும். சில தருணங்களில் அது தன்னைத் திடமாக அறிவிக்கும். வாய்ப்புகள் எந்த வடிவில் வந்தாலும், தெளிவாகவோ, தெளிவற்றதாகவோ இருந்தாலும் அதனைப் பயன்படுத்திக்கொள்ள தன்னைத் தயார்படுத்தி வைத்திருப்பதுவும், திடப்படுத்தி வைத்திருப்பதுவும் மிகவும் முக்கியம். பெரு வெளிச்சமாக வருமென எதிர்பார்த்திருப்பது, மின்மினியாய் சிணுங்கும்போது அதனை இனம்கண்டு, வாய்ப்பினை ஏற்று, தன்னை நிரூபித்தல் மட்டுமே தன்னையே ஏமாற்றிக்கொள்வதைத் தவிர்க்கச் செய்யும்.

தனக்கென்றிருக்கும் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட மறப்பதுவும், மறுப்பதுவும் தான் அடைய வேண்டிய நிலை, இடம் ஆகியவற்றைத் தடுக்கவே செய்யும். வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமை என்பது, அந்த வாழ்தலில் தனக்குத் தேவையானதை அடைய தனக்கு இருக்கும் அடிப்படை உரிமையை உணர்தலே. தான் உரிமையை நிலைநாட்ட மறுக்கும் இடங்களில் வேறொருவர் எளிதாக அந்த உரிமையை எடுத்துக்கொள்வார். காரணம் உரிமைகள் என்பது யாரோ ஒருவரால் செலுத்தப்படவேண்டிய ஓர் இயங்கு ஆற்றல். இயங்கிக் கொண்டிருப்பதைப் பயன்படுத்த வேண்டியவர் பயன்படுத்தத் தவறினால் அல்லது மறுத்தால் அந்த இயக்கம் ஓய்ந்து போய்விடாது, தன்னை இயக்கத் தகுதியானவரை அனுமதித்துத் தொடர்ந்து இயங்குவதையே விரும்பும். அதுவே நியதி. நான் என் உரிமையை அங்கே நிலைநாட்டியிருக்க வேண்டும், நான் தவறவிட்டதால் எல்லாம் என் கைவிட்டுப் போய்விட்டது, நான் ஏதோ ஒருவகையில் வஞ்சிக்கப்பட்டேன் எனும் சமாதானங்களால் யாருக்கு என்ன பயன் இருந்துவிட முடியும்?

ஏமாற்றங்களில் உச்சம் பெற்றிருப்பது மூடநம்பிக்கை. மூடநம்பிக்கைகளின் ஆயுட்காலம் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்துவதுண்டு. இது எப்படி இத்தனை காலமும் செழிப்பாக இருந்து கொண்டிருக்கின்றது? நியாயமாகச் செய்ய வேண்டிய ஒன்றைச் செய்ய மறுத்து, எந்தவகையிலும் ஏற்க முடியாத, ஏற்கக் கூடாத, விளைவுகளை ஏற்படுத்தாத ஒன்றை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், சிறப்பாகிவிடும் என நம்புவது யாருடைய பிழை?

ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்களைத் தேர்ந்தெடுப்பதைவிட, ஏமாறுபவர்கள்தான் ஏமாற்றுபவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்.

Apr 9, 2024

மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!?

பொதுவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை. பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடியாதவற்றைத்தான். நிகழ்த்த முடியாதவை எனப் பட்டியலிட்டதை யாரோ ஒருவர், எதன் நிமித்தமாகவோ நிகழ்த்திடும்போது அது எளிதாக வெற்றியென அங்கீகாரம் பெற்று விடுகின்றது. சில வெற்றிகள் அப்படி நிகழ்த்த முடியாதவற்றை நிகழ்த்துமாறு நிபந்தனைகள் விதிப்பதில்லை. மிக நுண்ணியதொரு அழகியலில், மாறுபட்ட பார்வையில் தன்னை திருப்தி செய்துகொள்ளும். அப்படியான அழகியலின் வாயிலாக எதிர்பாராத வெற்றியை ஈட்டிய படம்தான் மஞ்ஞும்மல் பாய்ஸ்.

எல்லோரும் கதை குறித்து எழுதிவிட்டதால் ஸ்பாய்லர் அலெர்ட் எதுவும் தேவைப்படாது. கொச்சி அருகே மஞ்ஞும்மல் என்கிற ஊரிலிருந்து இளைஞர் குழுமம் ஒன்று கொடைக்கானல் சுற்றுலா செல்கின்றனர். காலங்காலமாய் இளைஞர்கள் சுற்றுலா சென்றால் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படியானதொரு கொண்டாட்டத்தோடு சுற்றுலா அமைகின்றது. இறுதியாக ஊருக்குப் புறப்படும் முன் குணா குகைக்குச் செல்கின்றனர். வனத்துறையின் தடை மற்றும் எச்சரிக்கையை மீறி உள்ளே சென்று தங்கள் வருகையினைப் பதிவு செய்யும் வகையில் மஞ்ஞும்மல் பாய்ஸ் என்றெழுதி கொண்டாட்டமாக இருக்கும் சூழலில் குகைக்குள் ஒரு ஓட்டையின் வழியே சுபாஷ் விழுந்துவிட, சுபாஷை மீட்டெடுக்கும் போராட்டம்தான் கதை.

குடிகார இளைஞர்கள், பொறுப்பற்ற முறையில், தடுப்பு மற்றும் எச்சரிக்கையை மீறிச் சென்று விழுந்ததை இப்படி படமாக எடுத்துக் கொண்டாடலாமா எனும் தர்க்கவாதிகளிடமிருந்து நான் விலகி நிற்கவே விரும்புகிறேன்.

மஞ்ஞும்மல் பாய்ஸ் என்றழைக்கப்படும் உண்மையான பாத்திரங்கள் பெயிண்ட் அடிப்பவர்கள் மற்றும் மீன் வெட்டுகின்றவர்கள். பொதுவாக இளைஞர்களின் பெரும்பாலான மலைப்பிரதேச சுற்றுலாக்களில் மது இருப்பதுண்டு. சரி தப்பு என்பது அவரவர் எண்ணம். ஆனால் மது இருப்பது உண்மை.

 2006ம் ஆண்டு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தியத் திரைப்படங்களில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலையாளத்தில் அதிகத் திரைப்படங்கள் வருவதுண்டு.




இதுவரை எத்தனையோ மலையாளப் படங்கள் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வந்திருந்தாலும், மஞ்ஞும்மல் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிக ஆச்சரியமானது. இத்தனைக்கும் இதைவிடச் சிறந்த, உண்மைச் சம்பவ திரைப்படங்கள் மலையாளத்தில் உண்டு. இந்தப் படத்தின் வெற்றிக்கு மலையாள ரசிகர்களைவிட தமிழ் ரசிகர்கள்தான் காரணம் என்றால் அது மிகையாகாது. உண்மையில் இப்படியொரு அலையை எதிர்பார்க்கவில்லை. மலையாளத் திரைப்படம் தமிழ்நாட்டில் ஏன் இப்படியொரு பேரலையை ஏற்படுத்தியது என்ற ஆச்சரியம்தான் மேலோங்கி இருந்தது.

தமிழ் ரசிகர்களிடம் ஏன் இத்தனை பரவசம் எனும் கேள்விக்கான பதில், இயக்குனரின் மிக சாமார்த்தியமான அந்த முடிவு. குட்டனும் சுபாஷும் கருவறையிலிருந்து மறு பிறப்புபோல் மேலெழும்பி வரும் கணத்தில் பளீரென குணா திரைப்படத்தின் கண்மணி அன்போடு பாடலிலிருந்துஉண்டான காயம் எங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன பொன்மானே பொன்மானேஎன்றொலிக்கும் ஜானகியின் குரலுக்கு திரையரங்கம் துள்ளும் மாயமே சாட்சி. அந்தத் தருணத்தில் அந்த வரி ஒலிக்காமல் போயிருந்திருந்தால் தமிழ் ரசிகர்களிடம் இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தாமல் மற்றுமொரு மலையாளப் படமாகவே இருந்திருக்கலாம்.

படத்தின் இயக்குனர் சிதம்பரம் அளித்த பேட்டிகளினூடாக அறிவது, அந்தப் பாடல் எதேட்சையாக அந்த இடத்தில் நுழைக்கப்படவில்லைஎழுதியபோதே, கண்மணி அன்போடு பாடலில் துவங்கி, ரசிகர்களை தயார்படுத்தி வைத்திருந்து, முக்கியமான அந்தக் காட்சியில்உண்டான காயமெங்கும்வரியை பொருத்துவது என்று தீர்மானித்திருக்கின்றார்.

அழுத்தம் நிறைந்த அந்தக் கணத்தில் ஆனந்தக் கண்ணீர் வர வைக்கும் ஆற்றல் குறிப்பிட்ட அந்த வரிக்கும், குரலுக்கும், அதன் இசைக்கும் இருந்ததை திரையரங்கில் காண முடிந்தது. அதுதான் ஒரு படைப்பின் அழகியல். அது தான் நிகழ்த்த விரும்பியது மற்றும் பார்வையாளனிடம் கொண்டு வர விரும்பியதன் உச்சத்தைத் தொட்டுவிட வேண்டும்.

அந்தப் பாடல் சேர்க்கை படத்தின் வெற்றிக்கான காரணமாக பார்க்கும் அதே சமயம், அதைத் தாண்டி படத்தில் ஆழமாக ஒன்றிப்போக எனக்கு சில காட்சிகளும் காரணங்களும் உண்டு.

*

சுபாஷை மீட்பதற்காக குட்டன் குழிக்குள் இறங்குகையில் 120 அடி ஆழத்தில் கயிறு தீர்ந்துவிட காவல் அதிகாரி அடுத்த கயிற்றை இணைக்குமாறு தீயணைப்பு துறை அதிகாரியிடம் சொல்கிறார். அவர் இனியும் கீழே இறங்கினால்  ஆக்ஸிஜன் கிடைக்காது, எனவே குட்டனை மேலே வர வைப்பதுதான் நல்லது என்கிறார். மேலே வருமாறு குட்டனிடம் காவல் அதிகாரி சொல்கிறார். குட்டன் மறுக்க, அவரின் குரல் அதிகாரமாக ஆணையிடுகின்றது. பொதுவாகவே அதிகாரத்தின் குரல்களில் எப்போதும் அறிவின் வாசனை இருக்காது என்பதற்கான மிகச் சரியான உதாரணம்தான் உயிரைப் பணயம் வைத்து, துணிந்து இறங்கியவனிடம்மரியாதையா மேல வந்துடுஎனும் அந்த ஆணை.

 

*

குட்டன் சுபாஷைக் கண்டு, கயிற்றில் தன் உடலோடு இணைத்துக் கட்டிக்கொள்ள மேலிருந்து, கயிறு இழுக்கும் வீரர்களான நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இழுக்கின்றனர். மெல்ல மெல்ல சாவின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்வை நோக்கி இருவரும் உயர்கின்றனர். ஒருகட்டத்தில் குறுகிய இடுக்கில் சிக்கிக்கொள்ள மேலே இழுக்க முடியாத நிலை வருகின்றது.

அனைவரும் ஏறத்தாழ நம்பிக்கை இழக்கும் கணத்தில், அதுவரை அதிர்ச்சியில், மிகுந்த மன அழுத்தத்தில் உறைந்துபோயிருந்த, அபிஷேக் குகைக்குள் வந்து நிற்கிறான். அவனைப் பார்த்தவர்கள் பதட்டத்தோடு அங்கிருந்து வெளியேறுமாறு கத்த, அதனைப் பொருட்படுத்தாது, ”எடா... லூசடிக்கடா!” எனும் தேர்ந்த யுக்தியை மந்திரம்போல் தருகிறான்.

மேலே இழுப்பதுதான் நோக்கம் என்பதற்காக ஒரே மூச்சில் இழுத்துவிட முடியாது. சிக்கிக்கொள்ளும் தருணங்களில் இன்னும் ஆற்றல் கொடுப்பதால் சிக்கல் தீர்ந்துவிடாது, தேவையான தருணங்களில் சற்று தளர்த்திக் கொண்டுதான் மீண்டும் முழு வலிமையோடு தொடர வேண்டும் என்பதை அந்தகயித்த கொஞ்சம் விட்டு இழு” (லூசடிக்கடா) மிக எளிதாக உணர்த்தி விடுகின்றது. ‘சற்றே தளர்த்தி முழு ஆற்றலைச் செலுத்துஎன்பது அந்தக் காட்சிக்கான யுக்தி மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்தின் பல தருணங்களுக்கான பாடம்.


*

ந்தப் படத்தில் ஒட்டுமொத்தமாகக் கொண்டாட என்னிடமிருருக்கும் மிக முக்கியக் காரணம், தேவையின் பொருட்டு வைக்கும், சொற்களில் விவரிக்கவியலாத அளவுக்கான அபரிமிதமான நம்பிக்கை. சாத்தானின் சமையலறை என்றழைக்கப்படும் குணா குகையின் ஆழம் யாருக்கும் தெரியாது. வரைபடம் கிடையாது. உள்ளே விழுந்தவர்கள் யாரும் அதுவரை உயிரோடு மீண்டதில்லை. சூசைட் பாய்ண்ட்-ல் தற்கொலை செய்தோரின் உடல்களை எடுத்துவரும் திறன் வாய்ந்தவர்கள்கூட குகையின் குழிக்குள் விழுந்தவர்களை மீட்டெடுத்துவர முன்வருவதில்லை.

இப்படியாக அந்தப் பகுதி கடைக்காரர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வனத்துறை, காவல் துறை மற்றும் மீட்பு படை உள்ளிட்ட அனைவரும் உயிரோடு மீட்க முடியாது என மிக உறுதியாகச் சொன்ன பிறகும், அந்த நண்பர்களை எது போராட வைத்தது என்பதுதான் என்னை இடைவிடாது ஆச்சரியமூட்டும் கேள்வி.

ஆழ்துளைக் குழாயில் விழுந்தோர், இடிபாடுகளில் சிக்கியோர், குழிக்குள் விழுந்தோர், சுரங்கத்தில் மாட்டியோர் என எத்தனையோ சூழல்களில் மீட்டெடுக்கப்படுவதில், ஏற்கனவே அப்படி மீட்டெடுத்தற்கான சில உதாரணங்கள் இருந்ததுண்டு. ஆனால் குணா குகைக்குள் விழுந்தவர் மீண்டதாக வரலாறு இல்லாதபோது, புதியதொரு வரலாற்றை உருவாக்க, அவர்களிடம் இருந்த அளவற்ற, அதுவரை யாரும் உணர்ந்திடாத நம்பிக்கையின் மூலம் என்னவாக இருந்திருக்கும்?

சுபாஷைக் கைவிட்டு ஊர் திரும்பினால், சுபாஷின் அம்மாவை எதிர்கொள்ளும்போது அவரின் எளிய கேள்விக்கும், குத்தும் பார்வைக்கும் சக எளிய மனிதர்களான அவர்களால் ஒருபோதும் பதில் தயாரித்துவிட முடியாது. அதைவிட மிக முக்கியமானது உடன் வந்த ஒருவனை ஆபத்தில் விட்டுவிட்டு, அவனுக்கு என்ன ஆனது, எப்படியிருக்கிறான் எனத் தெரியாமல், தெளிவில்லாதொரு முடிவினை தெளிவான தீர்வுபோன்று ஏற்றுக்கொள்ளும் வதைக்குள் அவர்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அதுதான் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் சுமத்திய அவநம்பிக்கைக்கு சவால் விடத் துணிகின்றது. அந்த சவால் ஓங்காரமாய் ஒலிக்கவில்லை. மௌனமாக உள்ளுக்குள் ஆற்றலாய் உருவெடுக்கின்றது. யாரோடும் முரண் கொள்ளாமல் தங்களை உருவேற்றிக்கொள்கின்றனர். என்னவாகினும் போராடிப் பார்த்துவிடுவது எனும் போர்க்குணம் எழுகின்றது.

அந்தப் போர்குணம் வௌவால்கள் படையெடுத்த ஆழ்ந்த இருளை நோக்கிடேய் சுபாஷுஎன கதறிக்கொண்டேயிருந்தது, காவல் துறை பழி சொல்லி அடித்து துவைத்தபோதும் பொறுத்துக்கொண்டது, மழை பொழிந்தபோது தன்னைக் கரையாகக் கட்டமைத்தது, மீட்டுப்படை வீரர் இறங்க மறுத்தபோது தம் உயிரை பணயம் வைத்தது, இறுதியாக நட்பின் பெயரால், மனிதத்தின் பெயரால், உறுதியின் பெயரால், நம்பிக்கையின் பெயரால் வென்றெடுத்தது.

~ ஈரோடு கதிர்


பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...