Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Oct 17, 2025

நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்

நிதானமாக இதை வாசியுங்கள். நிறையப் பேருக்கு இது வருத்தம் தரும் பதிவாகவும் இருக்கலாம். இதன் நோக்கம் வருத்தம் அடையச் செய்ய அல்ல. கிடைத்த வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்துவிட வேண்டும் என்பதற்காக மட்டுமே!

இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையின் சுருக்கம் ...

புற்​று​நோய் முற்​றிய​தால் நேரம் கழிகிறது.  இதுதான் எனக்கு கடைசி தீபாவளி நண்​பர்​களே” - 21 வயது இளைஞர் உருக்​க​மான பதிவு

கடந்த 2023ம் ஆண்டு டெல்லியில் 19 வயது இளைஞர் ஒரு​வருக்கு பெருங்​குடலில் புற்​று​நோய் பாதிப்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. அது முற்​றிய நிலை​யாக நான்காவது நிலைக்கு சென்​றுள்​ளது. மருத்​து​வர்​கள் கீமோதெரபி உட்பட அனைத்து வித​மான சிகிச்​சைகளும் அளித்​துள்​ளனர். எனினும், புற்​று​நோய் முற்​றிய​தால் ஒன்​றும் செய்ய முடியவில்​லை. அவர் ஓராண்டு உயிர் வாழ்​வதே சிரமம் என்று கைவிரித்துள்​ளனர். தற்​போது 21 வயதாகும் அந்த இளைஞர் சமூக வலைதளத்​தில் தன்​னுடைய வலி, கனவு​கள் என உருக்கமான பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில்...

/

விரை​வில் தீபாவளி வரு​கிறது. தெருக்​கள் ஏற்​கெனவே விளக்​கு​களால் ஜொலிக்​கின்​றன. அவற்றை நான் கடைசி முறை​யாக பார்க்​கிறேன் என்​பதை நினைக்​கும்​போது மிக​வும் கடின​மாக இருக்​கிறது. இந்த பண்​டிகை கால விளக்​கு​கள், சந்​தோஷம், சிரிப்​பு, சத்​தம் என எல்​லா​வற்​றை​யும் இழக்க போகிறேன்.

நான் சத்​தமில்​லாமல் சிறிது சிறி​தாக சரிந்து கொண்​டிருக்​கும் போது, வாழ்க்கை தொடர்ந்து நகர்வது விசித்​திர​மாக உள்​ளது. அடுத்த ஆண்டு என்​னுடைய இடத்​தில் வேறு யாரோ ஒரு​வர் விளக்கு ஏற்​று​வார். நான் வெறும் நினை​வாக மட்​டுமே இருப்​பேன்.

எனக்கு சுற்​றுலா செல்​வது பிடிக்​கும். தனி​யாக நிறு​வனம் தொடங்க ஆசைப்​பட்​டேன். செல்ல நாய் வளர்க்க நினைத்​தேன். ஆனால், எனது நேரம் கழிந்து கொண்​டிருப்​பது நினை​வுக்கு வரு​கிறது. அதனால் அந்த எண்​ணங்​கள் மங்​கி​விடு​கின்​றன.

நான் வீட்​டில்​தான் இருக்​கிறேன். எனது பெற்​றோரின் முகத்​தில் சோகத்​தைப் பார்க்​கிறேன். இவற்றை எல்​லாம் நான் ஏன் எழுதுகிறேன் என்று கூட எனக்கு தெரிய​வில்​லை. அடுத்து என்ன நடக்​கிறதோ தெரி​யாது. அதில் நான் மறைந்து போவதற்கு முன்பு சத்தமாக சொல்​லி​விட்டு செல்​வதற்​காக இருக்​கலாம்.

/

முதலில், அந்த இளைஞரின் வயதில் இருக்கும் இளைய தலைமுறையினரைப் பார்த்து சொல்ல விரும்புவது, உங்கள் வாழ்க்கை மீது, உங்கள் அன்றாடங்கள் மீது, உங்களுக்கு கிடைத்தவைகள் மீது ஏதேனும் புகார் இருந்தால், புறந்தள்ளிவிட்டு மீண்டுமொரு அந்த இளைஞர் கூறியிருப்பதை வாசியுங்கள்.

அப்படியும் புகார்கள் இருந்தால் சரியான நபருடன் உரையாடுங்கள். இந்த வாரத்தில் அப்படி என்னோடு உரையாடியவர்களின் எண்ணிக்கையும், உரையாடலும் என்னை மலைக்க வைத்துள்ளது. ஏதேதோ இன்மைகள், குறைகள், புகார்கள். மிக முக்கியமான சின்னச் சின்னக் குழப்பங்கள். ஒரு சரியான வழிகாட்டியை, மனதில் இருப்பதை வெளிப்படுத்தினால் கேட்பதற்கான நபரை அவர்கள் கண்டடைந்திருக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

பொதுவாக நம் எல்லோருக்குமே, அந்த இளைஞரின் பதிவினை வாசிக்கும்போது பலவிதமான உணர்வுகள் ஏற்பட்டிருக்கலாம். பலருக்கு அதிர்ச்சியளித்திருக்கலாம். சிலருக்கு அச்சம் தந்திருக்கலாம். இவ்ளோதானா வாழ்க்கை எனும் சலிப்பைத் தந்திருக்கலாம்.... இன்னும்கூட நிறைய இருந்திருக்கலாம். நிச்சயமாக யாரையும் வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது.

சிலவற்றை எந்த வகையிலும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. அவை முற்றிலும் நம் கட்டுப்பாட்டை மீறி வருகின்றவை.

ஆனால், நாம் அறிந்து நம்மால் தடுக்க, தவிர்க்க இயலுகின்றவற்றை, அவ்வாறு செய்யாமல் நமக்குக் கிடைத்திருக்கும் நேரம், வாய்ப்புகள், வளங்கள், உறவுகள், உடல் நலம், மன நலம் ஆகியவற்றை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றோமா எனும் கேள்வியை எழுப்பினால் போதும். சரியாக வேண்டியவைகள் மெல்ல மெல்ல சரியாகும்.

வாழ்க்கை நிச்சயமற்றதுதான். ஆனால், நம் யாருக்கும், அந்த இளைஞருக்கு 'தான் இல்லாமல் போகப்போவதுதெரிந்துவிட்ட நிலை போல் இல்லை. அந்த நிறைவுப் புள்ளி தெரியாதது எத்தனை பெரிய வரம் என்பது அது தெரிந்துவிட்டால்தான் தெரியும். அவருக்கு ஒவ்வொரு விடியலும் மரணத்தை நெருங்கும் மைல் கற்கள். எதையும் ’இதைச் செய்து என்ன ஆகப்போகிறது’ எனும் பதிலற்ற கேள்வியோடுதான் செய்ய வேண்டியிருக்கும்.

நமக்கு நாளை இருக்கின்றது, இந்த தீபாவளி இருக்கின்றது, அடுத்த தீபாவளியும் இருக்குமென ஆழமாக நம்புகிறோம், மனதார விரும்புகிறோம். நமக்கு அடுத்த மாதம், புத்தாண்டு, பொங்கல் உண்டு. மாணவர்களுக்கு தேர்வுகள், விடுமுறைகள், திறப்புகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு கூட்டங்கள், வருமானங்கள், அதிகாரங்கள், தேர்தல்கள் உண்டு. விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகள், வெற்றிகள், பரிசுகள் உண்டு. குடும்பத்தினருக்கு திருமணங்கள், திருவிழாக்கள், குடும்ப விழாக்கள், விருந்துகள் உண்டு.  மனித வாழ்க்கையில் எதெல்லாம் அடிப்படைத் தேவையோ, விருப்பமோ அவையெல்லாம் கிடைக்கும் சாத்தியங்கள் பெரும்பாலும் உண்டு.

அந்த இளைஞராக இப்போதைக்கு நாம் இல்லாதிருப்பது எதெனினும் மிகப் பெரிய பரிசு. நமக்குக் கிடைத்திருக்கும் நேரம், உடல் நலம், மன நலம், உறவுகள், நட்புகள், வாய்ப்புகள், வளங்கள் ஆகியவற்றில் கொஞ்சம் போதாமைகள் இருந்தாலும், இருப்பதை இன்னும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மனதார கவனம் செலுத்துவோம்.

நான் பல தருணங்களில் சொன்னதுதான் ‘நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்!’. அந்த வாழ்வு நம் கைகளில் இப்போது இருக்கின்றது அல்லது அந்த வாழ்வின் பிடியில் தற்போது நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம்.

அதனை நன்கு வாழ்ந்துவிடலாம். அந்தத் தீர்மானம் பெரும்பாலும் நம் கைகளில்தான் இருக்கின்றது.

 ~ ஈரோடு கதிர் 

Apr 26, 2025

விதைக்கப்படும் துயரங்கள்

 நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத் தேவைகள் கடந்து ஒவ்வொருவரும் நிறைய செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். அவசியமானது போக, ஆசைக்கும், ஆடம்பரத்திற்கும், சாகசத்திற்கும் அவரவர் விரும்பிய வகையில் நிறைய செய்கின்றோம். செய்யும் அனைத்துமே இந்த வாழ்வுக்கானதுதான் என ஆழமாக நம்பினாலும், உண்மையில் அனைத்துமே அதற்கானதாக இருந்துவிடுவதில்லை என்பதுதான் அதிலிருக்கும் நகை முரண். அவற்றில் விபத்துகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு.


வாழ்வின் தடமெங்கும் விபத்து சார்ந்த இழப்புகளை ஒவ்வொருவரும் சந்தித்தும், கேட்டும், கண்டும் வந்திருப்போம். அவற்றில், சாலை விபத்துகளைத்தான் அதிகம் கேள்விப்படுகின்றோம். பணியிட விபத்துகள், வீட்டில் நிகழும் விபத்துகள், சுற்றுலா விபத்துகள், இயற்கைப் பேரிடர் விபத்துகள்,  நீர்நிலை விபத்துகள்,  விமான விபத்துகள், ரயில் விபத்துகள், படகு, கப்பல் விபத்துகள், விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு விபத்துகள் என விபத்துகளின் களங்கள் நிறைய உண்டு. 

அடிக்கடி புழங்கும் சாலைப் பிரிவில் இரண்டு பேருக்கான அஞ்சலிப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டு பேரும் மத்திம வயதினராகத் தெரிந்தனர். அந்தப் பதாகைகள் இருந்த இடத்திலிருந்து 50 அடி தொலைவில், கனரக  வாகனங்களை கழுவும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. 

அன்றைய தினம் சாயப்பட்டறை ஆசிட் எடுத்துச்செல்லும் டேங்கர் லாரி சுத்தம் செய்யப்படுவதற்காக வந்திருக்கிறது. மூடியைத் திறந்து சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய நபர் மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்திருக்கின்றார். அவரைக் காப்பாற்றுவதற்காக முதலாளியும், இன்னொருவரும் பதட்டத்தில் இறங்க அவர்களுக்கும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்திருக்கின்றனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் இறந்துபோன இரண்டு பேர்தான் பதாகைகளில் இருந்தவர்கள். முதலாளியும் இறந்துபோன சூழலில், வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வெறுமையாக மயான அமைதியோடு இருக்கின்றது. எத்தனையோ முறை இதுபோன்ற டேங்கர்களைக் கழுவியதுண்டு எனும் நம்பிக்கையோ, ஆசிட்டின் கொடூரம் குறித்த அறியாமையோ அந்த அரிய உயிர்களைக் கொய்து போயிருக்கலாம்.  

ஒவ்வொரு நாளும் இதுபோன்று எத்தனையோ விபத்துகளைக் கேள்விப்படுகின்றோம். விபத்துகள் பெரும்பாலும் தவிர்க்க முடியாதது எனும் மனநிலை பலருக்கும் உண்டு. ‘நம்ம கையில் என்ன இருக்கு? தினமும் எத்தனையோ நடந்துட்டுத்தானே இருக்கு!’ என்றெல்லாம் சமாதானப்படுத்திக் கடந்து விடுகின்றோம். சற்று சிந்தித்தால், நாம் அறிந்த பல விபத்துகள் ஏறத்தாழ தவிர்த்திருக்கக் கூடியவைதான். 

ஒரு விபத்து மற்றவர்களுக்கு பெட்டிச் செய்தி. ஆனால் உற்றவர்களுக்கு, வாழ்நாள் முழுமைக்குமான மிகப் பெரிய துயரம். அது ஒருபோதும் பாடம் ஆவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை. 

விபத்துகளை எளிதாக இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று தம் கட்டுப்பாட்டில் இருப்பது. மற்றொன்று தம் கட்டுப்பாட்டில் இல்லாதது. அதிகமாக நிகழ்வது தம் கட்டுப்பாட்டில் இருக்கும் விபத்துகள்தான். அந்த விபத்துகளுக்கான மிக முக்கியமான காரணங்களாக சிலவற்றைப் பட்டியலிடலாம். அதீத நம்பிக்கை, அசட்டுத் தைரியம், விழிப்புணர்வு இல்லாதது, தவிர்க்க வேண்டியதை தவிர்க்காதது, கவனக் குறைவு, அலட்சியம், உடல்நிலை உள்ளிட்டவை அதில் அடங்கும்.

நட்புகளோடு சுற்றுலா செல்லும்போது சூழல் அறியாமல், பலரும் நீர் நிலைகளில் இறங்குவதுண்டு. அவர்களில் சிலருக்கு நீச்சல் தெரிந்திருக்கலாம். நீச்சல் பழகிய நீர்நிலைக்கும், அங்கிருக்கும் நீர்நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாமும் ஒன்றுபோல் தெரியும். ஆனால் அனைத்து நீர்நிலைகளும் ஒன்றல்ல. ஒவ்வொன்றுக்கும் தனித்த வடிவங்கள், போக்குகள் மற்றும் தன்மைகள் உண்டு. சிலருக்கு நீர்நிலைகள் குறித்த அனுபவமோ, பழக்கமோ துளியும் இருக்காது. எனினும், நட்புகளுடன் இருக்கும் துள்ளல் மனநிலையில் இறங்கி ஆபத்தை வரவழைத்துக் கொள்வதுண்டு. குறிப்பாக கோடை விடுமுறைக் காலங்களில், ஆர்வமிகுதியில் நீர்நிலைகளுக்குச் செல்வோர் இதுபோன்ற விபத்துகளில் சிக்கிக் கொள்வதை அதிகமாகக் காண முடியும்.

சரியான வழிகாட்டுதல் இன்றி மலையேற்றம் செல்வோர் வழி தவறி காணாமல் போவதுண்டு. திடீரெனப் பெய்யும் பெருமழைகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புண்டு. உடல்நிலைப் பொருட்படுத்தாது மலை ஏறி ஆபத்தை வரவழைத்துக் கொண்டவர்களும் உண்டு. தமிழகத்தையே உலுக்கிய குரங்கனி தீ விபத்தின் பின்னால், அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் மலை குறித்த அறியாமை இருந்தது. எதிர்பாராதவிதமாக காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். முறையான அனுமதி, தொடர்புடைய வழிகாட்டுதல்கள் இல்லாததால் அவர்களுக்கு உதவிகள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

சாகச மனநிலைக்காக, வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவதற்காக, ரீல்ஸ் எடுப்பதற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக பாதுகாப்பு அம்சங்களை பாராமல், அணைகளில் ஏறுவது, படகில் பயணிப்பது, பாரா க்ளைடிங்கில் பறப்பது, பைக்கில் சீறிப்பாய்வது, ரேஸ் விடுவது என எத்தனையோ செயல்கள் விபத்துகளாக மாறுவதைக் கண்டுகொண்டேதான் இருக்கின்றோம். இவைகளுக்கு ஈரம் உலராத உதாரணங்கள் நம்மிடையே நிச்சயம் இருக்கும்.

சூழல்கள் பல நேரங்களில் நமக்கு மிகப் பெரும் பாடங்களை கற்றுக் கொடுத்திருந்தாலும், அவற்றையெல்லாம் வாழ்வின் பரபரப்பில் எளிதில் மறந்துவிடும் பலவீனம் கொண்டவர்கள்தான் நாம்.

நம்முடைய சாலைப் பயண தேவைகளும், விகிதங்களும் ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை. ‘சும்மா வெளியில் போய்ட்டு வருவோம்!’ என சில நூறு கிமீ தூரம் கார் ஓட்டிச்செல்வது பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. ‘டீ குடிக்க, சாப்பிட’ என நெடுந்தொலைவு சென்று வருவது தொடர்ந்து இயல்பாகிக் கொண்டிருக்கின்றது. ‘ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சு, அதனால ஒரு ட்ரைவ் போயிட்டு வந்தேன்!’ என சிலர் சொல்வதுண்டு.  

என்னுடைய பயிலரங்கில் ஒருவர், வீட்டில் கணவருடன் ஏற்பட்ட சிறு சண்டைக்கான எரிச்சலில், வீட்டில் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு சுமார் நூறு கி.மீ தூரம் ஓட்டியபிறகுதான் மனம் ஆறியதாகக் கூறினார். அவர் பயணித்தது மழை பெய்யும் சாத்தியம் கொண்டு ஓர் இரவு நேரத்தில். மிக முக்கியமானது அவருக்கு ஓரளவுதான் கார் ஓட்டத் தெரியும்.

நான் அறிந்த ஒரு ஓட்டுநர், மிகக் கடுமையான உழைப்பாளி, நல்ல மனிதர். தினமும் சென்னைக்கு இரவு முழுக்க லாரி ஓட்டிக் கொண்டிருந்தார். நீண்ட காலமாக ஓட்டுகின்ற, மிகுந்த அனுபவம் மிக்கவர். ஒருநாள் முதலாளியின் குடும்பத்தினருடன் தென்மாவட்டத்திற்குச் செல்ல இவர்தான் ஓட்டிச் சென்றிருந்தார். இரவு திரும்பி வரும்போது, அவர்களுடைய ஊரை நெருங்கும் தருணத்தில் ஏற்பட்ட விபத்தில் கார் முற்றிலுமாக உருக்குலைந்துபோனது. அவரும், கல்லூரியில் படிக்கும் இளம் பெண்ணும் அந்த விபத்தில் மரணமடைந்தனர். மிகச் சமீபத்தில் சுமார் 150 கிமீ தொலைவிற்குள், வெவ்வேறு இடங்களில் மூன்று உயர் ரக கார்கள் நொறுங்கி உருக்குலைந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் சுங்கவரி செலுத்தும் நெடுஞ்சாலைகளில் விபத்து நடந்த சில மணி நேரங்களில் அவை அப்புறப்படுத்திவிடுவதுண்டு. 

இரவு பகலாக தொலை தூரத்திற்கு லாரி ஓட்டும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநருக்கு, கார் ஓட்டுவது எளிதானதாகத் தெரியலாம். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நீண்ட காலம் ஒன்றில் பழகியவருக்கு, அதையொத்த ஆனால் வேறு வடிவத்தில், வேறு திறன் கொண்டிருப்பது சட்டனெ ஒரு கணத்தில் சவாலானதாக மாறிவிடலாம். அந்த ஒரு கணம் போதாதா!

பல ஆண்டுகளாக ஓட்டுகிறேன், பல லட்சம் கி.மீ தொலைவு ஓட்டியிருக்கின்றேன் என்பதுபோன்ற அதீத நம்பிக்கை மற்றும் பெருமைகளோடு மட்டும் வண்டியை இயக்கிவிடக்கூடாது. எப்போதுமே அதீத நம்பிக்கை யதார்த்தங்களை மறைக்க முயற்சி செய்யும். போதுமான ஓய்வு எடுக்காமல் வாகனம் இயக்குவது, பின்னிரவுகளில் தூக்கம் வந்தாலும் சீக்கிரம் இடம் சென்றடைந்துவிடலாம் என முயற்சிப்பது, சாலை நன்றாக உள்ளது, வண்டி சீறுகின்றது என வேகத்தைக் கூட்டுவது உள்ளிட்ட எதைச் செய்தாலும் ஆபத்தை நோக்கி பயணிக்கின்றோம் என்றே பொருள். மது போதைப் பயணங்கள் குறித்தெல்லாம் எதுவும் தனியே எழுத வேண்டிய தேவையில்லையென நினைக்கிறேன்.

சாலை விபத்துகள் எண்ணிகையின் பின்னாலும் ஒரு தோராயமான கணக்கு இருக்கத்தான் செய்யும். எடுத்துக்காட்டாக, நூறு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆயிரம் வண்டிகள் ஒரு நாளைக்கு பயணிக்கின்றன என்றால், அதில் சுமார் பத்து விபத்துகள் நடப்பதாக வைத்துக்கொண்டால், அதன் சராசரியை இரண்டு விதமாகக் கணக்கில் கொள்ளலாம். ஒரு லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் பத்து விபத்துகள் நடக்கலாம் அல்லது 1000 வண்டிக்கு பத்து விபத்துகள் நடக்கலாம். எதற்கெடுத்தாலும் வண்டியை எடுத்துக்கொண்டு, பறக்க முற்படுபவர்களிடம் சொல்வது. ஒரு லட்சம் கிமீ தொலைவிற்குள், 1000 முறை வண்டியை இயக்குவதற்குள் சுமார் பத்து முறை சிறிதாகவோ பெரிதாகவோ, எங்காவது இடிக்கலாம், விபத்துகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் தூரத்தை வெளிநாடுகளில் நேர அளவீட்டில் சொல்வதுண்டு. காரணம் அவர்களின் சாலை அமைப்பு மற்றும் போக்குவரத்து தன்மை அவ்விதமானது. ஆனால் நம் ஊர்களில் நேர அளவினை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொருமுறையும் பயணிப்பது மிகுந்த ஆபத்தானது. காரணம், இங்கு எப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும், எப்போதும் சாலை செப்பனிடப்படும் என்பதையெல்லாம் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கூகுள் மேப் காட்டும் சராசரி நேரத்தைவிட முன்கூட்டியே சென்றடைவதை ஒருவித வெற்றியாகக் கருதுவோரும் இங்குண்டு. 

நமக்கு அனுபவம் உள்ளது, நமக்கு எதும் நடக்காது, சரி செய்துதான் பார்ப்போமே என்பது போன்ற நம்பிக்கைகள்தான் பல தருணங்களில் பெரும் துயரினைக் கொண்டுவந்துள்ளன. இது சாலை விபத்துகள் முதல் சாகச விபத்துகள் வரைப் பொருந்தும்.




யாருடைய உரையாடல் என்று நினைவில்லை. சமீபத்தில் கேட்டதில் ஆழப்பதிந்த உரையாடல் அது. ”எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது. அந்த வாழ்வில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்வேன். ஆனால் ஒருபோதும் சாகசம் என்ற பெயரில் ரிஸ்க் எடுக்கமாட்டேன்!” இது பலருக்குமான பாடம் என்றால் மிகையல்ல.

விபத்துகளினால் உறவு மற்றும் நட்புகளில் இழப்புகளைச் சந்தித்தவர்களை கணிசமாக நாம் அறிந்திருப்போம். அந்தக் குடும்பங்களின் நிலை விபத்துக்கு முன், விபத்துக்குப் பின் என மாறியிருப்பதையும் கண்டிருப்போம். அந்த மாற்றம் ஒருபோதும் கற்பனை செய்திடாதது. விபத்துகள் உயிர்களைக் கொய்திடும்போதே, துயரங்களை விதைத்து விடுகின்றது.

நாம் அறிந்த விபத்துகளின் பட்டியலை எடுத்து அதன் தன்மைகளை மேலோட்டமாகப் பார்வையிட்டாலே, அவற்றில் மிகப் பெரும்பான்மையானவை மிக நிச்சயமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

எல்லாருக்குமே தாம் செய்யும் தவறு தெரியாமலோ, புரியாமலோ இல்லை. ஆனாலும் அதனைத் தொடர்ந்து செய்வதற்கு, அவர்களிடம் சில காரணங்கள் இருப்பதுண்டு. அவற்றில் மிக முக்கியமான காரணம் ‘நான் அப்படித்தான் செய்வேன்!’ எனும் மனோபாவம். அந்த மனோபாவத்திற்கு ‘நான் இப்படித்தான்!’ என தன்னை தவறாக வரையறுத்துக்கொள்வதும் ஒரு காரணம். சூழலுக்கும், காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ப என்னை தகவமைத்துக்கொள்வேன் என்றில்லாமால், நான் என்றால் இப்படித்தான் என வரையறுத்தல் வெறும் வீம்பு மட்டுமே. வீம்பு செழித்து வாழும் இடங்களில், ஒருபோதும் அறிவு உயிர்ப்புடன் இருப்பதில்லை.

Dec 3, 2019

வகைகள்


கையருகே இருக்கும் இந்த சதுரத்துண்டு கடலை மிட்டாய் மழை ஈரத்திற்கு லேசாய் பிசுபிசுக்கிறது. கடலை மிட்டாய் முன்பு போலெல்லாம் இல்லை. முந்தைய காலத்தில் வாழ்ந்து இந்தக் காலத்திற்கு வந்துவிட்டவர்களுக்கென்றே இருக்கும் பிரத்யேகப் புகார் இது. எதைப் பார்த்தாலும் முன்பு போல் இல்லை எனும் இத்துப்போன ஒப்பீடு. இப்போது புகார் கூறுமளவிற்கு முந்தையை தலைமுறைகள் புகார் கூறியதா என்பது தெரியவில்லை.

சரி முன்பு போல் ஒன்று இல்லையென்றால்....!

இப்போதைய கடலை மிட்டாய் தயாரிப்பில் ஏதோ ஒரு இயந்திரத்தனம் தெரிகின்றது. அந்த இனிப்பில் ஈர்க்கும் ருசியில்லை, கடலையில் வறுபட்ட மணமில்லை. அதுவும் ஒரு துண்டினை தனியே பாலித்தின் கவரில் இட்டு சாக்லெட் போல ஏதோ ஒரு நிறுவனம் சந்தைப்படுத்துகிறது. புதிதாய் ருசிப்பவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை, காலங்காலமாய் கடலையோடு புழங்கியவர்களுக்கு சகிக்க முடியாதொரு ருசி அது.
பேச விரும்பியது, கடலை மிட்டாயின் ருசி, மணம், தரம் குறித்தல்ல. அதைச் சாப்பிடும் விதம் குறித்தே... பொதுவாக கடலை மிட்டாயை எப்படிச் சாப்பிடுகிறோம்!? அது சாப்பிடுவதா - ருசிப்பதா!?

* வாயில் போட்ட கணத்தில் கடக்முடக்கென கடித்துக் குதப்பி விழுங்கி, அடுத்தடுத்த துண்டுகளை அள்ளிப் போட்டுச் சாப்பிடுவது ஒருவகை. 😂

* மிட்டாயை உள்வாங்கியவுடன் மென்றுவிடாமல் கடைவாயில் அடக்கி, நனைத்து, ஊறவைத்து கடலை பிசிறுகளோடு சொட்டுச் சொட்டாக இனிப்பைக் கவர்ந்து முற்றிலும் ருசித்துவிட்டு சக்கையாய் மிஞ்சும் கடலைக் கூட்டை சவசவ என மென்று விழுங்குதல் அல்லது அதை மட்டும் துப்பிவிடுதல் இன்னொரு வகை. 😇

* வாயில் போட்டதை இரண்டு துண்டுகளாக்கி இடமும் வலமும் அடக்கி, நெல்லிக் கனியை கடைவாயில் அதக்கிக் கொறிப்பது போல், இனிப்பைக் கொஞ்சம் கறந்து, அதற்கு இணையாக ஒரு கடலையை மெல்லத் தகர்த்து உள்ளிழுத்து கடைவாய் பற்களில் மென்று, சரிவிகிதத்தில் ரசித்து ருசிக்கலாம். 😋 இதுவும் ஒரு வகைதான்.

இன்னும்கூட உண்ணும், ருசிக்கும் அனுபவங்கள் இருக்கலாம். எல்லாமே நம் விருப்பம்தான். கடலை மிட்டாய் என்ன சொல்லிவிடப்போகிறது. தன்னை இப்படித்தான் உண்ண வேண்டும், ருசிக்க வேண்டுமென எதுவும் பொட்டலத்தின் மீது விளக்கமுறைகளை அச்சிட்டு வைத்திருப்பதில்லை.

கடலை மிட்டாய் போலத்தான் நிகழ்கால வாழ்க்கையும்!



Mar 14, 2018

ஆகச்சிறந்த உதாரணங்கள்


சவால்களும், இழப்புகளும், துன்பங்களும், தோல்விகளும் வாழ்க்கையை உறைந்துபோகப் பணிக்கும் தருணங்களில், குலைந்து நிற்பவர்களிடம் பகிர்ந்துகொள்ள இந்தக்கணத்தில் உயிரோடு இருப்பதற்காக நிம்மதி கொள்ளுங்கள். உயிரோடு இருந்துவிட்டால் எங்கிருந்தும், எதை நோக்கியும் இன்னொருமுறை துவங்கிவிடலாம்எனும் சொற்கள் என்னிடமுண்டு. உயிரோடு இருப்பதே போராட்டமாய் இருந்துவிட்டால்? இந்த வாழ்க்கையின் அதிகபட்ச தேவை உயிரோடு இருப்பதுதான். 

மரணத்தை தண்டனையாக, விடுதலையாக, தப்பித்தலாகக் கருதுவோர் உண்டு. கனவுபோல் எல்லோரையும் மரணத்தின் அண்மை உரசிப் பார்க்கவே செய்கின்றது. சிலருக்கு அது நீள் கனவாய் அமைந்து நிஜமாய் மாறிவிடுகிறது. மரணம் கண்ணுக்குத் தெரியாத வரைக்கும்தான் வாழ்க்கையில் சுவாரஸ்யங்கள். மரணம் கண்ணுக்குத் தெரிந்துவிட்டால்? மரணம் அண்மித்துவிட்டதென அறிவிக்கப்படும்பொழுது, வாழ்க்கையை அதன் முழு நீள அகலத்திற்கும் வாழ்ந்துவிட எத்தனை பேரால் இயலும்

மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் எல்லோருக்கும் பொதுவான அறிவிப்பாக தன்னை அறிவித்து விடுவதில்லை. மற்றவர்கள் வாழ்வதற்காக சுவாசித்தால், மரணம் அறிவிக்கப்பட்டவர்கள் சாகாமல் இருக்கச் சுவாசிக்கிறார்கள். சேலம் மாநகரத்தின் வரலாற்றில் புதிதாய் இணைக்கப்படும் பக்கங்களில் மஸ்குலர் டிஸ்ட்ரோபிஎனும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நம்பிக்கை மனுஷிகளுக்குஇடம் கொடுத்தே தீரவேண்டும். 

பதின்ம வயதிலிருந்த வானவன் மாதேவியை தசைச்சிதைவு நோய் முதலில் தன்வசப்படுத்தத் தொடங்குகின்றது. அடுத்து தங்கை வல்லபியும் நோயின் பிடிக்குள் சிக்குகிறார். அக்காவுக்கு என்ன நடக்கிறதோ, அதுதான் தனக்கும் நடக்கும் எனும் பக்குவம் மட்டுமே வல்லபிக்கு கூடுதல் ஆறுதல். கருணையற்ற நோய் அவர்களை முற்றிலும் முடக்கி விடுகிறது. பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்குச் சிரமப்பட்டுச் சென்றவர்கள், முடியாமல் மேற்படிப்பை வீட்டிலிருந்தே தொடர்கிறார்கள்.

நிற்க, நடக்க, கைகளைக்கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு நோய் அவர்களைத் தன் வயப்படுத்திக் கொள்கிறது. போன் பேசக்கூட கைகளை உயர்த்த முடியாத நிலையில், போனை காதருகே பிடிக்க மற்றவரின் உதவி தேவைப்படுகிறது. பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் முறையில் வாதையை மென்று விழுங்குகிறார்கள். தங்களைப் போன்றே பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு உதவிட ஆதவ் அறக்கட்டளைஎனும் அமைப்பைத் துவங்கி அதன் மூலம் சிகிச்சை மையம் நடந்துகின்றனர். 

பாதிக்கப்பட்ட ஏழைப் பிள்ளைகளை, தங்கள் செலவில் அழைத்து வந்து, இயன்ற சிகிச்சைகளை அளிக்க ஏற்பாடு செய்கின்றனர். தசைச்சிதைவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒருங்கிணைந்த மையம் ஒன்றினை பெரும் நிதியீட்டலின் மூலமாகத் தற்போது அமைத்து வருகிறார்கள். அந்த மையத்திற்காக நிதி திரட்டுகையில், பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றின் சமூகப் பங்களிப்பு நிதியைப் பெற்றுத் தர நான் முன்வந்தேன்.



‘‘பன்னாட்டு நிறுவனங்களின் உதவியை நாங்கள் ஏற்க மாட்டோம்என நிர்த்தாட்சண்யமாக மறுத்த உறுதி கண்டு வருந்தினாலும், வியந்து போனேன். சகோதரிகளின் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, உதவும் குணத்தை ஆவணப்படுத்தும் நோக்கில், ஆவணப்பட இயக்குனர் கீதா இளங்கோவன் 2014ம் ஆண்டு நம்பிக்கை மனுஷிகள்எனும் ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார். இருபதுகளில் இருக்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ஸ்டீபனுக்கு கணிதம், இயற்பியலுடன், ‘ஜேன் வைல்டுமீதும் காதல் வருகிறது. 

ஒருநாள் நடை பிறழ்ந்து கீழே விழுந்து அடிபடுகிறார். மருத்துவர் மோட்டார் நியூரான்எனும் நரம்பியல் இயக்க நோய் தாக்கியிருப்பதாக தெரிவிக்கிறார். கைகள், கால்கள், மற்ற அங்கங்கள் ஒவ்வொன்றாக முடங்கும்; இன்னும் இரண்டு வருடங்கள் மட்டுமே உயிரோடு இருக்கமுடியுமென தேதி குறிக்கிறார். ‘‘மூளை வேலை செய்யுமா?’’ எனக் கேட்க, “பாதிப்பில்லைஎன்கிறார். 



ஸ்டீபன் தனித்திருக்க விரும்புகிறார். தன்னைத் தேடுவோரிடமிருந்து தப்பிக்க வீட்டிற்குள்ளேயே முடங்குகிறார். வீட்டிற்கு வரும் ஜேனை போகச் சொல்கிறார். உறுதியான மனநிலையோடு ஜேன் தன் காதலைப் பகிர, மனதளவில் மீள்கிறார். திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. கால்கள், கைகள், உடல் இயக்கம், பேச்சு, உணவு உட்கொள்ளல் என ஒவ்வொன்றாய் முடங்குகின்றன. கருந்துளைகள் குறித்த அவரது ஆராய்ச்சிக் கட்டுரை பெரும் பாராட்டைப் பெற்றுத்தருகிறது. 

இனி நடக்க முடியாது என்பதை உணரும் ஸ்டீபன் சக்கர நாற்காலிக்கு மாறுகிறார். இரண்டாவது குழந்தை பிறந்த சூழலில் கருந்துளைகள் குறித்து அவரின் கோட்பாடுகள் உலகப்புகழ் பெற்றவராக மாற்றுகிறது. குழந்தைகள், கணவனின் உடல்நிலை, அவரின் புகழ், சூழல், தன் கனவை அடையமுடியாத இயலாமை ஆகியவற்றால் களைத்து அயர்ச்சியடைகிறார் ஜேன். இசையாசிரியர் ஜோனாதன் பிள்ளைகளுக்கு பியானோ கற்றுத்தர வீட்டிற்கு வருகிறார். 

ஜோனாதன், ஸ்டீபனின் குடும்ப நட்பாகி அவர்களோடு நேரம் செலவழிக்கிறார். ஸ்டீபனுக்கு பெரிதும் உதவியாய் இருக்கிறார். இந்நிலையில் மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு தந்தை ஸ்டீபனா அல்லது ஜோனாதனா என ஸ்டீபனின் அம்மா கேட்க, அதிர்ச்சியடைகிறார் ஜேன். அந்த உரையாடலைக் கேட்கும் ஜோனாதன் வருத்தத்தோடு விலகிச் செல்கிறார். ஜோனாதனின் நட்பை இழக்க விரும்பாத ஸ்டீபன் அவரைத் தேடிச்சென்று அழைக்கிறார்.

உடல் பாதிப்பு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறது. தொண்டையில் துளையிட்டு குழாய் பொருத்தப்பட்டதால், பேசும் திறனை முற்றிலும் இழக்கிறார். சக்கர நாற்காலியில் கணினியின் ஸ்பீச் சின்த்தசைஸர்இணைக்கப்படுகிறது. அதன் துணைகொண்டு அவர் எழுதும் ‘‘தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்நூல் உலகளவில் விற்பனையில் சாதனை புரிகிறது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழமுடியுமென விதிக்கப்பட்ட ஸ்டீபன், ஜேனின் துணையோடு முப்பதாண்டுகளைச் சிறப்பாக வாழ்ந்து கடக்கிறார். 

அதுவரை அர்ப்பணிப்போடு தன்னைக் கவனித்த ஜேனை அன்பின் காரணமாய் தன்னிடமிருந்து விடுவிக்க விரும்புகிறார். சூழலையும் அவர் மனநிலையையும் புரிந்துகொள்ளும் ஜேன் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று ஜோனாதனுடன் இணைய, செவிலியராக வந்த எலைனுடன் காதல் கொண்டு இணைகிறார் ஸ்டீபன். நிறைந்த அரங்கொன்றின் மேடையில் ஸ்டீபன் உரையைத் துவங்கும்போது, முதல் வரிசையிலிருக்கும் பெண்ணொருவர் பேனாவைத் தவறவிடுகிறார். 

தாம் எழுந்து சென்று அதை எடுத்து அந்த மாணவியிடம் தருவதாகக் கற்பனை செய்யும் ஸ்டீபன், நோய் அவரை இத்தனையாண்டு காலம் எவ்வாறு முடக்கிப் போட்டது எனக் கலங்குகிறார். உரையில் மனித முயற்சிகளுக்கு எல்லைகளேதும் கிடையாது. ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். வாழ்க்கை எவ்வளவு மோசமானதாகத் தெரிந்தாலும், அதில் செய்வதற்கும் வெல்வதற்கும் ஏதோ இருக்கிறது. வாழ்க்கை இருக்கும்போது, நம்பிக்கையும் இருக்கும்என்கிறார்.



உலகப்புகழ் பெற்ற இயற்பியல் கோட்பாளரான ‘‘ஸ்டீபன் ஹாக்கிங்தம் நோயோடு ஐம்பது ஆண்டுகள் இயைந்து, 74 வயதினைக் கடந்து வாழ்கிறார். அவரின் முதல் மனைவி ஜேன் வைல்டு எழுதிய ‘‘மை லைஃப் வித் ஸ்டீபன்எனும் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு 2014ம் ஆண்டு வெளியான ஆங்கிலப் படம் த தியரி ஆஃப் எவ்ரிதிங்”, வாழ்க்கையை நம்பிக்கையின்மை கொண்டு பூட்டி வைக்கும் ஒவ்வொருவரின் கையிலும் திறவுகோல்களைத் தருகின்றது.

கிடைச்சிருக்கிற இந்தப் பிறவியில எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்லது செஞ்சிடணும்எனும் வானவன் மாதேவியும், “வாழ்க்கையென்பது ரொம்ப எளிமையானதுங்கஎனும் இயலிசை வல்லபியும், ‘‘வாழ்க்கை எவ்வளவு மோசமானதாகத் தெரிந்தாலும், அதில் செய்வதற்கும் வெல்வதற்கும் ஏதோ இருக்கிறதுஎனும் ஸ்டீபன் ஹாக்கிங்கும், வாழ்க்கை மீதான அத்தனை கேள்விகளுக்கும் பதிலாகவும், புகார்களுக்குத் தீர்வாகவும் இருப்பவர்கள்.

எதுவாகினும் வாழ வேண்டுமெனத் துணிவதற்கு நிகர் வேறெதுவுமில்லை. வாழ்ந்திடத்தான் மிகப்பெரிய மனோதிடம் வேண்டும். உடல் மீது கெடுதிகள் ஏவி விடப்படும் தருணங்களில், அதிலிருந்து தப்பிப் பிழைத்து, விரும்பிய வண்ணம் வாழ்க்கையை வாழ்ந்திட நம்மிடமிருக்கும் துணிவும், நம்பிக்கையும்தான் வாழ்க்கையின் ஆணிவேர். வாழ்க்கையில் தெளிவின்மை கொண்டோருக்கு, இரத்தமும் சதையுமான நம்பிக்கையாய், வாழ்நாள் சாட்சியங்களாய் இருப்பவர்களே இந்த வானவன் மாதேவி, இயலிசை வல்லபி, ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர். தமக்கு வழங்கப்பட்ட, பிழையாய் வழங்கப்பட்ட வாழ்க்கையில் ஒருபோதும் தம்மளவில் பிழை செய்யாமல் நேர் செய்தவர்கள். 

தம் வாழ்க்கையைப் பாடமாக்கி பதில்களையும், தீர்வுகளையும், மந்திரச் சொற்களையும், நம்பிக்கையையும் நமக்கு வழங்கிட இவர்கள் எதிர்நீச்சல் போட்டபடியே இருக்கின்றனர். அந்த எதிர்நீச்சலின் அத்தனை வாதைகளுக்கும் பின்னால் அவர்கள் நமக்களித்திருக்கும் பாடங்களை புரிந்துகொள்கிறோமா, நம்பிக்கைகளை மனதில் விதைத்துக் கொள்கிறோமா என்பது மட்டுமே நம்முன் இருக்கும் கேள்வி. இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படியான கொடுமை எனும் புதிர் கேள்விக்கு, ’மற்றவர்களுக்கான உலகின் ஆகச்சிறந்த உதாரணங்கள் இவர்கள்எனும் பதிலையே தர விரும்புகிறேன்.

-

குங்குமம் வார இதழில் எழுதிய உறவெனும் திரைக்கதை தொடரின் இறுதிக் கட்டுரை

வானவன் மாதேவி மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோருக்கு அஞ்சலிகள்

Sep 16, 2017

அடைபடும் வழித்தடங்கள்

எது வாழ்க்கைஎனும் ஒற்றைக் கேள்விக்கு, இங்கு ஆயிரமாயிரம் பதில்கள் உண்டு. அவையனைத்தும் பொருத்தமான பதில்களாகவும், சரியான பதில்களாகவும் இருக்க வெண்டுமா என்ன? சரியான பதில்கள்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதாய் வைத்துக் கொள்வோம். அப்படியான சரியான பதில்களை மட்டுமே வைத்து திருப்தியடைந்து விடமுடியுமா? ஒருவேளை தவறான பதில்கள் வரும்பட்சத்தில் என்னென்ன தீங்குகள் அல்லது இழப்புகள் நிகழ்ந்துவிடும்?

மரணித்துப்போகத் தேவையான அளவிற்கு தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு, கூடுதல் உறுதிக்கு கை மணிக்கட்டு நரம்பை அறுத்துக் கொண்டு, அதுவும் போதாதென்று இருபதுகளில் இருக்கும் ஒருவர் மாடியிலிருந்து கீழே குதித்த செய்தியொன்று மனதிற்குள் கோரமானதொரு இம்சை செய்து கொண்டிருக்கிறது. இப்படியான செய்திகளை அவ்வப்போது பலவிதங்களில் கேட்டுக் கடப்பதொன்றும் புதிதில்லை. அப்படியானவர்களில் யாரேனும் நமக்கு தொடர்புடையவர்களாய் இருப்பின், அது கூடுதல் கலக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

தன்னைக் கொல்வதற்காக இந்த மூன்று காரியங்களையும் செய்தவரை எனக்குத் தெரியும்; அல்லது அவருக்கு என்னைத் தெரியும். தம் உயிர் மீது அவர் நிகழ்த்திய கொடூரத்திற்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை. சொன்னால் அட இதுக்காகவா?’ என்று கேள்வி மிக எளிதாய் எழும். வெகு எளிதான அந்தக் காரணத்தின் பெயர் காதல். ‘அட காதல் தானா?’ என ஒற்றைச் சொல்லில் நாம் கடந்து போகப் பார்க்கலாம். காரணம் நம் அகராதியில் காதல் எனும் பதத்திற்கு கிடைக்கும் அர்த்தமும், அவர் அகராதியில் காதல் எனும் பதத்திற்கு கிடைக்கும் அர்த்தமும் வெவ்வேறானவை. கடக்க முடியாததாகக் கருதப்பட்ட தோல்வியோ, சுமக்க முடியாத ஒரு துரோகமோகூட காதலின் அர்த்தமாக இருந்திருக்கலாம். சரி அதற்காக தன்னைக் கொலை செய்துவிடுவது என்பது மட்டுமே நியாயமான பதிலா!?

எது வாழ்க்கைஎனும் கேள்விக்கு, சில வேளைகளில் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியூட்டும் பதில்கள் வந்துவிடும். இன்னும் சில தருணங்களில் ஏதேனும் ஒரு பதில் கிடைத்துவிட்டாலே  போதுமென்றும் தோன்றிவிடுகிறது. அப்படியான விரும்பும் பதில்கள் மற்றும் வந்துவிழும் பதில்களின் மத்தியில், நான் நினைக்கும் பதில் வேறு. ‘வாழ்க்கை என்பது எதிலிருந்தேனும் தொடர்ந்து கற்றுக்கொண்டே ருப்பதுன்பதாகவே அது இருக்கும்.



கற்பித்தல், கற்றுக்கொள்ளல் என்பது பள்ளி, கல்லூரி, பணியிடம் மற்றும் தேவை சார்ந்த துறைகளையொட்டியது எனும் ஒரு எண்ணத்தை தெரிந்தோ தெரியாமலோ வலுவாய் வடிமைத்துக்கொண்டுள்ளோம். ‘கற்றல்என்றாலே கரும்பலகை முதற்கொண்டு நவீன வடிவத்தில் இருக்கும் கற்பித்தல் முறை வரை மனதில் படமாய் ஓடுகிறது. ‘கற்றுக்கொள்ளல்என்பது ஒரு கட்டத்தோடு நிறைவடைந்து விடுவதாய் கருதும் மூட நம்பிக்கையும் நம்மிடம் உண்டு. வெகுசிலரே தாம் காணும் எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டு, கற்றுக்கொண்டதை வாழ்வில் செயல்படுத்தும் குணமும், திறனும் உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் சலிப்பும் புகார்களும் குறைவு.

திரைப்படங்களில் சிறிய பெண்ணாய் தோற்றத்தில் இருந்த அந்த நடிகை திருமணம் செய்து கொள்கிறார். சில ஆண்டுகள் கழித்து மடியில் குழந்தையோடு தன் படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுகிறார். உருவத்தில் பருத்திருக்கிறார். அவருடைய தற்போதைய தோற்றத்தை வைத்து இணைய வெளியெங்கும் ’நகைச்சுவை’ எனும் போர்வையில், கேலிகளும் கிண்டல்களும் வெடித்துச் சிதறுகின்றன. அப்படிச் செய்பவர்களில் யாரும், எவ்வகையிலும் அந்த நடிகையோடு தொடர்புடையவர்களும் கிடையாது. பொதுவெளியில் இருக்கும் யாரையும், எதற்கும், எவ்விதமும் தீண்டலாம் எனும் மனவெளிப்பாடு. ‘அந்த உருவ மாற்றம் என்பது தாய்மையின் விளைவு’ எனும் நிதர்சனம் யாருக்கும் புரியாத புதிரல்ல. அத்தனை கிண்டல், கேலிகளுக்கும் பதிலளிக்கும் வகையில்தாய்மையே மகிழ்ச்சி, குழந்தைக்கு அமுதூட்டுவது மகிழ்ச்சிஎன குழந்தையோடு இருக்கும் மற்றொரு படத்தை புதிதாக வெளியிடுகிறார். அவர் வெளியிட்ட படம் கிண்டல் செய்தவர்களுக்கான பதில் அல்ல; பாடம்.

எதிலிருந்தெல்லாம் கற்றுக் கொள்ளலாம், கற்றுக்கொள்வதின் அவசியம் என்ன?’ போன்ற கேள்விகள் வெகு இயல்பாகவே எழுவதுண்டு. எங்கு எவ்விதம் இந்த வாழ்க்கையை கற்றுக்கொண்டோம் என நினைத்துப் பார்த்ததுண்டா? கல்வி என்பதுதான் கற்றுக்கொடுக்கிறது எனக் கருதினால், அதுதான் ஆபத்தான பதிலாக இருக்கும். மனிதனின் சராசரி ஆயுளில் தோராயமாக நான்கில் ஒரு பங்கு காலம், கல்விக்காகவே மட்டுமே அர்ப்பணிக்கப்படுகின்றது. ஆழ்ந்து யோசித்தால் அந்தப் பருவத்தில் கற்றுக்கொள்வதும்கூட வாழ்வதற்கு என்பதைவிட பொருளீட்டுவதற்கு என்றே சொல்ல வேண்டும். அந்தக் கல்வி ஆயுட்காலம் முழுமைக்கும் வாழ்ந்துவிடும் வழிகளைத் தந்துவிடுகிறதா என்ன?

யாரோ எதன் நோக்கிலோ தயாரித்த பாடத்திட்டங்களை மையப்படுத்திய கல்வி, பல தருணங்களில் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுஎன்பதாகத்தான் உள்ளது. வாழ்க்கைக்கான கல்வியை நாம் சந்திக்கும் சூழல்களே பெரும்பாலும் கற்றுக்கொடுக்கின்றன. கிடத்தப்பட்டிருக்கும் பச்சிளங் குழந்தையொன்று குப்புற விழுவதற்கு எடுக்கும் முயற்சியில் தொடங்கி, 94ம் வயதிலும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஜான் குடெனஃப் அவர்களின் வாழ்க்கை வரை எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொள்ள ஆயிரமாயிரம் இருக்கின்றன. அம்மாதிரியான கற்றுக்கொள்ளல்களில் வழியே வாழ்வதுதான் வாழ்க்கை. ”இயற்பியல் துறையில் சாதிப்பதற்கான வயதையெல்லாம் தாண்டிவிட்டீர்கள்என 25 வயதில் பல்கலைக் கழகத்தில் ஒதுக்கப்பட்ட ஜான் குடெனஃப், தம் 57ம் வயதில் லித்தியம் பேட்டரியை கண்டுப்பிடித்ததும், 94ம் வயதில் மற்றொரு வகை பேட்டரிக்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்திருப்பதும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தானே!?



ஒரு அப்பாவும் மகளும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். வலது பக்க சாலை ஓரமாய் காரொன்று முன்பக்கம் நசுங்கி நிற்கிறது. கூட்டம் பரபரப்பாக கூடிக்கொண்டிருக்கிறது. காரின் பின் பக்கம், சுமார் நூறு மீட்டர் தொலைவில் ஒரு பைக் சிதறிக் கிடக்கிறது. அருகில் மடியில் ஒரு இளைஞனின் தலையைத் தாங்கியபடி இன்னொரு இளைஞர் கதறிக் கொண்டிருக்கிறார். அந்த அப்பாவும் மகளும் தங்கள் அவசரத்தையொட்டி கடந்து செல்கிறார்கள். சிறிது நேரத்தில் எதிரிலிருந்து 108 ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்து கடக்கிறது.

அதே அப்பாவும் மகளும் சில நாட்கள் கழித்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுப் பேருந்து ஒன்று தாறுமாறாய்த் திரும்பி நிற்கிறது. கூட்டத்தின் கவனம் பேருந்தின் மீது பதிந்திருக்கிறது. கடக்கும்போது முன் சக்கரத்திற்கும் பின் சக்கரத்திற்கும் இடையே தலை நசுங்கிய ஒரு முதியவர் கிடக்கிறார். விபத்தின் விபரீதம் புரிந்தது. அந்த இடத்தையும் மௌனமாய்க் கடக்கிறார்கள். அதிர்ச்சி மெல்ல மெல்லத் தேய்கிறது.

அன்றிரவு மகள் சொல்கிறாள்அப்பா இனிமே அந்த மாதிரி ஆக்ஸிடெண்ட் எதும் பார்த்தா, ஹெல்ப் பண்றமோ இல்லையோ ஒரு ரெண்டு நிமிசம் நின்னு, யாரு, என்ன, ஏதுனாச்சும் பார்த்துட்டு போலாம்பா!” ஒரு விபத்து நடந்த இடத்தில் சற்று கூட்டம் கூடியதுமே, ‘அதுதான் கூட்டம் கூடிவிட்டதே... நாம் மட்டும் என்ன செய்துவிடப்போகிறோம்? நமக்கு முக்கிய வேலை இருக்கிறது, நமக்கு நேரமில்லைஎனப் பல்வேறு காரணங்கள் மற்றும் சமாதானங்களை முன்வைத்து நழுவிவிடும் மனநிலைக்கு, சுருக்கெனத் தைக்கும் விதத்தில் அந்த சிறிய பெண்ரெண்டு நிமிசம் நின்னுட்டு போலாமேஎன்ற வேண்டுகோளின் மூலமாக ஆயிரமாயிரம் விசயங்களை உணர்த்திவிடுகிறாள்.

எல்லாம் எனக்குத் தெரியும்’, ‘இன்னும் புதிதாக என்ன இருந்துவிடப்போகிறது’, ‘சிலதெல்லாம் அப்படித்தான் இருக்கும்என்பது மாதிரியான மனநிலைகள் ஆபத்தானவை. ஒரு ஏரியோ, குளமோ தனக்கு வரும் நீர் வழித்தடங்களை தாமே அடைத்துக் கொள்வதற்கு ஒப்பானது இது. ஏரி, குளங்கள் ஓரிரு கால்வாய்களை மட்டுமே நம்பியிருப்பதில்லை. அந்தப் பகுதிகளில் பெய்யும் மழை நீரை தன்னை நோக்கிக் கொண்டுவரும் பல்வேறு நீர் வழித்தடங்களையும் நம்பித்தான் இருக்கின்றன. பெருங்கால்வாய்கள் நீரைக் கடத்திவர தவறும் தருணங்களிலெல்லாம் சிற்சிறு நீர் வழித்தடங்களில் கிட்டும் நீரைக் கொண்டு அவை உயிர்ப்புடன் இருக்கும். வழித்தடங்களை தொலைக்கும் ஏரி குளங்களுக்கு வாழ்வேது?. தம்மில் இருந்த நீரை ஆவியாதலில் தொலைக்கும், மாசுகளை மௌனமாய் ஏற்றுக்கொள்ளும், தன்னையே தகுதியற்றதாய் மாற்றிக்கொள்ள அனுமதிக்கும். ஒன்றுக்கும் உதவாததாய் மாறியும் போகும்.

கற்றுக்கொள்ளலை ஒதுங்க ஆரம்பிக்கின்ற தருணத்திலிருந்து வாழ்க்கை மெல்ல புளிப்பேறத் துவங்குகிறது. புளிப்பேறத் துவங்கிவிட்ட வாழ்க்கையில், உன்னத ருசியை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. வாழ்க்கையைக் கற்றல் என்பது திட்டமிடப்பட்ட பாடத்திட்டம் சார்ந்தன்று. கற்பித்தல் என்பது தூணிலிருந்தும், துரும்பிலிருந்தும் நிகழலாம். கற்றுக்கொள்தல் மிக எளிது, அறிவின் அத்தனை கண்களும் திறந்திருப்பது போதும்

-

நம்தோழி ஜூலை 2017ல் வெளியான கட்டுரை

Mar 7, 2017

கனவில் புத்தனை எதிர்நோக்கி!

அந்தக் கூட்ட அரங்கில் இருந்தவர்களிடம் சமீபத்தில் யாரேனும் கொசுவைப் பார்த்தீர்களா?” எனக் கேட்டேன். ‘இதெல்லாம் ஒரு கேள்வியா!?’ என்ற ஏமாற்றம் கிட்டத்தட்ட அனைவர் முகத்திலும் தெரிந்தது. கை உயர்த்த வேண்டினேன். கொஞ்சம் வெட்கப்பட்டபடி ஏறத்தாழ எல்லோருமே தம் கைகளை உயர்த்தினார்கள். கூட்டத்தின் பின்பக்கமாக இருந்த ஒருவர் ’இப்போதுதான் ஒரு கொசுவை அடித்தேன்’ எனச் சொல்லி இறந்த கொசு இருக்கும் உள்ளங்கையைத் ஆர்வத்தோடு தூக்கிக் காட்டினார். சிலர் சிரித்தார்கள், பலர் கை தட்டினார்கள்.

சரி சமீபத்தில் உங்களில் யாரெல்லாம் பட்டாம் பூச்சியைப் பார்த்தீர்கள்?” எனக் கேட்டேன். கேள்வி புரியவில்லை என்பதுபோல் பாவனை செய்தார்கள். ”பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, பட்டர்ஃப்ளைஎன்றவுடன் லேசாக அவர்களின் முகங்கள் மலர்ந்தன. ஆனால் ஏமாற்றமாக உதடு பிதுக்கினார்கள். இட வலமாய் தலையை ஆட்டினார்கள். வெகு சிலரே கை உயர்த்தினார்கள். அந்தக் கைகளும் கூட முழுதாய் உணர்த்தப்பட்ட கைகள் இல்லை. கேட்கின்ற வியத்திற்கு உற்சாகமாக, தெம்பாக, தெளிவாக பதில் சொல்ல விரும்புகிறவர்களின் கை உயர்த்தல் மொழி வேறு. அதில் வானை முட்டிவிடும் தினவு இருக்கும். தயக்கமாக, சந்தேகமாக பதிலளிக்க விரும்புவோரின் கைகள் எப்போதும் வளைந்தபடி மட்டுமே உயரும், இன்னும் சிலருக்கு  கை தலைக்கு மேல் உயராது.

எப்போது பார்த்தீர்கள்?” என்றேன். அவர்களில் சிலர் நேற்றும, முந்தா நாள் என்றும், இன்னும் சிலர் நாலஞ்சு நாள்’, ’ரெண்டு மூனு வாரம்’ என்றும், சிலர் பார்த்தேன் ஆனா எப்போங்கிறது மறந்துடுச்சுஎன்றும் சொன்னார்கள். சரி நீங்கள் பார்த்த வண்ணத்துப்பூச்சி என்ன செய்து கொண்டிருந்தது?. அதன் நிறம் நினைவில் இருக்கிறதா?” எனக் கேட்டேன். பெரிதாக பதில்கள் வரவில்லை. ”கொசுவை யாருக்கெல்லாம் பிடிக்கும்?, வண்ணத்துப் பூச்சியை யாருக்கெல்லாம் பிடிக்கும்” எனவும் கேட்டேன். பதில் என்ன வந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே!.

பிடிக்காத கொசுவை அத்தனை பேரும் சந்தித்ததற்கும், பிடிக்கும் வண்ணத்துப்பூச்சியை மிகச் சொற்பமாக மட்டுமே சந்தித்ததற்கும் முக்கியமான காரணம் என்ன?’ என வினவினேன். பலதரப்பட்ட பதில்களுக்குப் பிறகு வண்ணத்துப்பூச்சிகள் உலவும் இடங்களைவிட்டு, கொசுக்கள் புழங்கும் இடங்களுக்கு நாம் வந்துவிட்டோம்அல்லது, ”நாம் இருக்கும் இடங்களுக்கு வண்ணத்துப்பூச்சிகளுக்கு வேலையில்லை, கொசுக்களுக்கு வேலை இருக்கிறது” என்றும் புரிதல் சார்ந்த பதிலை எட்ட முடிந்தது.

ஏன் நாம் நகர்ந்தோம்’, ’ஏன் அவைகள் வருவதில்லைஎன்பதன் நீள அகலம் முழுவதும் நமக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் அது குறித்து யோசிக்கும் அவகாசமும் நமக்கில்லை. அதில் கணிசமான நேரத்தை நாம் கொசு விரட்டுவதிலேயே கழிக்க வேண்டியிருக்கிறது என்பதும் ஒரு கசப்பான உண்மை. கொசுக்கடி எதையும் சந்திக்காமல் ஒரு மனிதன் ஒரு நாளைக் கடந்துவிடுவதற்கென தமிழகத்தில் ஏதேனும் ஊர்கள் இருக்கின்றனவா?.




சில மாதங்களுக்கு முன்பு என் மடிக்கணினித் திரையில் சேமிக்கப்பட்ட படம் ஒன்று. அழிபடாமல் அடம் பிடித்து ஜீவித்திருக்கிறது. கணினி முகப்புத் திரையை ஒழுங்குபடுத்தும் சமயங்களில் எல்லாம் அந்தப் படத்தை நீக்க நினைத்து தோற்றுப் போயிருக்கிறேன். இத்தனைக்கும் அந்தப் படம் காணக் கிடைக்காத படம் என்றோ, ஆகச்சிறந்த படம் என்றோ சொல்லிவிட முடியாது.

அது ஆங்கில தினசரி கட்டுரை ஒன்றில் வெளியாகியிருந்த படம். பார்த்தவுடனே என்னைச் சுண்டியிழுக்கும் ஒரு வசீகரத்தன்மையைக் கொண்டிருந்தது. படத்தில் இருக்கும் இடம் மலைப் பகுதியாகவோ, மலையடிவாரமாகவோ இருக்கலாம். அழகிய ஓடையொன்று சலசலக்கிறது. கரைகளாய் இருபக்கமும் நீண்ட பசும் புற்களினாலான புதர். ஓடையின் நடுவே மேடாக இருக்கும் ஒரு சிறிய இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்து கொஞ்சம் காய்கறிகளை, கிழங்குகளை நீரில் அலசி சுத்தம் செய்யும் காட்சிதான் அந்தப் படம். அவர்கள் இருவரின் முகங்களும், அவர்கள் ஏதேனும் வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்தவர்களோ அல்லது தென்கிழக்கு ஆசிய நாட்டினைச் சார்ந்தவர்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு ஆணும் பெண்ணும் ஒரு ஓடையில் தம் காய்கறிகளைக் கழுவுகின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால் ’இந்தக் காட்சியில் அப்படி என்ன பெரிசா இருக்குஎனும் எண்ணத்தோடு எளிதாக கடந்து போய்விடக்கூடிய ஒன்றுதான். ஆனால் சற்று உற்றுப் பார்த்தால் அந்த நீரின் தூய்மையும், காய்கறிகளின் ஃப்ரெஷ்னஸ் என்று சொல்லும் புத்துணர்வுத் தன்மையும், அதில் இருக்கும் மலர்ச்சியும், அந்தச் சூழலும் நம்மில் பெரும்பாலானோர் தொலைத்துவிட்ட ஒன்றென்பது புரியும்.

நம்மில் எத்தனை பேருக்கு இப்படி முழுக்க முழுக்க இயற்கைச் சூழலில் விளையும் காய்கறிகளை, தானியங்களை, பழங்களை, கிழங்குகளை  எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இன்றைக்கு இருக்கின்றது? மனிதன் மாற்றியமைத்த நிலம் தவிர்த்து மற்ற இடங்களில் தானாய் முளைக்கும் எல்லாத் தாவரங்களும் அதனதன் போக்கில் செழிப்பாகத்தானே இருக்கின்றன. அவைகளுக்கு யாரேனும் நீரூற்றுகிறார்களா? உரம் வைக்கிறார்களா? களை எடுக்கிறார்களா? பூச்சிக்கொல்லி தெளிக்கிறார்களா? எதுவும் இல்லை. ஏனெனில் எல்லாச் செடி கொடி தாவரங்களும் இயற்கையின் பிள்ளைகள். எங்கே மனிதன் தன் முயற்சியென்று, தன் விருப்பதிற்கேற்ப உருவாக்கினானோ அப்போதிலிருந்து நீர் பாய்ச்ச, உரம் வைக்க, களை எடுக்க, பூச்சி அழிக்க என தேவைகள் பெருகின. அந்தத் தேவைகளோடு பெரும் பேராசையைப் பிசைந்து நிலத்திலும், நிலத்திலிருந்து விளைவதிலும் முடிந்த வரையில் நஞ்சினை சேர்த்துக் கொண்டு நோய்களை வரவழைத்துக் கொண்டு, பச்சை வர்ணம் அடித்த, வியாபாரம் நுணுக்கம் மிகுந்த இயற்கை அங்காடித் தேடுகிறோம். இதழ் வழியாகஇயற்கை, இயற்கைஎன செய்த பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் செய்வதுபோல் அலைந்து கொண்டிருக்கிறோம்.

இப்படி காய்கறிகளையும், கனிகளையும், கிழங்குகளையும் மட்டுமா இழந்துவிட்டு இல்லாத இடம் தேடி அலைகின்றோம். உணவாய் உண்ணும் எல்லாப் பொருட்களுக்கும் இப்படியான ஒரு மாய ஓட்டமும் தேடலும் துவங்கி வெகு காலம் ஆகிவிட்ட்து. காய்கறிகளைத் தொலைத்ததைவிட அம்மாதிரியான ஓடைகளையும், நீர் நிலைகளையும், நீர் வழிப் பாதைகளையும் நாம் தொடர்ந்து தொடர்ந்து இழந்து கொண்டேயிருக்கிறோம் அல்லது தொலைக்கச் செய்கிறோம். நாம் மரணிக்கச் செய்துவிட்டோம் என்பதுதான் இதிலிருக்கும் சுடும் உண்மை.

கடைசியாக எப்போது ஒரு ஓடையைப் பார்த்தீர்கள்?. அந்தத் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது எனும் யோசனை இருந்ததுண்டா. மெல்ல நம் பாதங்களை நழுவச் செய்யும் பாறையின் வழுக்குத்தன்மை பிடித்த பாறைகளை ஸ்பரிசித்ததுண்டா? ஓரமாகப் பாசி பிடித்துக் கிடக்கும் உதிர்ந்த இலைகளைக் கண்டதுண்டா? கால் வைத்தவுடன் ஓடி வந்து கடிக்கும் மீன் குஞ்சுகளையும், வெடுக் வெடுக்கென ஓடும் தலைப்பிரட்டைகளையும் கடைசியாக எப்போதுதான் கண்டீர்கள்?

ஆழ்துளைக் குழாயிலிருந்து மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றி, அங்கிருந்து குழாய்கள் வழியே வீடுகளுக்குள் பாய்ந்து வரும் நீரோடு மட்டுமே தொடர்பு கொண்டவர்களாக மாறிப்போய் வெகுகாலம் ஆனவர்களிடம் கால்வாய்கள், ஆறுகள், கடல் ஆகியவற்றை விடுத்து ஓடை, ஏரி, குளம் என்று கேட்கும்போது எவ்விதமான பதில்களும் கிடைப்பதேயில்லை. அப்படி தெரியாத, இல்லாத பதில்கள் குறித்து கிஞ்சித்தும் கவலையும் இருப்பதில்லை. ஏனேனில் நீர் நிலைகளுக்கும் நமக்கும் தொடர்பேதுமில்லையென்றும் நாம் நம்பிக் கொண்டிருக்கலாம்.

மனிதர்களற்ற வனத்தில் பயணித்து நீருக்கான புனிதத்தில் பிறழ்வேதும் கொள்ளாமல் வரும் ஓடை நீரை வாழ்நாளில் ஒருமுறை கூட ருசித்திடாதவர்களும் இங்குண்டு. அம்மாதிரியான இடத்தை நோக்கிச் செல்லும் போதெல்லாம்கூட சுகாதாரம்என்ற பெயரில் இங்கிருந்தே பாட்டில் தண்ணீர் கொண்டு செல்பவர்களும் இங்குண்டு.

எதை நோக்கி இந்த ஓட்டம்என்ற கேள்விக்கு, ஒவ்வொருவரும் அவசர அவசரமாக தனக்கேற்ப ஒரு இலக்கு, கனவு, ஆசை அல்லது நிர்பந்தம் என ஏதேனும் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் அந்த ஆசை, தேவை, நிர்பந்தம், கனவு, இலக்கு என எதிலும் அவர்கள் இயற்கையை விட்டு தொடர்ந்து விலகுகிறார்கள்அது குறித்த அறிதலும் தெளிதலும் கூட இல்லை.

மரத்தின் உச்சியிலோ, பாறைகளின் இடுக்கிலோ கட்டப்பட்டிருந்த தேன் கூட்டிலிருந்து தேனெடுத்துச் சாப்பிட்ட அனுபவத்திற்கும், சாலையோரங்களில் ஆங்காங்க வியாபாரிகளால் உருவாக்கி விற்கப்படும் பெட்டித் தேனீக்களின் தேனிற்கும் இருக்கும் வித்தியாசம் ருசி மட்டுமில்லை ஆரோக்கியமும்தான். இதுபோல் பட்டியலிட்டால், அதை வாசித்து யோசிக்கவே நமக்கு பல நாட்கள் பிடிக்கும்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கும், இயற்கையோடு முரண்பட்ட வாழ்கைக்கும் இடையே இருக்கும் இடைவெளிகளை நிரப்புதல் என்பது பேராசைதான். வாழ்க்கையில் பேராசையே படக்கூடாது என என் கனவில் புத்தன் வந்து சொல்லும் வரை பேராசையோடு காத்திருப்பது குறித்து கவலையேதுமில்லை.

-

பிப்ரவரி நம்தோழி மாத இதழில் வெளிவந்த கட்டுரை

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...