மதியமே, சிறப்பு விருந்தினரான நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எத்தனை மணிக்கு வருவார் என்று விசாரித்தபோது, தவிர்க்க இயலாத தன் சொந்த அலுவல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். எப்படியும் வந்து விடுவார் என்ற தகவல் மிகப் பெரிய பீதியை கிளப்பியது. ஆனாலும் கடைசியாக 7.45 மணிக்கு நாமக்கல் வந்து சேர்ந்து, ஒரு வழியாக ஈரோடு கிளம்பிவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சியான செய்தியோடு, குறித்த நேரத்தில் கூட்டத்தை துவக்கி விட்டோம்.
சட்டை அணியும் பழக்கமில்லாததால் வேட்டியும் துண்டும் மட்டும் அணிந்து வெற்று மேலோடு வந்திருந்த பெரியவர் திரு. அய்யாசாமி அரங்கத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தினார். உடன் மகள் வயிற்றுப் பேரனை அழைத்து வந்திருந்தார்.
திரு. நாகராஜன் தன் மனைவி திருமதி. பிரேமா மற்றும் பேரனுடன் வருகை புரிந்தார்.
குறிப்பாக திரு. அய்யாசாமி சொன்ன தகவல் மரம் வளர்த்த செடியாக நட்டு வளர்ப்பதைவிட, விதையாக ஊன்றி விட்டால், அது செடியாக முளைத்து வந்த பின் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய வேலை இல்லை என்ற தகவல் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.ஆட்சியர் வருகை தாமதமானதையடுத்து, வந்திருந்த மரங்களின் நாயகர்களோடு கலந்துரையாடலை ஏற்படுத்தி அந்த நேரத்தை மிக உபயோகமாக பயன்படுத்திக் கொண்டோம்.
எந்த மரம் சிறந்தது என்ற கேள்விக்கு திரு. நாகராஜன் புங்கை மரம்தான் சிறந்தது, அதுதான் அதிகப்படியான ஆக்சிஜனைத் தருகிறது என்றார்.
உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் கூட தன் உறுதியை விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டுவருவதாகக் கூறும் போது கூட்டத்திலிருந்தோர் மனமெல்லாம் சிலிர்த்தது. தான் மரம் நடப்போகும் சமயங்களில், அந்த இடங்களுக்கே உணவு, தண்ணீர் யார் மூலமாவது கொடுத்து அனுப்பும் மனைவியைப் பெற்றது வரம் என்று நெகிழ்ச்சியோடு திரு. நாகராஜன் பகிர்ந்து கொண்டார்.
மிக நீண்ட பயணத்திற்கு பிறகு கொஞ்சம் களைப்போடு வந்தாலும் கலெக்டர் திரு. சகாயம் அவர்கள் மிக உற்சாகமாகவே இருந்தார். மரங்களின் நாயகர்கள் இருவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார், கூடவே மிக எழுச்சியாக உரை நிகழ்த்தத் தொடங்கினார்.
பயணக் களைப்பாக இருப்பதால் ஒரு பதினைந்து நிமிடத்தில் முடித்து விடுவாரோ என்ற பயத்தை தவிடு பொடியாக்கி முப்பது நிமிடங்களுக்கு மேலாக உரை நிகழ்த்தி அசத்தினார். உரை முழுதும் சிறிதும் விழாவுக்கு தொடர்பானதை விட்டு விலகாமல்,முழுக்க முழுக்க மரங்களின் பிதாக்களை பாராட்டி கௌரவிப்பதையும், மரங்கள் வளப்பது குறித்த தனது அனுபவத்தையும்,அரிமா சங்கம் மரம் நடுவதை தனது இலக்காக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் திரும்பத் திரும்ப மிக எழுச்சியோடு எடுத்துக் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக மரங்களின் பிதாக்களான திரு. நாகராஜன் மற்றும் திரு. அய்யாசாமி ஆகியோருக்கு திரு. சகாயம் அவர்கள் மூலம் நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
அடுத்து கடந்த மாதத்தில் கண் தானம் அளித்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு திரு. சகாயம் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான பெருமை மிகு விழாவில் பதிவுலக நண்பர்கள் கேபிள் சங்கர், பாலாசி, அகல்விளக்கு ராஜா, காலப்பயணி வசந்த்குமார் மற்றும் திருப்பூர் பதிவர் நிகழ்காலத்தில் சிவா தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மிகச் சிறந்த மனிதர்களான திரு. சகாயம் ஐ.ஏ.எஸ், திரு. அய்யாசாமி, திரு. நாகராஜன் ஆகிய மூன்று பேரை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி மகத்தான விழா எடுத்த, என்னுடைய ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்.
வாழ்நாளில் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொருவிதமாக கழிந்திருக்கின்றன. வீணாக கழிந்த பொழுதுகளும் உண்டு, பொன்னான காரியங்களை, நினைவுகளை பதித்து விட்டுப் போன பொழுதுகளும் உண்டு. நேற்றைய பொழுது என் வாழ்நாளில், ஒரு மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்திப்போன பொழுது. எல்லாம் நிறைவடைந்து படுக்கையில் சாய்ந்த போது, நீண்ட நேரம் பிடித்தது மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்து உறக்கத்தை கைக்கொள்ள.
திரு சகாயம் I.A.S. அவர்களின் பாராட்டுரை
|