Showing posts with label தண்ணீர் சேமிப்பு. Show all posts
Showing posts with label தண்ணீர் சேமிப்பு. Show all posts

Apr 2, 2010

தண்ணி காட்டும் தண்ணீர்

நகர்புறங்களில் தண்ணீர் (இது குடிநீர் அல்ல என்று எழுதிக்கொண்ட) லாரிகள் தீயாய் பறப்பதை ஒரு வித பயத்தோடு பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.

சொந்தமாக ஒன்று, இரண்டு, மூன்று என நிலத்தை பணத்தால் துளைத்து சக்தி மிகுந்த இயந்திரத்தால் நீரை இறைத்துக்கொள்ளும் வசதி படைத்த மனிதர்களுக்கு கோடைகால வறட்சி ஒன்றும் பெரிதாக சுட்டு விடப் போவதில்லை. அப்படியே ஆழ்துளைக் குழாய் அமைதி காத்தாலும் இருக்கவே இருக்கின்றது, விவசாயத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு தண்ணீர் விற்கும் சில நவீன வியாபாரிகளின் கிணறுகளில் நூறுகளுக்கு வாங்கி, வரும் வழியில் அதை ஆயிரமாக்கி, வீடு தேடி வந்து ஆழமான, அகலமான தொட்டியில் நிரப்பிவிட்டுப் போகும் தண்ணீர் லாரிகள்.

வழக்கம் போல் கோடை காலம் தன்னோடு உறிஞ்சிக் கொண்டு போவது சாமானியர்களுக்கான கங்கையான பொதுவில் போடப்பட்டிருக்கும் குழாய் தண்ணீரையும், அருகில் இருக்கும் ”அமுத்துப் பைப்” தண்ணீரையும் மட்டுமே.

சில வாரங்களுக்கு முன், மீன் கொத்திகள் விளையாடிய ஏரிகளின் மையத்தில் காக்கைகளும், கழுகுகளும் அடிவண்டல் சேற்றில் அழுகிக்கொண்டிருக்கும் மீன்களை கொத்தியெடுக்க முகாமிட்டிருக்கின்றன.

கிராமங்களின் உள்ளடக்கிய தோட்டத்து கிணறுகளை நோக்கி நடுத்தர வயதினரின் இரட்டைக்குட நடை பயணமும், எங்கோ தெரியும் கானல் நீரை நோக்கி நீண்ட கேரியரில் பக்கத்திற்கு இரண்டென நான்கு குடங்களோடு சைக்கிள் பயணமும் துவங்கிவிட்டது.

ஆனால் தொண்டையில் மாட்டிய முள்ளாக தவிப்பது நகர்புறத்தின் நெரிசலில் மாட்டிய லைன் வீடு மற்றும் சாக்கடையோரம் கொசுக்களோடு மல்லாடும் மிகச் சாதரணமான குடும்பத்தினர்தான்.

பணத்தை ஊதாரியாய் செலவு செய்வதை தண்ணியாய் செலவழிக்கிறான் என்பது வழக்கம். ஆனால் தண்ணீரை தண்ணியாய் செலவு செய்ய முடியாத யுகத்தில் பெருமை மிகு வாழ்வு வாழ்கிறோம்.

வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் வீணாக்குவது அவர்களுக்கு சொந்தமானதை மட்டுமல்ல. வசதியும் வாய்ப்பும் கிட்டாத மிகச் சாதாரணமாய் இருக்கும் மனிதர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதைத்தான் தட்டிப் பறித்து வீணடிக்கப்படுகிறது.

இலவசமாய் இயற்கை அள்ளித்தரும் தண்ணீரை காசு இருப்பவன் கையகப்படுத்தும் போது, காசு இல்லாதவன் தனக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய தண்ணீரின் உரிமைக்கே அந்நியப்பட்டுப் போகிறான். காசு கொண்டு கையகப்படுத்தியவன் தண்ணியாய் செலவழிக்கிறான், அது தண்ணியாகவே இருந்தாலும்...

சரி... இந்த ஓலமும், புலம்பலும் எதற்காக என்ற கேள்வி வருகிறதா?

இதற்கு நானும் நீங்களும் என்ன செய்யமுடியும் என்ற கேள்வி வருகிறதா?

மரம் நடுவது, மழைநீர் சேகரிப்பது இன்ன பிற விசயங்களையெல்லாம் இந்தக் கோடையைத் தாண்டி செய்வோம்.......

அதற்கு முன் உடனடியாக நானும் நீங்களும் செய்ய வேண்டியது. நம் வீட்டில் இருக்கும் தண்ணீரை தண்ணியாய் செலவு செய்யாமல், கொஞ்சம் சிக்கனம் கடை பிடிப்போம்...

இன்று நம்மிடம் இருக்கிறதே என்று அலட்சியமாக கொட்டி வீணடிக்கும் தண்ணீருக்காக, எங்கோ ஒரு மனிதன் வறண்ட தொண்டையோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை வரட்டும்.
அலட்சியமாய் கவிழ்த்து விடும் நீர், ஒரு செடியின் வறட்சியையோ, ஒரு கால்நடையின் பசியை தீர்ப்பதாய் அமையும் என்பதை உணர்வோம்.

  • கை கழுவ, பல்துலக்கும் பிரஷ்சை கழுவ என அருவியாய் திறந்து விடுவதை
  • நீரில் முகத்தில் நனைத்து விட்டு, சோப்பு போட்டு வரக்கு வரக்கென தேய்த்து முடிக்கும் வரை திறந்து விடுவதை
  • ஷவரில் குளிக்கிறேன் பேர்வழியென மனசாட்சியில்லாமல் பல குடம் தண்ணீரை வீணடிப்பதை
  • வீட்டுத்தோட்டத்தில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி வீணடிப்பதை
  • மேல்நிலைத்தொட்டி வழிந்தோடினாலும் கண்டு கொள்ளாத அலட்சியத்தை

குறைந்த பட்சம் இந்த கோடை கழியும் வரையிலாவது நிறுத்துவோம். முடிந்தால் முற்றிலும் வேரறுப்போம். முடிந்தால்... என்ன முடிந்தால்?. முடியும்.


________________________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...