Showing posts with label கோவில்கள். Show all posts
Showing posts with label கோவில்கள். Show all posts

Oct 14, 2010

நீர்த்துப்போகும் சுயம்


அவசியமில்லாத போதும் கூட வன்முறையை பிரயோகிக்கும் இனம் மனித இனமாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் ஆறாவது அறிவு என்று மனிதன் சொல்லிக்கொள்வதின் நீட்சியோ? எந்தவொரு மிருகமும் தன் பசிக்கும், பாதுகாப்பிற்கும் தவிர்த்து சக விலங்குகளையோ, மனித இனத்தையோ தாக்குவதோ, கொல்வதோ இல்லையென்றே சொல்லலாம்.

மனிதன் மட்டுமே, தனக்கு ஆறு அறிவு இருப்பதாக (“மனிதன் மட்டும்தான் தனக்கு ஆறு அறிவு என்று சொல்லிக்கொள்கிறான், இது வரை அதை ஒரு நாய் கூட அங்கீகரித்ததில்லை” என பாரதிகிருஷ்ணகுமார் மேடைகளில் சொல்வதுதான் நினைவுக்கு வருகின்றது) தானே சொல்லிக்கொண்டு, அதுவும் அதை பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு தொடர்ந்து தொடர்ந்து சக மனிதனுக்கும், மற்ற விலங்குகளுக்கும் கொடுத்து வரும் தொல்லைகள் பட்டியிலிட்டாலும் அடங்காது.

ஏதேதோ காரணங்களைச் அடுக்கடுக்காய்ச் சொல்லி, விதவிதமாய் விலங்குகளை வைத்து விளையாடும் வக்கிரங்களின் தொடர்ச்சியில், பரிதாபமாக இருப்பது பிரமாண்டமான தோற்றமும், எதையும் விட வலிமையும் கொண்ட யானைகள் தலை தடவி தன் முதலாளிக்காக காசு கேட்கும் யானைகளை பார்க்கும்போதுதான்.


பரந்த காடுகளில் சுதந்திரமாய்ச் சுற்றி திரியவேண்டியவை, குறுகிய பரப்புக்குள் அடங்கிய கொட்டிலிலேயே தீனி தின்று, அங்கேயே சாணி, மூத்திரம் கழித்து, எல்லாச் சுதந்திரத்தையும் முழுக்க முழுக்க இழந்து, குட்டியானையாக இருக்கும் போது தன்னைக் கட்டிப்போட்டதன் மூலம் அடிமைப்படுத்திய சங்கிலிக்கு, இன்றும் மனதிற்குள் பயந்து, ஒவ்வொரு அசைவுக்காவும் அங்குசத்தால் குத்துவாங்கி, யாரோ விழி விரியப் பார்த்து கைகொட்டிச் சிரிக்க, எவனோ தன் வயிற்றையும், குடும்பத்தையும் வளர்க்க பிச்சையெடுப்பதைக் காணும் போது, எல்லாம் இருக்கும் இடத்தில் இருப்பதுதான் நல்லது என்ற எண்ணத்தை தவிர்க்க முடிவதில்லை.



தனக்கு சற்றும் பழக்கமில்லாத நகர்ப்புறத்துக் கோவில்களில், இடைவிடாது காதுகளை ஆட்டிக்கொண்டும், விதவிதமாய் அலங்கரிக்கப்பட்டும், ஒற்றைக் காலின் பருமன் கூட இல்லாத பாகனின் அங்குசத்திற்கு அடிமை போல் நின்றிருக்கும் அவலம், அதுவும் கடவுளின் உருவமாக நினைக்கும் நம்பிக்கையுள்ளவர்களே, அதை அதனதன் இடத்தில் இயற்கையாய், சுதந்திரமாக விட்டுவைக்க மனமில்லாத முரண்பட்ட முட்டாள்தனத்தின் பிம்பமாக தெரிவதை கசப்போடு மனம் உள்வாங்குவதை தவிர்க்க முடிவதில்லை.

சாலைகளில் மெதுவாக அசைந்த அசைந்து மணியோடு போகும் யானைகளை ஒரு காலத்தில் ரசித்து வேடிக்கை பார்த்ததுண்டு. அழகாய் ஆடும் சின்ன வாலை தொட்டுப்பார்க்கவும், இறுகிக்கிடக்கும் யானைத்தோலை தீண்டி உணர்ந்து  பார்க்கவும் விரும்பியதுண்டு. வயது கரைந்து போன நிலையில், எங்காவது கோவில்களில், சாலைகளில், ஆடம்பர விழாக்களில் யானைகளைக் காணும் போதெல்லாம், ரசிப்பதைக் காட்டிலும், ” ம்ம்ம்ம்.... எங்கே, எப்படியிருக்க வேண்டியவை” என்ற பரிதாபத்தோடு, வாழ்ந்து கெட்ட குடும்பங்களில் சூழ்ந்து கிடக்கும் அமைதி சுமக்கும் இருள் போல் மனதிற்குள் இருள் கவ்வத் தொடங்குவதை உணராமலில்லை.

காலம் காலமாய் தன் சுயத்தை இழந்து கொண்டேயிருக்கும் மனித சமூகம், இதுதான் மிருக குணம் எனப் பட்டியலிட்ட குணங்களை தனக்குள்ளே துளித்துளியாய் சேமித்து, அதை மழுங்கடிக்கப்பட்ட மிருங்களின் மீது பிரயோகிப்பதில் வெற்றியும் ஈட்டுவதின் பின்னணியில் நீர்த்துப்போகும் சுயம் குறித்து மனிதனுக்கு துளியும் அக்கரையில்லை. 

சாலைகளில் மதம் பிடித்த யானை நடத்தும் ருத்ரதாண்டவம் திணிக்கும் பயத்தையும், காடுகளில் தன் உறவை பிரிந்த, தொலைத்த ஒற்றை யானையின் கடுங்குரல் ஊட்டும் வலியையும் ஒருமுறை உணர்ந்து விட்டால், யானைகளை யானைகளாவே விட்டுவைக்கும் பக்குவம் மனிதனுக்குள் துளிர்க்கத் தொடங்கிவிடும்.
________________


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...