நாங்கெல்லாம் ஒரு காலத்தில் 'எப்படி இருந்தவங்க!’ தெரியுமாடே!”

வங்கிக்குச் செல்ல வேண்டிய முக்கியமான ஒரு காரணத்தை முடிந்தவரை தள்ளிப்போட்டு, அது மிக மிக மிக மிக மிக முக்கியம் என்றான சூழலில் போய்ட்டு வந்துடுவோம் என்று கிளம்புகையில் இரண்டு பார்சல்கள் அனுப்ப வேண்டியது நினைவுக்கு வந்தது. #வேட்கையோடு_விளையாடு வேண்டுமென பணம் செலுத்தியவர்களுக்கு மார்ச் மூன்றாம் வாரத்தில் தயாரித்து வைத்த பார்சல்கள்.
வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவு வங்கிக்கு. அங்கிருந்து 150 மீட்டர் தொலைவு தபால் நிலையத்திற்கு.
யாருமே இருக்க மாட்டார்கள் என நினைத்த தபால் நிலையத்தில் மூன்று பேர் வரிசையில் காத்திருந்தார்கள். ஒருவர் உடனே சென்று விட, அடுத்தவர் நீண்ட நேர காத்திருப்பிற்குப் பின் பணம் பெற்றுக் கொண்டு நகர்ந்தார். அரசு முத்திரையிட்ட கவர்களை கத்தையாக வைத்திருந்த பெண் மாஸ்க் அணிந்திருக்கவும் இல்லை. தபால் நிலையத்தின் எந்தவொரு பாகத்தைத் தொடுவது குறித்தும் அவர் கவலைப் படவும் இல்லை. அதீத இயல்பு நிலையில் இருந்தார்.
அவரும் நகர்ந்த பிறகு என் முறை வந்தது. பார்சல் என்பதால், கதவு திறந்துதான் கொடுக்க வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பியதில் இருந்து எதையும் தொடவில்லை எனும் கவனத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.
கைப்பிடியைத் தொடாமல் லாவகமாக கதவைத் திறந்து எடை இயந்திரத்தின் மீது பார்சல்களை வைத்து, அவற்றிற்கு சரியான தொகையையும் வைத்துவிட்டு, வெளியே வரும்போது அந்தக் கதவை சாத்துவதுதான் முறை. இப்போது லாவகம் பலிக்கவில்லை. ஆகவே இடது கை ஆட்காட்டி விரலால் மெல்ல இழுத்துவிட்டு. இப்போது ‘இடது கை ஆட்காட்டி விரல்’ என்பதை நினைவில் குறித்துக் கொண்டாகிவிட்டது. வாசலிலேயே தண்ணீர் பக்கெட், சோப் வைத்திருக்கிறார்கள். பக்கெட், மக், சோப் தொடுவதைவிட விரலை நினைவில் வைத்துக்கொள்வது எளிதாகப் பட்டது.
(ஷ்ஷப்பா... இப்பத்தானே ஆரம்பம்... இன்னும் எத்தனை நாளைக்கோ)
அங்கிருந்து புறப்பட்டு வழியில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே ஒதுங்கும்போதே...
“லிஸ்ட் கொடுத்துட்டுப் போங்க, நாளைக்கு காலையில் வாங்கிக்கலாம்!” என்றார் காவலர்.
“லிஸ்ட் எதும் இல்லை, கடை இருந்தா ரெண்டு-மூணு வாங்கலாம்னு நினைச்சேன்’ என்றேன்.
“லிஸ்ட் கொடுத்துட்டுப் போனீங்னா, நாளைக்கு எடுத்து வச்சுடுவாங்க. நாளைக்கு புதுசா வந்தீங்கனா அஞ்சு பொருள் தருவாங்க. இப்ப லிஸ்ட் கொடுத்தா எச்சாக்கூடா வாங்கிக்கலாம்” என்றார்.
அஞ்சு பொருட்களுக்கு மேல வாங்குற அளவுக்கா நிலைமை இருக்கு என நினைத்தபடி... “பரவாயில்லைங்க... தேங்க்ஸ்” என நகர்ந்தேன்.
வங்கி இயங்கும் சுவடே இருக்கவில்லை. நின்று நிதானித்து ஷட்டர் திறக்கப்பட்டிருப்பதை உணர்ந்துதான் கண்ணாடிக் கதவைத் தள்ளினேன். அதே இடது கை. (ஷ்ஷப்பா...)
வங்கிக் காவலர் கையில் சானிடைஷருடன் சிரித்தபடி காத்திருந்தார். கையை நீட்ட, பாட்டிலைத் தூக்கிப் பிடித்தவாறு தாராளமாக விட்டார். நன்றாக இரண்டு கைகளையும் தேய்த்துக் கொண்டு, அப்பாடா இப்போதைக்கு கை சுத்தம் என நினைத்தபோதே, வண்டியின் இடது கைப்பிடி நினைவுக்கு வந்தது. அதற்காக அவரிடம் ‘வண்டி வரைக்கும் வாங்க’னு சொல்லவா முடியும்.
நான் காசோலையைக் கொடுக்க, அவர் வாங்கி அதன் பின்புறம் முத்திரை வைத்து விபரங்களை நிரப்பச்சொல்ல, நிரப்பி இன்னொருவரிடம் கொடுக்க... இதற்கிடையில் வங்கி எண் சரியா என்று மொபைல் எடுத்து சரிப்பார்க்க, இதற்குள் சுத்தமாக(!) இருந்த இடது வலது கைகள் இரண்டும் அசுத்தம் ஆகியிருக்குமோ எனும் சந்தேகம் வர...
(அடேய்... நானெல்லாம் சில தடவை கறி விருந்தையே கை கழுவாம சாப்பிட்டவன் டா!)
வெளியேறி, போஸ்ட் ஆபிஸ் கதவைத் தொட்ட கையால் பிடித்த வண்டியின் இடது கைப் பிடியைப் பிடித்து, வண்டியை இயக்கி, வீடு வந்து சேர்ந்து...
வண்டியை நிறுத்தி அதில் வைத்திருந்த பை ஒன்றை எடுத்துக் கொண்டு, படியேறி பையை கவனமாக வெளியில் வெயிலில் போட்டுவிட்டு, உள்ளை நுழைந்து, நம் கையாலே முகக் கவசத்தைக் கழட்டக்கூடாதுல்ல...
(இன்னொரு ஷ்ஷப்பா!)
ஆன்லைன் வகுப்பில் அமர்ந்திருந்த மகளிடம், சைகையில் மாஸ்க் கழட்டச் சொல்ல, மகள் புரியாமல் விழிக்க, ஒரு வழியாக கை, புருவம், கண்கள் ஆகியவற்றின் உதவியோடு புரிய வைத்து, கழட்டி விட்டதும், வாஸ்பேசினுக்கு ஓடி ஆசையாசையாய்(!) தும்மி...
இதெல்லாம் வாழ்நாள் உரிமை பாஸ், ஒவ்வொரு நாளும் இவ்ளோனு ‘தும்மல்’க்கு கோட்டா உண்டு. அதுவும் மாஸ்க் போட்டிருந்து கழட்டிய பிறகு தும்மும் சுகம் இருக்கே.... நல்லவேளை... போஸ்ட் ஆபீஸ், பேங்க்ல தும்மியிருந்திருந்தா தெரியும் சேதி...
குழாய்க் குமிழைத் திருகி, சோப் விட்டு கையை எப்பவோ ‘யோகி பாபு’ சொன்ன விதத்தை நினைவுபடுத்திக் கழுவி, கடைசியாக குழாய்க் குமிழைக் கழுவி... ஃபோனையும் மேலோடமாகக் கழுவித்(!) துடைத்து... MI ஃபோன் ‘வூஹான்’ மாகானம் இருக்கும் சீன தேசத்தின் உருவாக்கம் என்பதால் ஒன்பது கிரங்கங்களின் உச்சம் பெறாதவர்களும்கூட கழுவலாம்... (யெஸ்... உள்குத்துதான்)
“எச்சூஸ்மீ மிஸ்/ மிஸ்டர். கோவிட்-19... நாங்கெல்லாம் ஒரு காலத்தில் 'எப்படி இருந்தவங்க!’ தெரியுமாடே!”
இ.அ.நீ.யா-1 :
இதுக்குத்தான் படிச்சுப் படிச்சுச் சொல்றாங்க... 'வெளியே போவாதே... வெளியே போவாதே’னு...
இ.அ.நீ.யா-2 :
எங்கே கை வைத்தோம், யாரு என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தாங்க, அவங்க மாஸ்க் என்ன கலர் என்பதுள்ளிட்ட பல விசயங்களை நினைவில் கொள்வதால், நினைவாற்றல் பெருகும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது
தட் கருத்து பார்ட் :
இந்தத் தொற்று கொடுங்காலம் மனிதர்கள் மீது இத்தனை எச்சரிக்கை மற்றும் சந்தேகத்தைக் கொண்டு வந்திருப்பதுதான் பேராபத்தாகத் தோன்றுகிறது. ஊறிப்போன சந்தேகத்தில் இருந்து நாம் மீண்டுவிட ரொம்ப காலம் பிடிக்கக்கூடாது என்பதே இப்போதைய வேண்டுகோள்!
- ஈரோடு கதிர்

2 comments:

Ravichandran Nallappan said...

அற்புதமான வரிகள்

Kasthuri Rengan said...

ஆங்கில பாணியில் எள்ளல் ததும்பும் நடை ஆன் ரன்னிங் ஆப்டர் ஒன்ஸ் ஹாட் நினைவில் வந்தது..

சுவை