உயிர் பூத்தவளின் முகம் போல


அடைமழை நாட்களில்
பகலில் தொடரும் மழையென்பது
எதிர்பாராக் கணத்தில்
நேசிப்பிற்குரியோர்
நமக்கு ஏதுவான நேரத்தில் வந்தமர்ந்து
விரல் கோர்த்து
விழி நோக்கி
நலம் விசாரிப்பற்கு ஒப்பானது

வெளிச்சத்தில் பொழியும்
மழை தரும் மகிழ்ச்சியை
யாரிடம் எப்படி வெளிப்படுத்தினாலும்
ஏதோ ஒரு நிறைவுறாத் தன்மை
தளும்பிக் கொண்டேயிருக்கும்.

சில நிறைவுறாத் தன்மைகள்
கருவறையில்
உயிர் பூத்தவளின் முகம் போல
நிறைந்த அழகினைப்
பூசியிருக்கும் தன்மை கொண்டவை.

No comments: