Feb 4, 2021

போஸ்ட் ஆபீஸ் பரிதாபங்கள்

இந்திய தபால்துறையை எந்த அளவுக்கு பாராட்டுகிறேனோ அதே அளவுக்கு அதில் பணி புரியும் சிலர் நம்மை சோதிப்பதில் இருந்தும் தவறுவதில்லை. கடந்த இரண்டு வருடங்களாகவே புத்தகங்கள் அனைத்தையும் Registered Parcel என்ற முறையில் மட்டுமே அனுப்பி வருகிறேன். இதுவரை அனுப்பியிருக்கும் சுமார் 1000 பார்சல்களில் மொத்தமாக ஒன்று மட்டும் முகவரியில் பெறுபவர் இல்லாததால் திரும்பி வந்தது.


இன்னொன்று தவறாக அவர்களே அவசரமாகத் திருப்பி அனுப்பிவிட்டு, ட்விட்டரில் ஒரு புகார் தெரிவித்ததும் கதறியடித்து அவர்களே நேரில் வந்து பெற்றுக்கொண்டு, மீண்டும் அதை சேர்ப்பித்தார்கள். மற்றபடி கடந்த ஆண்டில் ஒருமுறை வழக்கமாக கொடுக்கும் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர் விடுப்பில் இருந்ததால், தற்காலிகமாக ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். பார்சல் அனுப்புவதற்காகச் சென்றபோது அவருக்கான ஐடி வரவில்லை என்று திருப்பி அனுப்பினார். அடுத்த நாள் சென்றபோதும் அதே பதில் சொல்ல, இது குறித்து மேலிடத்திற்கு புகார் அனுப்ப என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். அவர் அதைப் பெரிதும் பொருட்படுத்தவில்லை. நீங்களே செய்து கொள்ளுங்கள் என்றார்.


தலைமை தபால் நிலைய எண்ணை கூகுளில் எடுத்து அழைக்க, மறுமுனையில் எடுத்தவர்கள் ஒவ்வொருவராக மாறி இறுதியாக ஒருவர் பேசினார். அனைவரிடமும் அதே கதைகளைச் சொல்லி அலுத்துப் போயிருந்தேன். இறுதியாகச் சொல்லி ஓய்ந்தபோது, ”கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!என்றவர் ரிசீவரை அப்படியே வைத்துவிட்டுவிட்டார். நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு இணைப்பைத் துண்டித்துவிட்டு அழைத்தால் ரிசீவர் வைக்கப்படாத காரணத்தால் அடுத்த சில மணி நேரங்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவை யாவற்றையும் குறிப்பிட்டு ட்விட்டரில், இந்திய தபால் துறை, அமைச்சகம், டிஜிட்டல் இந்தியா ஆகிய கணக்குகளில் ஒரு புகார் தெரிவித்ததும், அடுத்த நான்கைந்து நாட்களுக்குள் பெரும் பிரளயம் நடந்தது. கண்காணிப்பாளார் ஒருவர் நேரிடையாக வந்து புகார் எழுதி வாங்கிச் சென்றார். இறுதியாக அந்தப் புகாரையொட்டி ஒருவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.

 

*

 

சமீபத்தில் இலங்கைக்கு புத்தகங்கள் அனுப்ப வேண்டியிருந்தது. திண்டல் அல்லது வாசவிக் கல்லூரி தபால் நிலையம்தான் எனக்கு வசதி. ஒருமுறை சிங்கப்பூருக்கு அனுப்ப தலைமைத் தபால் நிலையம் சென்று பட்ட அவஸ்தையை https://www.facebook.com/erodekathir/posts/1094002680634594 இதில் வாசிக்கலாம். ஆகவே துணைத் தபால் நிலையங்களையே இதற்காக நான் தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

 

முதலில் வாசவிக் கல்லூரி தபால் நிலையத்தில் இலங்கைக்கு புத்தகம் அனுப்ப வேண்டும், என்ன எடைக்கு என்ன கட்டணம் வரும் எனக்கேட்டேன். போஸ்ட் மாஸ்டர் எதா இருந்தாலும் நேரில் கொண்டு வாங்க, அப்பத்தான் சொல்ல முடியும்!என்றார். சமீபத்தில் திண்டல் போஸ்ட் மாஸ்டராக வந்திருப்பவர் அடிக்கடி பார்சல் கொடுப்பதால் பழக்கமாகியிருந்தார். கூட்டமாக இருப்பின் கொடுத்துட்டுப் போங்க என்று பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு மாலை பதிவு செய்வார். நெட்வொர்க் பிரச்சனை என்றாலும் நாளைக்கு அனுப்பிடுங்க என்று சொல்லி காசு கொடுத்துவிட்டு வந்துவிடலாம். ஆகவே அவர் வாயிலாக அனுப்புவது எளிதாக இருந்தது. இலங்கைக்கான கட்டணம் குறித்துக் கேட்டேன், கணினி திரையைத் திருப்பிக் காட்டி, ஒவ்வொரு எடைக்கும் எவ்வளவு வரும் எனும் பட்டியலையே குறித்துக் கொள்ளச் சொன்னார். அந்த அடிப்படையில் எடையைக் கணக்கிட்டு பார்சலைத் தயார் செய்து வைத்திருந்தேன்.

 

அனுப்பலாம் என நினைத்துச் சென்றபோது அவர் விடுப்பில் சென்றிருந்தார். தற்காலிக பொறுப்பில் இருந்தவர் சார் ஐடி இல்ல. அடுத்து வெளிநாட்டுக்குனா அவர் இருந்தாதான் வசதி, நீங்க ஹெட்போஸ்ட் ஆபீஸ் போயிடுங்களே!என்றார். ஹெட்போஸ்ட் ஆபீஸ் கதையைச் சொன்னேன். அவர் தடுமாறினார்.

 

திரும்பவும் ட்விட்டரில் இதைத் தட்டிவிட்டால் அவர்களுக்குப் பெரிய பிரச்சனை ஆகும் எனத் தெரியும். சரி பொறுத்துப் போவோம் என்றிருந்த சூழலில் வீடு மாற வேண்டிய வேலை வந்ததது. இரண்டு நாட்கள் கழித்து வாசவி கல்லூரி போஸ்ட் ஆபீஸ் போனேன். என் நேரம் அல்லது அங்கு வழக்கமாக இருக்கும் போஸ்ட் மாஸ்டர் நேரம், அவர் விடுப்பில் செல்ல, தற்காலிகப் பொறுப்பில் ஒருவர் இருந்தார். வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றதுமே, பீதியடைந்தவராகத் தெரிந்தவர், ”இன்னிக்கு டைம் முடிஞ்சுதுங்களே!என்றார்.இல்லை நேரம் இருக்கு!எனச் சொன்னேன்.போஸ்ட் மாஸ்டர் லீவு, நான் டெப்டேசன்ல வந்திருக்கேன்!என்றார்.அதனால் என்ன?” என்றேன்.எனக்கு ஐடி வரவில்லை!என்றார். நான் முன்பே இங்கு கட்டணம் விசாரித்த கதை, பிறகு திண்டலில் விபரங்கள் பெற்ற கதை, தலைமை தபால் நிலையம் 2015ல் படுத்திய கதை, திண்டல் போஸ்ட் மாஸ்டர் விடுப்பில் சென்றிருப்பது, திரும்பத் திரும்ப பார்சலைத் தூக்கிட்டு அலைய முடியாது என்பதையெல்லாம் பலவிதமாகச் சொல்லிப் பார்த்தேன்.

 

இறுதியாக நாளை வாங்க அனுப்பிக்கலாம்!என்றார். அப்படின்னா பார்சல் இங்கே வச்சுட்டுப் போறேன், நாளைக்கு டைம் சொல்லுங்க வந்து அனுப்பிக்கிறேன்!என்றேன். அப்படி இங்கே வைக்கக்கூடாது!என்று மறுத்தார்.

 

இறுதியாக ஏற்கனவே இதேபோல் ஐடி இல்லை என்ற காரணத்தால், ட்விட்டர் வழியே புகார் தெரிவித்ததைச் சொன்னேன். ட்விட்டர்ல அனுப்பியெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது!என்றார் அப்போது வந்த போஸ்ட் மேன் ஒருவர். அந்த டிவிட்டர் புகாருக்கு நடந்த விளைவுகளைச் சொன்னதும் அவர் பீதியடைந்து அமைதியானார். இப்பவும் உங்களை மிரட்டனும்னு எனக்கு ஆசையில்லை. திரும்பத் திரும்ப தூக்கிட்டு அலையமுடியாது என்பதால் நான் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தத்திற்குள் ஆளாக வேண்டியிருக்கிறது!என்று மட்டும் சொன்னேன். இறுதியாக அருகில் வேறு எங்கு அனுப்ப முடியும் எனக் கேட்டேன். பவானி ஹெச். போயிருங்கஎன்றார். இல்ல சப் போஸ்ட் ஆபிஸ் சொல்லுங்க!என்றேன். சித்தோடு என்றார். அப்ப நீங்களே சித்தோடுக்கு அழைத்து, இங்கே போஸ்ட் மாஸ்டர் இல்லை, அங்கே வந்தா அனுப்ப முடியுமானு கேட்டுட்டு சொல்லுங்க என்றேன். என்னென்னவோ சொல்லி மறுத்து பிறகு சித்தோடு எண் இல்லை என்றார். நான் கூகுளில் எடுத்து தரவா எனக் கேட்டேன். பிறகு அவராகவே அழைத்தார். அழைக்கும்போதே, இது இலங்கைக்கு அனுப்ப வேண்டியதுனு அவங்ககிட்ட சொல்லிடுங்க என்று மூன்று முறையும் சொல்லியும், அதைச் சொல்லாமல் அவர் தவிர்த்து அழைப்பை முடித்தார்.


நான் அங்க போகல, இங்கேதான் அனுப்பனும், முடியாதுனா ஏன் முடியாதுனு எழுத்தில் கொடுங்க!என்றேன். பதறியவர் ஏன்?”னு கேட்டார். அதுதான் இலங்கைக்குனு சொல்லுங்கனு அத்தனை வாட்டி சொல்லியும் சொல்லாம விட்டிருக்கீங்க, திரும்பவும் அங்கே போய் முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமா!?” என்றேன். கொஞ்சம் கடுப்பாக மீண்டும் அழைத்து இலங்கைக்கு என்று சொல்லிவிட்டு வைத்தார்.

 

அடுத்து சித்தோடு நோக்கி புறப்பட்டேன். கதவு மூடியிருந்தது. தட்டினால் சாப்பிடுறேன் வெய்ட் பண்ணுங்க!என்றது ஒரு பெண் குரல். நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு கதவு திறந்தது.

 

தபால் நிலையம் வழியே அனுப்பும்போது முழுவதும் பார்சல் செய்து எடுத்துச் செல்லக்கூடாது. அவர்கள் உள்ளே என்ன இருக்கின்றது என்பதைச் சரிபார்க்க வேண்டுமாம். ஆகவே அவர்கள் பார்த்த பின்தான் முழுமையாக பார்சல் செய்ய முடியும். ஆதார் ஜெராக்ஸ் ஒன்று இணைக்க வேண்டும்.

 

ஒருவழியாக அவர் பார்சலில் என்ன உள்ளது என்பதை சரிபார்த்த பிறகு, எடை பார்த்து முற்றிலும் பார்சல் செய்து விபரங்கள், அதற்கான கட்டணம் கொடுத்தேன். (கட்டணம் முதல் 250 கிராமிற்கு 560 ரூபாய் அடுத்த ஒவ்வொரு 250கிராமிற்கும் 50 ரூபாய். இதைச் சொல்லத்தான் வாசவி கல்லூரி போஸ்ட் மாஸ்டர் நீங்க கொண்டு வந்ததாதான் சொல்ல முடியும் என்றார். இது இணையத்திலேயே தெளிவாக இருப்பதை பிறகு தேடிக் கண்டறிந்தேன்). நான் அனுப்பிய பார்சலுக்கு செலுத்திய கட்டணம் ரூ.2410

 

எல்லாம் பெற்றுக் கொண்டவர் இரண்டு நிமிடத்தில் அனுப்பவதற்காக தகவல்களைப் பதிந்து முடித்தார். அதற்கான ரசீது மட்டும் ஒரு A4 காகிதத்தில் எடுக்க வேண்டியிருந்ததால், வழக்கமான பிரிண்டரில் கொடுக்காமல் மற்றொரு பிரிண்டரில் கொடுத்தார். அது வேலை செய்யவில்லை. ஏறத்தாழ பதினாறு முறை தட்டியதும், மூன்று பிரதிகளை வெளியில் தள்ளியது. அவற்றை பார்சல் உடன் இணைக்க வேண்டும். அதையும் நாம் தான் செய்ய வேண்டும்.

 

ஆக மொத்தத்தில் வெளிநாட்டிற்கு நீங்க ஏர் மெயில் ரெஜிஸ்டர்ட் பார்சல் அனுப்ப வேண்டுமென்றால், தபால் நிலையத்தில் அவர்கள் செய்ய வேண்டியது, பார்சலில் என்ன என்பதை சோதித்துவிட்டு, விபரங்களை இரண்டு நிமிடம் உள்ளீடு செய்துவிட்டு, அதற்கான பிரிண்ட்ரை மட்டும் சுமார் பதினாறு முறை தட்ட வேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது.

 

*

 

பி.கு :

இப்படி மொட்டையா ஒரு ரசீது இருக்குமா என யோசிக்காதீர்கள். பதினாறு முறை தட்டி எடுத்த ரசீதில் இந்திய தபால் துறை எனும் முத்திரை மற்றும் விபரங்கள் பிரிண்டருக்குள்ளேயே உதிர்ந்துடுச்சு போல




 

Dec 9, 2020

அனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி

ஏன் இப்படி போய்ட்டே? தைரியமா இருக்க வேணாமா? நீ எல்லாம் இப்படி செய்யலாமா?, தற்கொலைதான் தீர்வா? தற்கொலை கோழைத்தனம் இல்லையா?’ என்பது போன்ற ஆறுதல் தேறுதல் கம் அட்வைஸ்களுக்குள் ஒருபோதும் அடங்காதவை தற்கொலைகள். நானறிந்த வரையில் இரண்டு வகைகளில் சுயகொலைகளை மனிதர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

உடல் நலமின்மை மற்றும் மன நலமின்மை தொடர்பில் மரணத்தை தேர்ந்தெடுப்பது ஒரு வகை. தீராத நோய், அதன் வாதை என அவதியுறும்போது, அதைத் தாங்குவதற்குப் பதில் இறந்துவிடுவதே மேல் எனத் தீர்மானித்தல். மன நலமின்மை என்பது மிக நுண்ணியது. உள்ளுக்குள்ளே ஆயிரமாயிரம் யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். எத்தனை போராடியும் அவை யாவற்றிலும் அவர்கள் தோற்றுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் நிழலே அவர்களுக்கு போட்டியாளனாய் மாறும். நாம் கற்பனையே செய்திருக்காத ஏதோ ஒன்று அவர்களை அப்படி சிக்க வைத்திருக்கும். மிகச்சரியான நேரத்தில் கண்டறிப்படாமல், கண்டு கொள்ளப்படாமல் இருப்பது அவர்களை மரணம் எனும் விடுதலையை நோக்கி நகர்த்தி விடுகின்றது. கவனிக்கவும், மரணம் என்பது அவர்களைப் பொறுத்த வரையில் விடுதலை.

உடல் நிலை என்றால் மருத்துவத்தின் அதிக பட்ச மருத்துவ உதவியை நாடுதல் தேவை. மனதில் சிக்கல் என்றால் உடனடியாக தேவையான மனநல ஆலோசனைக்கு உட்படுத்தி, தேவைப்படின் சிகிச்சைக்கு உட்படுத்தி மீள்வது மட்டுமே தீர்வாகும். உண்மையான பிரச்சனையைப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகத் தரப்படும் எந்தவிதமான அறிவுரைகள் மற்றும் ஊக்குவிப்புகளும் உதவவே உதவாது.

மற்றொரு வகையில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நிகழ்கின்றன. இவை ஏதோ ஒருவிதத்தில் மற்றவர்களால் அறிந்தோ அறியாமலோ தூண்டப்படுவதால் நிகழ்கின்றன. குடும்பப் பிரச்சனை, கடன், துரோகம், காதல், ஏமாற்றம், இழப்பு, தேர்வில் தோல்வி உள்ளிட்ட அனைத்தின் பின்னாலும் யாரோ ஒருவர், ஏதோ ஒன்று இருக்கும். பெரும்பாலும் தற்கொலைகள் உயிரிழப்பு மட்டுமே மிகைப்படுத்தப்பட்டு, அதற்கு காரணமாக இருந்த அந்த யாரோ ஒருவர், ஏதோ ஒன்று என்ன அறியப்படாமல் போகின்றது.


இதில் சிக்கிக் கொள்பவர்கள் பெரும்பாலும் அந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாத பதட்டத்தில் இந்த முடிவுக்கு நகர்கின்றனர். மேற்கண்ட பட்டியலில் இருக்கும் அனைத்தையும் உடைக்க முடியும், மாற்ற முடியும், மாற்று வழி ஒன்றைக் கண்டறிய முடியும் எனும் நம்பிக்கையும், சமாதானமும் மிகத் தெளிவாக வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்று இங்கு யாருமே இல்லை என்பதை உணர்த்த வேண்டும். உண்மையில் இவர்களுக்கு மரணம் ஒருபோதும் விடுதலை அல்ல. அந்த நெருக்கடியின் இறுக்கத்தில் இருந்து தப்பித்தல் மட்டுமே. தப்பித்தல் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக மாறிவிடுகின்றது.

இவர்களில் பெரும்பாலும், அதன் தொடர்பில் உள்ளவர்களைப் பழிவாங்க அல்லது தண்டிப்பதற்காக தற்கொலை செய்வதுண்டு. சிலர் எதிராளியை மிரட்டுவதற்காக ஏதாவது ஒன்றைச் செய்து மரணத்திற்குள் மாட்டிக் கொள்வார்கள்.  இந்தாப் பாரு கயிறு போட்டுக்குவேன், கையை கிழிச்சுக்குவேன், மருந்தக் குடிச்சிருவேன்!என்பவர்கள் பெரும்பாலும் மிரட்டலுக்காக அவ்வப்போது செய்து, ஒருகட்டத்தில் புலி வருது கதை போல், மற்றவர்களால் பொருட்படுத்தப்படாத தருணத்தில் மரணத்திற்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

இவர்கள் உடனிருப்பவர்களால் அடையாளம் காணப்பட்டு மிகச் சரியாக வழி நடத்தினால் தற்கொலைகளை நோக்கி நகராமல் இருப்பார்கள். அவர்களுக்கே வாழ்க்கை குறித்த புரிதலும், சுய அறிவும் இருந்தால், தன் தவற்றை உணர்ந்து தீர்வை நோக்கி நகர வேண்டும். அவர்களின் கேள்விகள் மதிக்கப்பட்டு, அவற்றிற்கான சரியான பதில்கள் வழங்கப்பட வேண்டும். சரியான பதில்கள் என்பவை பிடித்ததாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் போதும்.

எல்லாத் தற்கொலைகளுக்கும் ஒரே விதமான அளவீட்டுக் கருவி பொருந்தாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானது. அந்தந்த விதத்தில் அணுகி சரி செய்யப்பட வேண்டும். மேலோட்டமான ஆலோசனை ஆறுதல்களால் மட்டுமே கடந்துவிடக் கூடியல்ல. தற்கொலை எனும் பிணியை வெறும் அனுதாபங்களால் மட்டுமே குணப்படுத்த முடியாது!


Nov 11, 2020

ஒரு விதை போட்டால்

கிராமங்களில் பெரு, சிறு, குறு விவசாயி என யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம் எப்போதும் ஓர் அறியாமை நிரம்பிய வீம்பு இருப்பதுண்டு. தம் நிலங்களில் விற்பனை செய்வதற்கான பயிர் வகைகள் மட்டுமே விளைவிக்க வேண்டும் எனும் வீம்புதான் அது.

பயன்பாட்டில் இருக்கும் நிலம் முற்றிலும், தாம் காலம் காலமாகச் செய்து வரும் முறையில், அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப, நீர் வசதிக்கேற்ப விவசாயம் செய்து விடும் பழக்கம் தவறில்லை. பெரும்பாலான விதைப்பு என்பது காலங்காலமான பழக்கம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே நிகழ்கின்றது. மொத்தத்தில் எதையாவது விதைக்க வேண்டும், பாங்கு பார்க்க வேண்டும், விளைந்ததை அறுவடை செய்து என்ன விலைக்குப் போகின்றதோ அப்படியே விற்றுவிட வேண்டும். உதாரணத்திற்கு சில தருணங்களில் வெங்காயம் கிலோ நூறு ரூபாய்களைக் கடந்து பறக்கும். அதே நாட்களில் தக்காளி ஓரிரு ரூபாய்க்கு விற்பனையாகும். எது எப்போது, என்ன விலைக்கு விற்றது, என்னென்ன காலங்கள், என்னென்ன காரணங்கள் எனும் தரவுகள் 99% பேரிடம் கிடையாது.

நீர் செழித்திருக்கும் நிலமென்றால் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, பாக்கு, கொய்யா. ஓரளவு இருந்தால் குச்சி, மக்காச்சோளம், எள், கடலை, தானிய வகைகள். வானம் பார்த்த பூமியாக இருந்தால் அதற்கேற்ற விவசாயம். சில பகுதிகளில் முற்றிலும் பணப் பயிர்கள், பூ வகைகள், ஏற்றுமதி வாய்ப்புள்ள விவசாயம் அல்லது தோப்பு வகை விவசாயம்.

இதில் வீம்பு என்று எதைச் சொல்கிறேன்? தன் குடும்பத்தினரின் சத்தான உணவுத் தேவைக்கு தம் நிலத்தில் இருந்து எதையெல்லாம் விளைவித்து எடுத்துக் கொள்ள முடியும் எனும் தெளிவு பெரும்பாலும் கிடையாது. மொத்தமாக விதைப்பதும், விளைவிப்பதும், அறுவடை செய்வதும் விற்பனை நோக்கத்திற்காக மட்டுமே எனும் வீம்புதான், விவசாயிகளை சத்துள்ள ஒன்றைச் சாப்பிடக்கூட விடாமல் வெறும் இயந்திர பாணியில் இயக்குகின்றது.

பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை எருமை மேய்ப்பு, கட்டுத்தரை வேலை, வண்டி ஓட்டுதல், குப்பை அள்ளுதல், வயல்களில் வேலை என எல்லாம் செய்ததுண்டு. செய்துதான் ஆக வேண்டும். எல்லோரும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, நாம் மட்டும் சும்மா இருக்க முடியாது. அதனால் வயல்களில் விதைத்தது என்ன, எந்த நிலையில் இருக்கின்றது, எப்போது அறுவடை என்றெல்லாம் தெரியும். அதிகாலையில் மார்கெட்டுக்கும், வாரச் சந்தைக்கும் சைக்கிள்களில் மூட்டை சுமக்க வேண்டும் அல்லது உடன் துணைக்குச் செல்ல வேண்டும். பதினொன்றாம் வகுப்பு விடுதி வாழ்க்கை, பிறகு கல்லூரி, வேலை, தொழில், நகரத்திற்கு இடப்பெயர்வு என இந்த முப்பது ஆண்டுகளில் வயலில் என்ன விதைத்திருக்கிறார்கள், எந்த நிலையில் இருக்கின்றது, எது எப்போது அறுவடை எதுவும் தெரியாது என்கிற அளவுக்கு மாறிப்போனேன். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை கிராமத்திற்குப் போனால் போதும், திரும்பி வரும்போது என்னவெல்லாம் இருக்கின்றதோ அவற்றில் தேவையானவற்றை அள்ளிக்கொண்டு வந்துவிடலாம்.

இந்த நிலையில்... அவ்வப்போது நகர்ப்புற மாடித் தோட்ட விவசாயிகள்(!) தம் தோட்டங்களில் அறுவடை செய்த காய்கறிகளை ஃபேஸ்புக், ட்விட்டரில் காட்சிப் படுத்துவதைப் பார்க்கும்போது, அடச்சே... இந்த மாதிரி நாமெல்லாம் எத்தனை செய்யலாம் எனப் புகை வரும். தோணினா மட்டும் போதுமா, அதற்கு மண்ணில் கால் வைக்க வேண்டுமே.

இந்தச் சூழலில்தான் பெருந்தொற்று முடக்கக் காலம் வந்தது. ஏப்ரல் மாதத்தில் இரண்டு வாரம் கிராமத்திலேயே தங்க வேண்டிய கட்டாயம். அப்போதுதான் வீட்டருகே இருபது வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத நீளமான ரிட்டயர்ட்வயல் கண்ணை உறுத்தியது. ஒரு பக்கம் வேலி, மற்ற பக்கம் கட்டுத்தரை, வீடு, வாசல் பயன்பாட்டு ஆக்கிரமிப்பு என்று ட்ராக்டர் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாத மூலை அது. ஒரு ஓரத்தில் பெரிய மா மரம் மட்டும் உண்டு. ஆகஸ்ட் முதல் வாய்க்கால் தண்ணீர் வந்து, மழையும் பெய்து இணைந்து மேலே இருக்கும் வயல்களிலிருந்து வரும் உபரி நீர் மூன்று நான்கும் மாதங்கள் அதில் குளம் போல் தேங்கி நிற்கும்.

ஏப்ரலில் வறட்சிதான். எனினும் அக்டோபர் மாதத்தில் வரும் தண்ணீரைக் கணக்கில் கொண்டு, வேலி ஓரமாக வாய்க்கால் ஒன்றை ஏற்படுத்திவிட்டு, இரண்டு தசாப்தங்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாமல் சும்மா கிடந்த நிலத்தை மண்வெட்டியால் வெட்டினேன். பல வருடங்களுக்குப் பிறகு என்பதால் கை காப்புக் காய்த்தது, இரண்டு நாட்கள் ஒடம்பு அடித்துப் போட்டது போல் அசந்துபோனது. நிலத்தைக் கொத்தி, பண்படுத்தி ஆறேழு வகைக் கீரை மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்கான காய்கறிச் செடிகள் என விதை தூவியதில், இந்த ஆறு மாதங்களாக கீரை, காய்கறிகள் தேவைக்கு பெரும்பாலும் கடையை நாடவில்லை. சில காய்கறிகளுக்கு கடையைத் தவிர்க்க முடியாது. அத்தோடு மனது ஓயவில்லை. சும்மா கிடக்கும் நிலமெங்கும், அதை வைக்கலாமே, இதை வைக்கலாமே எனும் யோசனைகள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. வைத்துக் கொண்டும் இருக்கின்றேன்.






கிராமத்தில் இருக்கும் விவசாயக் குடும்பங்களில் இப்படி பயன்பாட்டில் இருந்து கை விடப்பட்ட நிலம் என்று குறைந்தபட்சம் பல நூறு அல்லது சில ஆயிரம் சதுர அடிகள் சீண்டப்படாமல். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் சில சென்ட் நிலம். கிணற்று மேடு அருகே, வண்டித் தட திருப்பத்தில், குப்பைக் குழி அருகே, கொட்டகைக்குப் பின்புறம், கட்டுத்தரைப் பக்கம் என்று எங்கேனும் நிச்சயம் இருக்கும்., மீண்டும் சொல்கிறேன், இந்த நிலக் கணக்கு நகர்ப்புறத்தில் இல்லை. கிராமத்து விவசாய நிலங்களில் மட்டுமே.

சரி இப்படியெல்லாம் சொல்லிவிட்டால் விவசாயக் குடும்பங்கள் செய்து விடுமா? செய்யாது. ஏனென்றால் அவர்களின் இரத்தத்தில் ‘எதையும் வெட்டு வெட்டென்று வெட்டி வியர்வை சிந்துவது மட்டுமே விவசாயம். விளைவிப்பது என்பது விற்பதற்குத்தான். அதை அப்படியே தின்னும் பழக்கமில்லை. இதில் ஸ்மார்ட் வொர்க் என்பதற்கே வேலையே கிடையாது!’ எனும் நம்பிக்கை நஞ்சு கலந்திருக்கின்றது. காய்கறி, கீரை வகை, பழம் உள்ளிட்டவற்றின் தேவை மற்றும் பயன்கள் அறிந்த, விவசாய நிலம் வைத்திருந்தும் நகரத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்கும் இன்றைய தலைமுறையினர் இதைச் செய்ய வைக்க வேண்டும். வீட்டருகே நிலமிருக்கும் யாவருக்கும் இது பொருந்தலாம்.

திடீரென இந்த முடிவெடுத்தால், வீட்டுத் தேவைகளுக்கு எதையெல்லாம் பயிரிடலாம், எப்படிப் பயிரிடுவது எனும் குழப்பம் வரும். Youtube எனும் கடலில் தேடுங்கள். அத்தனையும் குவித்து வைத்திருக்கிறார்கள். ஒன்றைப் பார்த்தால் அடுத்தடுத்து என உங்களை மிகச் சுவாரஸ்யமான களத்திற்கு அது அழைத்துச் செல்கிறது.

மிகச் சரியாகத் திட்டமிட்டால் குடும்பத்திற்குத் தேவையான பெரும்பாலான காய்கறி, கீரை, பழ வகைகளை சுயமாக ஒவ்வொருவரும் பயிர் செய்து கொள்ள முடியும். நகரத்தில் செலவு செய்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும்தான். ஆனால் தம் பார்வையில், தானே பயிரிட்டு வளர்த்து, சுத்தமாக, சுகாதாரமாக உண்ணும் சாத்தியமிருந்தும் நேரமில்லை, மண்ணுல கால் வைக்கனுமா எனும் கூச்சத்தோடு தவற விடுவதால் மண்ணுக்கு எந்த இழப்புமில்லை. இப்படியான முயற்சிகள் என்பது உடற்பயிற்சிக்கான மிகச் சிறந்த வாய்ப்பும் கூட. சமீப மாதங்களில், வாரத்தில் ஒரு நாள், வயலில் கடினமாக உழைப்பதன் வாயிலாக இரண்டு மூன்று நாட்கள் நடை, ஓட்டத்தில் கிட்டும் பலன்களை எட்டிவிடுகிறேன்.

விதையிட்டோ, பதியனிட்டோ ஒரு செடியை, மரத்தை வளர்த்தெடுப்பதில் வாழ்வின் மிக முக்கியமான பல்வேறு பாடங்களை செலவில்லாமல், ஆசான்கள் இல்லாமல் கற்க முடியும். ஒரு விதை போட்டால், அது ஒரு தானியத்தை, ஒரு காயை, ஒரு கனியை மட்டுமே தந்து விடுவதில்லை, ஒரு குடும்பத்தின் பசியாற்றும்.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...