ஆயா



செல்போன் கிணுகிணுத்ததில் தூக்கம் விடுபட்டது. விழிக்க விரும்பாமல், விழித்து அரைக்கண்ணைத் திறந்து எடுத்துப் பார்த்தபோது அம்மாவின் பெயர் ஒளிர்ந்துகொண்டிருந்தது. நேரத்தைப் பார்த்தபோது நேரம் 5.55 எனக் காட்டிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் அம்மாவா என மனது திடுக்கிட்டது. எவ்ளோ பெரிய அவசரம்னாலும் 7 மணிக்கு முன்ன ஒருபோதும் அம்மா எனக்கு போன் அடிக்காதே.

”ஆயாவுக்குத்தான் எதாச்சும் ஆயிருக்குமோ” என்ற பதட்டத்துடனே அலைபேசியை காதில் ஒத்தியபோது அம்மாவின் குரல் பதட்டமாய் இறங்கியது.

“கண்ணு, ஆயா கீழ உழுந்துறுச்சாம், நீ…. ஒடனே வா, நாங்க முன்னால போறோம்”

என்ன ஏதென்று கேட்கும் முன்னே, அலைபேசி துண்டிக்கப்பட்டது.

இதயம் வேகமாய் துடித்தது. அதிர்ச்சியின் உச்சம் அது. ஆனால் எதிர்பார்த்த ஒன்றுதான்.

எழுந்த பதட்டத்தில் என்ன செய்வதென்றே புரியவில்லை. ”கீழே விழுந்துருச்சுன்னா, என்ன? ஆஸ்பிடலுக்கு எடுத்துட்டு வரணுமா, இல்ல உயிருக்கு எதாச்சும் ஆயிருக்குமா” என்னென்னவோ குழப்பம்.

படுக்கையறையை விட்டு வெளியேறி, பல்துலக்க பிரஷ்சில் பேஸ்ட் வைக்கும்போது கை நன்றாகவே நடுங்கியது. வயிற்றுக்குள் ஒரு உருண்டை ஓடியது. மூச்சு அடைத்து அடைத்து வந்தது.

ஆயா இருந்த வீட்டின். பக்கத்து வீட்டில் இருக்கும் அப்பச்சிக்கு அழைத்தேன். ’ஹலோ’ என்பதற்குப் பதிலாக “யாரு”னு கேட்கும்போதே உயரழுத்தப் பதட்டம் தெரிந்தது.

“ஆயாக்கு என்னாச்சு”

“அட, உசுரு போயிடுச்சு சீக்கிரம் வா. எங்கிருக்கிற நீ”

“கெளம்பிட்டேன் வர்றேன்”

கண்ணை ஒரு கணம் இறுக்கமாக மூடித் திறந்தேன். கொஞ்சம் நிதானத்திற்கு வந்தேன். மனதில் லேசாக நிம்மதி பரவியது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இன்னிக்கு என்ன கிழமை. அட திங்கள்கிழமை. கடைசியா எப்ப ஆயாவைப் பார்த்தேன்…. ம்ம்ம் போன புதன்கிழமை.

புதன்கிழமைதான் காரில் வரும்போது மனைவியிடம் சொன்னேன். “எனக்கென்னமோ ஆயாவைப் பார்த்தா ரொம்ப பிரகாசமா இருக்கிற மாதிரி தோணுது. எப்ப வேணும்னாலும், ஆயா செத்துடுச்சுன்னு திடீர்னு போன் வரும் பாரேன்”





பூர்வீகத்தைவிட்டு வரும் மனமில்லாமல் ஆயா மட்டும் கிராமத்திலேயே இருந்துகொண்டது. அப்பா அம்மா ஒரு ஊரில், நான் குடும்பத்தோடு ஒரு ஊரில். ஆயா அந்தக்காலத்து மனுசி. வயதானாலும் பெரிதாக நோவு நொடியில்லாதா உடம்பு. எனக்குத் தெரிந்து, சில வருடங்களுக்கு முன் சிறுநீர்ப் பாதையில் ஏதோ கோளாறு வந்ததுதான் ஆயாவுக்கு வந்த முதல் நோய். கோவை வேதநாயகம் வரை சென்று, சிறிய அறுவை சிகிச்சை என ஒரு வழியாக தீர்வு காணப்பட்டது.
சில வருடங்கள் கழித்து, ஒரு காலில் நரம்பு இழுத்துப்பிடிப்பதும், அதையொட்டி நடக்கும் பொழுதெல்லாம் ஒருவித வலியிருப்பதும் என பிரச்சனை தொடங்கியது. எலும்பு, நரம்பு என பல மருத்துவரைப் பார்த்து முழுதாக சரியாகவில்லை.

”உங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்லை, சத்து மாத்திரை தர்றேன் சாப்டுங்க” என சமாதானம் சொல்லிவிட்டு உறவுக்கார மருத்துவர், ஆயாவை வெளியில் அனுப்பிட்டு

“ஆயாக்கு என்ன வயசு இருக்கும்” தனியா என்னிடம் கேட்டார்.

“எண்பத்தஞ்சு இருக்கும்ங்க”

“இதுக்கு மேல என்னப்பா பண்ணமுடியும். வயசாகுதுல்ல இனிமே இதுபோல வரத்தான் செய்யும். கூடவே மனசும் வலி இருக்கிறதா நினைச்சுக்கும். இப்படிப்பட்ட வலி இருக்கத்தான் செய்யும்” என்று சொன்னார்.

அம்மாவுக்கு அடுத்து நான் அனுபவித்த பெண் உறவு ஆயா. அப்பா ஒரே மகன் என்பதால் ஒரே குடும்பம் இருக்கும் வாய்ப்பு. ஒருபோதும் வீட்டுக்குள் சண்டை சச்சரவு வந்ததில்லை. அம்மா மாதிரி ஆயாவை இன்னொரு பெண்ணால் கவனித்துக்கொள்ள முடியுமா என, அம்மாவின் வயதொத்த வெவ்வேறு பெண்களோடு அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்ப்பேன். எனக்குத் தெரிந்தவரை ஒரு மாமியாரை கவனித்துக்கொண்டதில் அதுவும் அதன் கடைசி காலங்களில் கவனித்துக்கொண்டதில் அம்மா மிக நியாயமாக, உன்னதமாக நடந்து கொண்டிருந்திருக்கின்றது.

அவ்வப்போது சின்னச் சின்ன கோபதாபங்கள் மனித இயல்புக்கென்றே நிகழ்வதுண்டு. அவை எதையும் எவரும் சேமித்து வைத்ததில்லை.

நான் சின்னக்குழந்தையாக இருந்தபோதே ஒன்றை என்னிடம் சொல்லிவிட்டார்கள். வழக்கமாக பெண் சிசுக்கொலைதான் வாடிக்கை. எங்கள் வீட்டில் இரண்டாவதாய் நானும் பையனாகப் பிறந்ததால், எதிர்காலத்தில் சொத்து போதாதே என்று, குழந்தையாக நான் பிறந்தவுடன் “ரெண்டாவதும் பையனா போச்சே, மூச்ச புடுச்சுரலாமா” என ஆயா யாரிடமோ ஆலோசனை சொன்னதாகவும், மற்றவர்கள் ஒரேயடியாக மறுத்ததாவும் ஒரு வரலாறு(!) உண்டு.

அந்த வரலாற்று உண்மை, எனக்கும் ஆயாவுக்குமான வாழ்க்கைப் பயணத்தில் அவ்வப்போது பயன்படுத்தப்படும் ஒரு மொக்கையான ஆயுதமாகவே இருந்து வந்திருக்கின்றது. சின்ன வயதில் ஆயாவோடு கோவம் வரும்போது “ஏங்கெழவி நீ அப்பவே என்ன கொல்ல பாத்ததானே, இரு இரு.. உனக்கு இருக்குது இரு” எனப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், நான் வளரவளர ஆயாவுக்கு முதுமை பெருகப்பெருக இன்னும் கூர் மழுங்கியது. எப்பாவாச்சும் உறவுகள் இருக்கும் போது, குதூகலாமாய்ப் பேசும்போது “ஹ்கும், எங்காயா அப்பவே என்ன கொல பண்ணப் பாத்ததாம்ங்க, ஏயா…. நீ அப்பவே என்ன கொல்றதுக்கு ப்ளான் போட்டதானே” எனச் சீண்டுகையில்

அது வெட்கத்தில் “அய்யோ சாமி, அப்படியெல்லாம் இல்ல. அவியெல்லாம் அப்படிச் சும்மா சொல்றாங்க, நானெதுக்கு அப்படி நெனைக்றேன்… நீ மவராசனா இரு சாமி” என்று வாய் பொத்திச் சிரிக்கும்.

ஊரிலிருந்து அப்பாவும் அம்மாவும் பெரும்பாலும் தினந்தோறும் கிராமத்துக்குச் சென்று தோட்டத்தையும், அங்கிருக்கும் ஆயாவையும் பார்த்துக்கொள்வது வழக்கம்.

செல்போன் அதிகமாக புழங்கத் துவங்கிய பிறகு, ஆயாவிடமும் ஒரு பழைய செல்போன் கொடுத்தாகிவிட்டது. பயன்படுத்தி அழைக்கத் தெரியாது. உள் வரும் அழைப்புகளைப் பேச இயலும்.

ஆயாவின் முதுமை கூடக் கூட எனக்குள் அன்பும் பரிவும் கூடிக்கொண்டேயிருந்தது. எனக்குத் விவரம் தெரிந்த காலத்திலிருந்து யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா சொல்லும் ஒரே ஒரு வரி

“எங்க ஆயா இன்னொரு பத்து வருசம் நல்லாயிருந்து, எங்களுக்கு தொணையா இருந்தாப் போதும்” என்பதுதான். இதை நான் 30 வருடங்களுக்கு மேலாக கேட்டு வருகிறேன். கடந்த 10 வருடங்களாகவே அம்மா எப்போது இதைச் சொன்னாலும் சிரிப்புத்தான் வரும்.

”அம்மா இதையேதான் நீ 30-35 வருசமா சொல்லிக்கிட்டிருக்கே, எத்தன வருசத்துக்குத்தான் பத்து வருசம் பத்து வருசம்னு சொல்லுவே” எனும்போது

”நூறு வருசத்துக்குகூட நல்லாயிருக்கட்டுமே” என அம்மா சொல்ல

“அதெல்லாம் வேணாஞ்சாமி, நல்ல சாவு வந்தாப் போதுமப்பா” என்று சொல்லும் ஆயா.

கடந்த சில மாதங்களாகவே, ஆயாவைச் சந்திக்குப் போதெல்லாம் “சாமி இந்தக் காலு வலி ஒன்னுதான்… பொறுக்கவே முடியல” என்று சொல்லும்

“ஆயா, என்னோட வயசுக்கே, உட்கார்ந்த எந்திரிக்க முடியறதில்ல. வயசான சிலருக்கு அப்படித்தான். முடிஞ்சவரை நடக்கிற குறைச்சுக்க அங்க இங்க சுத்தாத” என்று சமாதானம் சொல்லும் போதே, நம் கை பிடித்து அதன் கால் நரம்பில் தேய்த்து, ”இதா இங்கிருந்துதான் வலி” எனும்போது மனசெல்லாம் வலிக்கும்.

”அம்மா, இனிமே இந்தப் பத்து வருசம் பத்து வருசம்னு அதே பாட்டப் பாடவேணாம், நல்லபடியா எந்தத் தொந்தரவும் இல்லாம போகட்டும் பாவம். அதுக்கும் வயசாகுதுல்ல… தொந்தரவும் இருக்கு. வாழ்ந்து முடிச்சிடுச்சுதானே!?” என யதார்த்தம் பேசினாலும் ஆயா இல்லாத வெறுமையை நினைக்க மனசு துடிக்கும், பயம் கவ்வும்.

நாட்கள் நகர நகர அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ அழைக்கும்போதெல்லாம் ”ஆயா எப்படியிருக்கு?” எனக்கேட்பது அனிச்சையாய் நிகழத்தொடங்கியது.

போனமுறை குருநாதசாமி கோவிலுக்குச்சென்றபோது, நடக்கும்போது ஊன்றிக்கொள்ள நல்ல மூங்கில் ஒன்று வாங்கிவந்து கொடுத்துவிட்டு வந்தேன். அடுத்தமுறை போனபோது அது பத்திரமாக வீட்டிற்குள் இருந்தது. ஏன் பயன்படுத்தவில்லை எனக் கேட்டபோது, “ச்சாமி, அது கனமா இருக்குது” என, கனமற்ற ஒரு நொச்சிக்குச்சியை வைத்திருந்தது

கனம் என்பதைவிட, காசு போட்டு வாங்கிய குச்சி பத்திரமாக இருக்க வேண்டுமேயென்ற காலம்காலமாய் ஊறின கிராமத்துப் புத்திதான் காரணம்.
ஒரு நாள் பேச்சு வாக்கில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் போது, “இந்தக் காலு வலிதான் கொத்தியெடுக்குது. ஊசி போட்டுக்கிட்டு வந்தா நாலு நாளைக்கு நல்லாருக்குது, அதுக்குப் பொறவு பொறுக்கவே முடியறதில்ல. காலு வலி பொறுக்கவே முடியாம, கவுறு போட்டுக்கலாம்னு கூட ஓசன வந்துச்சு. பயமா வேற இருந்துச்சு, கம்னு இருந்துட்டேன்” என்றபோது திக்கென்றது.

“ஆயா மகாராசி… இப்படியெல்லாம் நினைக்காத. சாவு அதா வந்து செத்தாத்தான் புண்ணியம். அப்படியிப்படி நெனைச்சு, வலுக்கட்டாயமா கவுறு போட்டு, மருந்து குடிச்சு செத்துப்போய்ட்டா, இத்தன வருசம் நீ பொழச்சதுக்கே அர்த்தம் இல்ல. அப்படி நீ செத்துப்போய்ட்டா நாங்க பொழச்சதும் அர்த்தம் இல்லை” என்று அம்மா சொன்னபோது கனத்த மௌனமே நீடித்தது.

ஆயாவுக்கான மரணம் ஒரு பரிசு போல தானாக வருமென்று தோன்றியதே தவிர, ஒருவித திணிப்பாக, வலுக்கட்டாயமான தற்கொலை மரணமாக இருக்காது என்று நம்பினேன். நம்பினேன் என்பதை விட மிகத் தீர்க்கமாக விரும்பினேன்.

முதுமை, கால்வலி என்பதைக் காரணம் காட்டி நடக்காமல் இரு என்று எவ்வளவோ சொல்லியும் கேட்பதில்லை. வீடு, வாசல், கட்டுத்தரை, தண்ணித்தொட்டி, வீட்டைச்சுற்றி என தூங்கும் நேரம் தவிர லேசாக தாங்கித் தாங்கி நடந்து நடந்தே பகல் நேரத்தைத் தீர்க்கும் குணம். நடக்காமல் இருப்பது என்பது கொடும் தண்டனை போல். தனக்கென வாழாமல், தன் பிள்ளைகளுக்கெனவே வாழும் வேரோடிய கிராமத்துப் புத்தி. தன் பையன், பேரன் குடும்பம் நல்லாயிருக்கனுமென்றே எதையாவது செய்து கொண்டேயிருக்கும் புத்தி.

கடந்த ஒரு ஆண்டாகவே ஆயாவிடம் வலிமை குறைவதை உணர முடிந்தது. உணவு எடுப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாகவே தோன்றியது. பிறந்த வருடம் சரியாகத் தெரியாது என்றாலும் அப்பாவின் வயதொட்டி கணக்கிடும்போது 85ஐ கடந்திருக்க வேண்டும்.

அந்தப் புதன்கிழமையன்று நடந்த தேர்தலில் கிராமத்தில்தான் வாக்களிக்க வேண்டும் என்பதால், காலையிலேயே சொல்லிவிட்டேன், ”மதியம் 3 மணிக்கு வர்றேன் ரெடியா இருங்க, ஆயாவையும் ரெடியா இருக்கச் சொல்லுங்க, ஒன்னாப்போயி ஓட்டுப்போட்டுட்டு வந்துடுவோம்”

மதியம் போனபோது, தலைக்குளித்து வெள்ளைச்சுருள் முடி மொதுமொதுவென்ற பறக்க, வெள்ளைப்புடவை உடுத்தி தயாராக இருந்தது. வாக்களித்துவிட்டு திரும்பும்போது, கொஞ்சம் தள்ளி நின்றிருந்த காரை நோக்கி ஆயா வரும்போது கூடுதல் தடுமாற்றம் இருந்ததை பக்கவாட்டிலிருக்கும் கண்ணாடி வழியே கண்டேன். கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆயா என்ற உறவின் நீண்ட வருடங்களை மனதிற்குள் குவியத்தொடங்கியது.

தோட்டத்து வீட்டிற்கு மீண்டும் சென்று சாப்பிட்டுவிட்டு மாலை கிளம்பும்போது, காரின் அருகே வந்து வழக்கம் போல கை அசைத்துக்கொண்டே “சாமி மவராசனாப் போய்ட்டு வாங்க… மவராசனாப் போய்ட்டு வாங்க” என்று அனுப்பியது.

சமீபத்தில் பார்த்ததில் அன்றைக்கு ஆயா மிகுந்த பிரகாசமாக இருந்ததாகப்பட்டது.

ஊர் எல்லையைத் தாண்டும் போது “எனக்கென்னமோ ஆயாவைப் பார்த்தா ரொம்ப பிரகாசமா இருக்கிற மாதிரி தோணுது. எப்ப வேணும்னாலும், ஆயா செத்துடுச்சுன்னு திடீர்னு போன் வரும் பாரேன்” என்ற என்னை ஒருவித திடுக்கிடலோடு மனைவி பார்த்தார்.

“கம்னு இருங்க, ஏங்க இப்படிச் சொல்றீங்க”

“இல்ல… வயசாயிடுச்சுல்ல, அதுக்கும் கால்வலி இருக்கு. அந்த வலி மனசுல பதிஞ்சு போச்சு, எங்காச்சும் உழுந்துகிழுந்து அடிபட்டு, கடைசி காலத்தில சிரமப்படுறத விட, நல்லபடியா போய்டனும்” என்றேன். அன்றைக்கு நான் கண்ணாடி வழியே பார்த்த தடுமாற்றமும், எப்போதுமில்லாத அளவுக்கு முகத்தில் இருந்த தேஜஸும் அணையும் முன் பிரகாசமாக எரியும் கற்பூரத்தை நினைவூட்டியது.


நினைவுகள் ஒரு படம் போல் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க, வீட்டை அடைந்தேன். உறவுகள் குழுமத் துவங்கியிருந்தன. வயதானர்களின் மரணத்தையொட்டி, பறந்து வரும் அவர்களின் சம வயதொத்தவர்களின் அழுகை மிகத் தீவிரமான ஒன்று.

அன்றே மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது. வறட்டி அடுக்கி, தீ மூட்டும் போது மரணம் குறித்த கனமான துண்டுதுண்டு வரிகள் மனதிற்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. அடுத்த நாள் காரியம் செய்து, விருந்து போட்டு, அடுத்தடுத்து எழவு கேட்கவரும் உறவுகளிடம் ஆயா குறித்தே பேசிப்பேசி கனமாய் நகர்ந்தன நாட்கள். மூன்று நான்கு நாட்கள் கழித்து கணினியை உயிரூட்டி பல மடிப்புகளில் கிடந்த ஆயாவின் படங்களை ஒன்று திரட்டி, சிலவற்றை தேர்வு செய்து அச்சிட்டு ஒரு தொகுப்பாக எடுத்தேன்.

கிராமங்களில் எழவு விழுந்த வீட்டிற்கு ஒரு பத்து பதினைந்து நாளாவது அக்கம்பக்க வீட்டு மனிதர்கள் வந்திருந்து பேசிப்பேசி களைத்து நல்லிரவில்தான் வீடு திரும்புவார்கள். நிழற்படத்தொகுப்பு அவர்கள் கைகளில் கடக்கும் பொழுதெல்லாம், ஒவ்வொரு படத்தைப் பார்க்கும்போதும், ஆயா குறித்து ஏதாவது ஒன்றை நினைவு கூர்ந்தார்கள். அவை ஏற்கனவே நினைவு கூறப்பட்டதுதான் எனினும், இன்னொருமுறை கேட்க மனதிற்கு இதமாகவே இருந்தது.

அடுத்த சில நாட்களில் பந்தல் பிரிக்கப்பட்டது. எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பியதுபோல் இருந்தது. நானும் நகரக்கூட்டுகள் மீண்டும் அடைபட்டேன்.

வழக்கம் போல் வார இறுதிகளில் கிராமத்தை நோக்கி ஓட நினைக்கும்போது, ஆயா அப்படியே மனதில் வந்து புகுந்துகொள்ளும். இல்லையென்றே தெரிந்தும், தோட்டத்து வீட்டுக்குச் சென்று வண்டி நிறுத்துகையில், வாசலில், தொட்டி ஓரம், கட்டுத்தரையில், மாமரத்து அடியில்…. கொஞ்சம் தூக்கிக் கட்டிய புடவையோடு, ஒடிசலாய், கையில் குச்சி வைத்து நிற்கும் ஆயாவைத் தேடுவதை மட்டும் தவிர்க்கவே இயலவில்லை ஆண்டுகள் கடந்தும்.


-

21 comments:

சமுத்ரா said...

உணர்ச்சிப் பூர்வமான பதிவு..

அகல்விளக்கு said...

இறுதி வரிகளை நெருங்கும் போது, ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் போனேன்...

Anonymous said...

உங்க ஆயா மீதான அன்பில் மனம் கனக்கிறது..

Unknown said...

ஆயாவும்..அம்மாயும்...மறக்க முடியாத உறவுகள்...!

நிகழ்காலத்தில்... said...

கயிறு போட்டுக்கலானு படிச்சப்ப மந்திரிச்ச கயிறுன்னு நினைச்சென் கதிர்..அப்புறம் தான் புரிஞ்சுது :(

மனசுல என்னென்ன ஓடிச்சோ...

ராமலக்ஷ்மி said...

ஆயாக்களின் அன்பு ஆலமரத்து நிழலைப் போன்றது. அவர்கள் மறைந்தாலும் அந்த அன்பின் குளுமை குடும்பத்தைக் காத்து நிற்கும்.

vasu balaji said...

அந்த வெள்ளந்தியான சிரிப்பும், பேச்சும் ரொம்ப நாள் பழகின மாதிரி காட்டிய பாசமும் என்றும் மறக்காது.:(

reneshravi said...

feeling full post... i too love my grandmaa very much.

சிவா said...

ganamaana pathivu...

அருணை வினோத் said...

இந்த பதிவை படித்து முடிக்கும் பொழுது கண்களில் நீர் பெருக்கெடுத்து வழிந்ததை என்னால் தடுக்க முடியவில்லை,ஏனென்றால் என்னை வளர்த்த என் பாட்டியின் நினைவுகள் கண்களில் நிழலாடியது.எனக்கும்,என் பாட்டிக்கும் இடையிலான உணர்வுகளை இந்த பதிவு அப்படியே பிரதிபலிக்கிறது,உணர்வுபூர்வமான பதிவு.....நன்றி நண்பர் கதிர் அவர்களே...

ILA (a) இளா said...

ஒரே மாதிரி பதிவு எழுதியிருக்கோம் :( என்னுடையது இன்னும் வெளியிடவில்லை (சோகம் கருதியே)

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - பிறந்த உடனே, நல்ல சிந்தனையில் - கொல்லலாமா என ஆலோசித்த ஆயாவினுடன் இத்தனை ஆண்டுகள் பழகிய பழக்கமும் - நினைவுகளும் நிக்ழ்வுகளும் மனதை விட்டகலாது கதிர் - ஆமா கயிறு போட்டுக்கவான்னா இப்படி ஒரு பொருளும் உண்டா ..... ஆழ்ந்த அனுதாபங்கள் - நட்புடன் சீனா

DHANS said...

இதை படிக்கையில் என் ஆத்தாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை,
நீங்க சொல்லிய எல்லா அறிகுறிகளும் வந்தாச்சு ஆனா இன்னும் பிரகாசம் எல்லாம் வரல. நல்ல பதிவு வேறு வார்த்தைகள் வரவில்லை

கலகலப்ரியா said...

:) வார்த்தைகளுக்கு வேலையில்லாத தருணங்களில் இதுவுமொன்று..

படம் ஓவியம்

ஓலை said...

ஆழ்ந்த வருத்தங்கள் கதிர். நமது வாழ்க்கையில ஒரு முக்கியமான உறவு அது. நமது வாழ்நாள் முழுதும் கூட வரக் கூடியவர்கள், மறைந்தும் நினைவலைகளாக. அதைத் தான் இன்னும் பத்து வருஷம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. :-(

நாகராஜ் said...

கனமான பதிவு ,எங்க அப்பத்தா வை திரும்ப பார்த்தது போல இருந்தது .

நாகராஜ் said...

கனமான பதிவு ,எங்க அப்பத்தா வை திரும்ப பார்த்தது போல இருந்தது .

Mahi_Granny said...

இரண்டுமுறை வாசித்தும் இன்னொரு தரம் வாசிக்க வேண்டும் போல் இருக்கு. ஆயாவாய் இருந்தததும் ஒரு வரம் தான். எல்லா உடல் நோவுகளுக்கிடையேயும் எல்லோரும் நன்றாக இருக்க விரும்புவது தான் ஆயாவின் தனித்துவம்.

தமிழ் மீரான் said...

ஆயாவை அப்படியே கண் முன்னால் நிறுத்தி கசிய வைத்து விட்டீர்கள். வரிகளை வாசிக்க வாசிக்க எனக்குள் என் பெத்தா(ஆயா)வின் நினைவலைகள்...!
நன்றி!

arul said...

thoughts about my grandma comes alive

நாடோடி இலக்கியன் said...

நீங்க இயல்பா சொல்லியிருக்கீங்க. ஆனா மனசு கனத்துப் போச்சு...